Published:Updated:

அப்படியே சாப்பிடலாம்!

அப்படியே சாப்பிடலாம்!

ன்று பெரும்பாலானோர் விரும்பிச் சாப்பிடும் காய்கறி, பழங்களில் செய்யும் சாலட், உடலுக்கு நல்ல ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும். அலுவலகப் பரபரப்பில் அவசர கதியாய் உணவைச் சமைத்து, அரக்கப்பரக்கச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதைவிட, சமைக்காமலேயே சத்துக்களை உட்கொண்டு, உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்!

சாலடுக்கு பெயர் போன சென்னை ஹோட்டல் சஞ்சீவனம் தரும் 'கிரன்ச் சாலட்’ இங்கே... கூடவே உணவு ஊட்டச் சத்து நிபுணர் காயத்ரி தரும் சத்து டிப்ஸ்.

சமைக்க வேண்டாம்... அப்படியே  சாப்பிடலாம்.

அப்படியே சாப்பிடலாம்!

கிரன்ச் சாலட்

அப்படியே சாப்பிடலாம்!

தேவை: அன்னாசிப்பழம் 50 கிராம், வெள்ளரிக்காய், எலுமிச்சை தலா அரை துண்டு, தக்காளி 1, மிளகுத்தூள், உப்பு தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை சிறிதளவு, கடலைப்பருப்பு  50 கிராம்.

வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசிப்பழம் இவற்றை வெட்டி வைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பைத் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைக்கவும்.  மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பு, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிட்டு, கடைசியில் கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும். சாப்பிடச் சுவையாக இருக்கும். காலையில் சாப்பிடுவது நல்லது.  

அன்னாசிப்பழத்தில் நீர்ச் சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காயிலும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. காயங்களை ஆற்றக்கூடிய தன்மை வைட்டமின் சி க்கு இருப்பதால் சருமத்திற்கும் நல்லது.  கடலைப்பருப்பில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் கை கொடுக்கும்.   செரிமானத்தை மிளகு அதிகரிக்கும்.

- செ.திலீபன்

படம்:  எம்.உசேன்

வலுவூட்டும் வரகு கஞ்சி

சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு,  தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.  வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்ல‌ப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.

அப்படியே சாப்பிடலாம்!

சத்துக்கள் ?

அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.  மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.

புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

எப்படிச் செய்வது?

சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும்.  பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

தொட்டுக்கொள்ள?

கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த‌த்  துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

- ரேவதி

படங்கள் உதவி: சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி

படங்கள்: எம்.உசேன்