வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தாராளமாகவும், தரமாகவும் மருந்து, மாத்திரைகள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்டதே `ஜன் ஔஷதி' திட்டம்.
இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் குறைந்தவிலை மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் `பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY) எனப் பெயர் மாற்றம் செய்தனர். பின்னர் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் `பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா' (PMBJP) எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்த மருந்துக் கடைகளில் விற்கப்படும் மருந்துகள் மிகவும் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் அதிகமான கடைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இதுவரை 5050 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 800 கடைகள் உள்ளன. தமிழகத்தில் 422 இடங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் இந்த மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துப்பொருள்களைச் சேமித்து வைப்பதற்காக மிக பிரமாண்டமான மருந்துக் கிட்டங்கி ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து `பீரோ ஆப் பார்மா பிஎஸ்யு ஆப் இந்தியா'' (Bureau of Pharma PSUs of India) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமார் சிங் கூறும்போது, `தென் மாநிலங்களில் மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக சென்னையில் 72,000 சதுர அடி நிலப்பரப்பில் மிகப்பெரிய மருந்துக் கிட்டங்கி அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிகவும் பெரிய மருந்துக் கிட்டங்கியாகும்' என்றார்.