'சிக்' ரகசியம் சொல்கிறார் சின்மயிஇரா.சரவணன், படங்கள் : பொன்.காசிராஜன்
##~## |
எடை பார்க்கும் இயந்திரத்தில் எத்தனை முறை பரிசோதிக்கிறாரோ... உடல் எடை 10 கிராம்கூட அதிகரிக்கவோ, குறையவோ கூடாது என்பதில் சின்மயி செம ஸ்ட்ரிக்ட். அதற்காக, டயட் அது இதுவென எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் சின்மயி சிக்கிக்கொள்வது இல்லை. ''இஷ்டப்பட்டதை எல்லாம் சாப்பிடுவேன். பருப்பு சாம்பார், நெய், புளிப்பு, காரம், சாக்லேட்னு மனசு எதை விரும்பினாலும், மறுப்பே கிடையாது. விரும்பியதைச் சாப்பிட்டால்தானே, உடம்பும் மனசும் சந்தோஷமா இருக்கும். நானே என் உடம்புக்கு டீச்சரா மாறி, பிரம்பு எடுக்கிற வேலைகளைப் பண்ண மாட்டேன். மனசும் உடம்பும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்!’- ஜிம்முக்குள் நுழைந்தபடியே சிரிக்கிறார் சின்மயி.

வாக்கிங் தொடங்கி கால்களை வலுப்படுத்தும் ட்ருஸ்டர் பயிற்சி வரை ஒரு மணி நேரம் தீயாகச் சுழல்கிறார். மெல்லிய இளைப்பும் மேலே படர்ந்த வியர்வையுமாக 'சிக்’ ரகசியம் சொல்லத் தொடங்கினார்.
''வெயிட் குறைக்கவோ, கூட்டவோ பயிற்சி பண்றவங்களைப் பார்த்திருப்பீங்க. எனக்கு வெயிட் குறையக் கூடாது; அதே நேரம் உடல் பலமா இருக்கணும்கிற இரட்டைக் குதிரைச் சவாரி மாதிரியான பயிற்சிகள். காரணம், எனக்கு இயல்பிலேயே மெல்லிய உடல்வாகு. அதனால் ஜிம் பயிற்சிகள் மட்டுமே எனக்குப் போதும். தினமும் ஒரு மணி நேரம் ஜிம்முக்கு ஒதுக்கிடுவேன். தியானப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளச் சொல்லி நிறையப் பேர் அட்வைஸ் பண்றாங்க. மனசை ஒருநிலைப்படுத்த தியானம் நல்ல பயிற்சிதான். ஆனால், அதைவிட எனக்குப் பெரிய தியானம், பாடல்தான். பாடும்போது கிடைக்கும் நிம்மதி நூறு தியானத்துக்குச் சமம்!''- வியர்வையைத் துவட்டிய படியே ஆசுவாசமாகும் சின்மயி, உணவுப் பழக்கம், காய்கறி, இயற்கை எனப் பேசப் பேச... நமக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம்!
''உணவு விஷயத்தில் நான் கட்டுப்பாடுகளே வெச்சுக்கிறது கிடையாது. வெஜிடேரியன் என்பதால், எதையுமே கவலைப்படாமல் சாப்பிடுவேன். இப்போ கொஞ்சம் பிஸிஆகிட்டதால், சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாமல் போயிடுது. ஒவ்வொரு நாளைக்கும் லஞ்ச் சாப்பிடும் நேரம் மாறிட்டே இருக்கு. சாப்பிடத் தாமதம் ஆனால், ஒரு டம்ளர் பால் குடிப்பேன். சாப்பாட்டில் தினமும் ஒரு கீரை நிச்சயம். காய்கறிகளைத் தவிர்க்க மாட்டேன். சீஸனுக்கு ஏற்ற காய்கறிகளைத் தேர்வு செய்து சாப்பிட்டால், ரொம்ப நல்லது. க்ளைமேட்டுக்கு ஏற்ற மாதிரியான காய்கறிகள்தான் நம்ம உடம்புக்கு சரிப்படும். ஏன்னா... எந்த நேரத்தில், எந்த உணவுகள் தேவைங்கிறதை இயற்கையே நமக்குத் தேர்வு பண்ணித்தான் வழங்குது. இயற்கையோட வரத்தை சரியாப் பயன்படுத்தினாலே போதும். உழவர் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை வாங்குவது ரொம்ப நல்லது. மண் மணம் மாறாமல், முழுச் சத்துக்களோடு அவை இருக்கும். பெரிய பெரிய கடைகளில் வாரக் கணக்கில் காய்கறிகளை வாங்கி வெச்சு ப்ரெஷ்ஷாக்கிக் கொடுக்

கிறாங்க. அதைவிட, உழவர் சந்தைக் காய்கறிகள் குறைஞ்ச விலைக்குக் கிடைக்குது. அதோட, விஷத்தன்மை இல்லாத சத்துக்களும் கிடைக்குது.
இப்போ சென்னையில் உள்ள பல வீடுகளில் அவங்களே காய்கறித் தோட்டம் போடுறாங்க. விவசாய மண்ணை எல்லாம் புதைச்சு நாம வீடு கட்டிட்டோம் கிற கவலையோ என்னவோ... மாடிகளிலும், வீட்டுக்குப் பக்கத் திலும் காய்கறி பயிர் பண்றாங்க. இது ரொம்பவே வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான் என்னதான் பயிற்சிகள் பண்ணி னாலும் என்னோட உடம்பு சரியான அளவில் இருக்கிற துக்குக் காரணம், நிச்சயமா நல்ல உணவுகள்தான்.
சுத்தமான காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் உடம்பை மிகச் சரியா வெச்சுக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க... குரல் வளத்தைக் காப்பாத்த, உணவு முறைகளில் ரொம்ப உஷாரா இருக்கணும்னு சொல்வாங்க. நான் அந்த மாதிரி எதற்குமே பயந்தது இல்லை. எங்க வீட்டுச் சாப்பாட்டு மேல் உள்ள நம்பிக்கைதான் அது! வீட்டு வேலைகள் பார்த்தாலே, குடும்பப் பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் வராதுன்னு சிலர் சொல்றாங்க. என்னதான் வீட்டு வேலைகள் பார்த்தாலும், ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது வாக்கிங் போவது நல்லது!''- அக்கறை பகரும் சின்மயிக்கு மிக நெருக்கமான நண்பர் கடவுளாம்.
''நிறைய புக்ஸ் படிப்பேன். விருப்பமான சினிமாக்கள் பார்ப்பேன். எப்போதாவது மனசு சங்கடப்படும்போது, என்னோட நண்பன் கடவுள்கிட்ட உரிமையோடு கோபப்படுவேன். 'நான் ஒருத்தி இங்கே படாதபாடு படுறேன்... நீ பாட்டுக்கு ஹாயா திரியிறியேடா’ன்னு கடவுளையே 'டா’ போட்டு ஆதங்கத்தைக் கொட்டுவேன். நான் இதைச் சொல்றப்ப, சிரிப்பாதான் இருக் கும். ஆனால், உண்மையாகவே கடவுளை நம்ம நண்பனா நினைச்சுப் பாருங்க... ஒரு தடவை அவன்கிட்ட சண்டை போடுங்க... அப்புறம் அடிக்கடி அவனோட சட்டையைப் பிடிக்கத் தோணும்!'' - புது ரூட் சொல்லும் சின்மயியிடம், 'அழகின் ரகசியம்’ கேட்டேன்.

''நிச்சயமா எங்க வீட்டு சத்தான சாப்பாடுதான்! முக அழகுக்காக க்ரீம், பாலாடைன்னு எதுவுமே நான் பயன்படுத்துவது கிடையாது. மாசத்துக்கு இரண்டு தடவை முகத்தை சுலக்ஷனா மேடம்கிட்ட மென்மையா ப்ளீச் பண்ணிக்குவேன். அவ்வளவுதான்!'' - 'க்ளுக்’கிறது கிளிமாஞ்சாரோ கிளி!