
ஹெல்த்
தாம்பத்யம் என்பது ஆரோக்கியமானது; உடலுக்கும் மனதுக்கும் தேவையானது. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, தம்பதிகள் இருவரிடமும் ஒருமித்த கருத்து வேண்டும்; தாம்பத்யம் பற்றிப் பேச வேண்டும்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால், இது பற்றிப் பெரும்பாலானோர் பேசத் தயங்குகிறார்கள். ‘இவையெல்லாம் வெள்ளைக்காரர்கள் கற்றுக்கொடுத்தது. தாம்பத்யம் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசக் கூடாது’ என்கிறார்கள். இது போன்ற எண்ணங்கள் தவறானவை.

தாம்பத்யம் பற்றிப் பேச கூச்சமோ, வெட்கமோ தேவையில்லை. கடவுள் ஆண், பெண் இருவரையும் படைத்தபோதே தாம்பத்யமும் அவசியம் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, இது வாழ்வின் ஓர் அங்கம். அதைத்தான் இந்தத் தொடர் உங்களுக்கு வலியுறுத்தியது. பாலியல், தாம்பத்யம் குறித்த விளக்கங்கள், சந்தேகங்கள் குறித்து விரிவாக உங்களோடு உரையாட நல்வாய்ப்பாக இந்தத் தொடர் அமைந்தது.
தம்பதி இருவரும் இயல்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்குத் தாம்பத்ய உறவு அவசியமாகிறது. பல தம்பதிகள் தாம்பத்யக் குறைபாடுகளோடு வாழ்ந்துவருகிறார்கள். தங்கள் மனக் குமுறலை எங்கும் வெளியிட வாய்ப்பிருப்பதில்லை. உண்மையில், இதற்கு ஒரு வடிகால் தேவை. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடம் ஆலோசனைகள் மேற்கொள்ளும்போதுதான் என்ன பிரச்னை நம்மிடம் இருக்கிறது என்பது தெரியவரும். எனவே, பாலியல் பற்றிய சந்தேகங்களை முதலில் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

தாம்பத்யம் மேற்கொள்வதால் ஆயுள் நீடிக்கும்; எதிர்மறை எண்ணங்கள் அகலும்; மனஅழுத்தம் குறையும். சராசரியாக, ஆரோக்கியமான தாம்பத்யத்துக்கு 200 கிலோ கலோரி சக்தி தேவைப்படுகிறது. தாம்பத்ய உறவை உடற்பயிற்சி என்றும் கூறலாம். மாரடைப்பு போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் தாம்பத்யத்துக்கு உண்டு.
இயல்பாகவே 45 வயதைத் தாண்டும்போது ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகத் தொடங்கும். இதைக் குறைப்பதற்கு தாம்பத்யம் உதவும். தாம்பத்யத்தால் மூட்டுவலி குறைவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, உடலுறவைத் தவறு என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தால்கூட அவரது மனநிலையை மாற்றிவிடும் சக்தி தாம்பத்யத்துக்கு உண்டு. தம்பதிகளுக்கு இடையிலான தொடர்பையும் அன்பையும் அதிகரிக்கச்செய்யும்.

இவையெல்லாம் முறையற்ற உறவுகளுக்குப் பொருந்தாது. கட்டுப்பாடு முக்கியம். வலுக்கட்டாய உறவும் தவறு. அப்படிச் செய்வதால் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் அதிகமாகும். இருவரும் மனம் இணைந்து உறவில் ஈடுபடும்போது பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை. கலவி என்பது புனிதமானது. அது குறித்த தவறான நம்பிக்கைகளைக் கைவிட்டு கட்டுப்பாட்டோடு வாழ்வோம்!
- நிறைந்தது.
- எஸ்.ரவீந்திரன்