கேள்வி பதில்

' மரு’காதீங்க!
டி.சத்தியவாணி, காரைக்குடி
''எனக்கு வயது 45. கண்ணுக்குக் கீழ் ஒரு மரு சிறுவயது முதல் இருக்கிறது. சமீபத்தில் அது வளர்ந்துகொண்டே செல்கிறது. கண் பார்வையை மறைக்கும் அளவுக்குப் பெரிதாகிவிடும்போல இருக்கிறது. அதுபோல முகத்தில் சில மச்சங்கள் தடிப்பாக இருக்கின்றன. இதற்கு என்ன செய்வது?''

டாக்டர் கலையரசி, தோல் நோய் சிகிச்சை நிபுணர், திருநெல்வேலி
''உடலின் பல இடங்களிலும் மரு, மச்சம் போன்றவை வரலாம். இரண்டுமே வளரக்கூடிய தன்மை உடையவை. ஒருவித வைரஸ் மூலம் வரக்கூடிய மருவை 'வார்ட்’ (wart) என்று சொல்வோம். இதிலும் பல வகைகள் இருக்கின்றன. சில வகையான மரு தானாகவே விழுந்துவிடலாம். கண் பார்வையை மறைப்பது, முகத்தின் அழகைக் கெடுப்பது போன்ற காரணங்கள் இருந்தால், அதனை அகற்றிவிடுவது நல்லது. இதற்காக ரேடியோ ஃபிரிகுவன்ஸி (Radiofrequency), எலக்ட்ரோ தெரப்பி (Electrotherapy) போன்ற நிறைய மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இன்னொரு வகையான மரு அல்லது முத்து என்று சொல்லப்படுவதை, மருத்துவ மொழியில் 'டினாக்டின்’(Tinactin) என்று சொல்வோம். இதனையும் அகற்ற முடியும். உங்களுக்கு இருப்பது, மருவா, மச்சமா என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். அதனால், தோல் நோய் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி அதனை அகற்றும் வழிமுறையைச் செய்யுங்கள்.''


என்.ஷோபா, அண்ணாநகர்
'என் மகனுக்கு வயது ஏழு. கால்களில் சிறியதாக அரிப்பு இருந்தது. அவன் அடிக்கடி சொரிந்து அது மேலும் பரவி வருகிறது. டாக்டரிடம் காட்டி கிரீம் மற்றும் மாத்திரை கொடுத்தும் பலனில்லை. முதலில் சரியாகி மீண்டும் அதே இடத்தில் வந்துவிட்டது. சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்கிறதா? என்ன செய்யலாம்?'
டாக்டர் சந்திரசேகர், சித்த மருத்துவர், பண்ருட்டி
''உங்கள் மகனுக்கு வந்திருப்பது சாதரணப் புண்ணாக இருக்கலாம். சிரங்கு அல்லது மயிர்க்கால் உறை நோயாகக் கூட இருக்கலாம். எதையும் பார்க்காமல் அது என்ன நோய் என்று கூறுவது சரியாக இருக்காது. எந்த வகையான சரும நோயாக இருந்தாலும் அதற்கு சித்த வைத்தியத்தில் மருந்துகள் உள்ளன. பரங்கிப்பட்டை சூரண மாத்திரை, சங்கு பற்பம் மாத்திரை, பலகரை பற்பம் மாத்திரை 3 வேளைகளுக்கும், தலா ஒரு மாத்திரை வீதம் உட்கொள்ள வேண்டும். அரிப்பு ஏற்பட்ட இடத்தில் இரவு படுப்பதற்கு முன்பு கரப்பான் தைலம், மத்தன் தைலம் அல்லது புங்கன் தைலம் இவற்றில் எதேனும் ஒன்றை 15 நாட்களுக்குத் தினமும் தடவி வரவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள பச்சைபயறு மாவு, கடலைப் பருப்பு மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை, சீயக்காயுடன் சேர்த்துத் தைலம் தடவிய இடத்தில், வெந்நீரைக் கொண்டு கழுவினால் 15 நாட்களிலிருந்து 30 நாட்களுக்குள் குணமாகும். உங்கள் அருகில் உள்ள சித்த மருத்துவரிடம் காண்பித்துவிட்டு, சிகிச்சை தொடங்குவது சரியாக இருக்கும்''.


சமச்சீர் எடைக்குச் சரியான வழி!
எம்.பிரபா, திருநெல்வேலி
'எனக்கு வயது 22. என்னுடைய பிரச்னை நான் ஒல்லியாக இருந்தும், என்னுடைய தொடை, கால்கள் (இடுப்புக்கு கீழ்) சதை அதிகமாக இருக்கிறது. என்ன செய்து சமச்சீர் எடையைப் பெறலாம்? என்ன பயிற்சி செய்ய வேண்டும்?'

பாரதிராஜா, உடற்பயிற்சி நிபுணர், மதுரை
'ஆண்களுக்கு வயிற்றைச் சுற்றி கொழுப்பு (தொப்பை) படிவதைப் போல, பெண்களுக்கு மார்பு மற்றும் தொடைப்பகுதியில் சதை போடுவது இயற்கையே. நீங்கள் வருத்தப்படுவதைப் பார்த்தால், இந்தப் பிரச்னை உங்களுக்கு அதிகமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. சரியான நேரத்தில் சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தவிர்ப்பது, சீரான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் கடைப்பிடித்தால் இந்த பாதிப்புகளைக் குறைக்கலாம். உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாட்டைக் கைவிடக் கூடாது. தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, முடிந்தால் ஜாகிங், சைக்கிளிங் செல்வது நல்ல பலனைக் கொடுக்கும். மாடிப்படி ஏறுவதும், இரண்டு இரண்டு படியாக ஏறிச் செல்வதும் தொடைச் சதையைக் குறைக்க உதவும். அதேபோல குதிகாலின் பின்பக்கம் தரையில் படியும்படி நன்றாக உட்கார்ந்து உட்கார்ந்து எழுவது (சிட்-அப்ஸ்) பின்பக்கச் சதையைக் குறைக்கும் முக்கிய உடற்பயிற்சி. வாய்ப்பு இருந்தால் ஜிம்களுக்கும் செல்லலாம். இது எதுவுமே உதவவில்லை என்றால், மருத்துவர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. இப்போதெல்லாம் தைராய்டு பிரச்னை காரணமாகவும் இதுபோன்ற உடல்தோற்றம் ஏற்படுகிறது. உடல் தோற்றம் முற்றிலும் மாறிய பிறகு கவலைப்படுவதைவிட, உடல் நலத்திலும், தோற்றத்திலும் எப்போதும் கவனமாக இருப்பது எல்லோருக்கும் நல்லது.'


பெயர்வெளியிட விரும்பாத வாசகி, ஈரோடு.

'எனக்கு 45 வயது. மாதவிலக்கு நின்று ஏழு மாதங்கள் ஆகின்றன. மெனோபாஸ் காலத்துக்கு வந்துவிட்டதாகக் கருதுகிறேன். இதை மருத்துவர்களைச் சென்று சந்தித்து உறுதிப்படுத்த வேண்டுமா? மாதச் சுழற்சி இல்லை என்பதால், இனிமேல் குடும்பக்கட்டுப்பாட்டுச் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாமா?'
டாக்டர் மதுபாலா மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர், திருநெல்வேலி.
'பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். உங்களைப் பொறுத்தவரை கடந்த ஏழு மாதங்களாக மாதவிடாய் வராததால் நின்று போயிருக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால், உங்களுக்குக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதால், நீங்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவை இல்லை. உங்களுக்குத் தொடர்ந்து சந்தேகம் இருக்குமானால், மாதவிடாய் முழுமையாக நின்றுவிட்டதா என்பதை அறிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. உங்களுக்கு மெனோபாஸ் ஸடேஜ் வந்துவிட்டதா என்பதை ஹார்மோன் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.'
