
கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 03

##~## |
கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்கள் (FIRST TRIMESTER) மிக முக்கியமானவை. கரு உருவாகிக் கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் இது. இந்தக் காலத்தில் ஏற்படும் வாந்தியினால் திடமான உணவைச் சாப்பிடவே பிடிக்காது. சாப்பிட ஆசை இருந்தாலும் வாய் ஒத்துழைக்காது. ஆனால், அதற்காகச் சாப்பிடாமலும் இருக்கக் கூடாது. வாந்தி வரும்போது சாப்பிடாமல், சிறிது நேரம் கழித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சுலபமாகச் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறுகிய இடைவெளியில் பழம், காய்கறி சாலட், சத்து மாவுக் கஞ்சி என்று அடிக்கடி சாப்பிடுகையில், கொஞ்சம் வாந்தி எடுத்தாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மிஞ்சி இருக்கும். முதல் மூன்று மாதங்களில் நோய்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வரவிடாமல் தவிர்ப்பது மிக முக்கியம்.
1. தொற்று நோய்
காற்று, நீர் மூலமாகவே நோய்க்கிருமிகள் அதிக அளவில் பரவும். எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்த வேண்டும். போதிய அளவு நீர்ச்சத்து உடலில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். நோய்க் கிருமித் தொற்று எந்த வகையிலும் நம்மை அணுகாத வகையில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். முக்கியமாக, வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் போதோ அல்லது அதன் மலத்தை சுத்தம் செய்யும் போதோ,

அதிலிருந்து பரவக் கூடிய கிருமியால் குழந்தைக்கு குறைபாடுகள் வர வாய்ப்புண்டு. மற்றும் தடிப்போடு கூடிய காய்ச்சல் வந்தாலும் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்குக் குறைபாடுகள் வரும். இதை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
தாய்மையின் முதல் மூன்று மாதங்களில் இருமல், சளி வராமல் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்கம், மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லக் கூடாது. கூட்டமான இடங்களில் மற்றவர்கள் மூச்சுக்காற்று மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. பொதுவாகக் கர்ப்ப காலத்தில், உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இந்த நிலையில் வெளியில் இருந்து நோய்க்கிருமி தாக்கிவிட்டால், உடனடி பாதிப்புகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனம் தேவை.
2. சிறுநீர்ப் பாதைக் கிருமித் தொற்று (யூரினரி இன்ஃபெக்ஷன்)
சிறுநீர் வருவதுபோல இருந்தால் அடக்கிவைக்கக்கூடாது. பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த நேர்ந்தால், தண்ணீர் நிறைய ஊற்றிவிட்ட பின்னரே பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சிறுநீர்ப்பாதைக் கிருமித்தொற்றைத் தவிர்க்கலாம்.
3. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், பாக்டீரியல் தொற்றுகள்
சுத்தமான இடத்தில் சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். வெளி உணவுகளைச் சாப்பிட நேர்ந்தால், ஃபுட் பாய்ஸன் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
நினைவில்கொள்ள வேண்டியன:
சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறு மருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்ல வேண்டும். மருத்துவர் அதற்கேற்றபடி மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.
நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
இரவு நேரப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்வது நலம்.
முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக்கொள்ளக் கூடாது.
முதல் மூன்று மாதங்களில் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்துவர வேண்டும்.
வாந்தியைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.
தாயின் கவனம் முழுக்கக் கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
அடிவயிற்றில் வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கோ இருந்தால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.
- கரு வளரும்...