Published:Updated:

அறப்பணி தொடர்வோம்!

அறப்பணி தொடர்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அறப்பணி தொடர்வோம்!

தவித்து நிற்கும் மக்களுக்கு எப்போதும் முன்வந்து உதவும் விகடன் வாசகர்கள்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நோய்ப்பரவல் ஒருபுறம் என்றால் அதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பாதிப்புகள் மறுபக்கம் அச்சுறுத்துகிறது. ஒவ்வொரு நாளையும் வறுமையோடு எதிர்கொள்ளும் தினக்கூலிகள் கொரானா காலகட்டத்தில் வாழ்விழந்து பட்டினியால் வாடுகின்றனர். இப்படி வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் மக்களுக்கு எண்ணற்ற தன்னார்வலர்கள் கைகொடுத்துவருகிறார்கள். அவர்களோடு விகடனும் தொடர்ந்து வாசகர்கள் பங்களிப்போடு உதவிகள் செய்துவருகிறது.
அறப்பணி தொடர்வோம்!

கொரோனா பேரிடரில் தவிக்கும் மக்களுக்குக் கரம் கொடுத்து உதவும் நோக்கில் ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. தவித்து நிற்கும் மக்களுக்கு எப்போதும் முன்வந்து உதவும் விகடன் வாசகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கிவர, வாசகர்கள் கரம்பற்றி மக்களுக்கு உதவக் களத்தில் இறங்கிய விகடனின் களப்பணி நான்காவது கட்ட ஊரடங்கிலும் தொடர்கிறது.

அறப்பணி தொடர்வோம்!
அறப்பணி தொடர்வோம்!

நம்முடைய முதல் முன்னெடுப்பாகத் திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த 65 நாடோடிக் குடும்பங்களுக்கு ரூ. 1.2 லட்சம் செலவில் 2 மாதத்துக்குக் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. அடுத்த கட்டமாக, சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு மற்றும் கரிமேடு பகுதியில் உணவுக்குக்கூட வழியில்லாமல் பரிதவித்து வந்த 110 ஆந்திர மாநில கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, எண்ணெய், கோதுமைமாவு, சர்க்கரை உட்பட 1,77,210 ரூபாய் மதிப்பில் இரண்டு மாதத்துக்குத் தேவையான மளிகைப்பொருள்களை வழங்கினோம். சென்னையை அடுத்த குன்றத்தூர்ப் பகுதியில் ஊரடங்கால் வருமானமின்றித் தவித்து வந்த 10 நாடோடிக் குடும்பங்களுக்கு 15,000 ரூபாய் செலவில் அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினோம். சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள இரண்டு காப்பகங்களுக்கு பொருளுதவி புரிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் வர, அந்த இரண்டு காப்பகங்களுக்கும் 12,137 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வாங்கி அவற்றைத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம்.

அடுத்ததாக, சென்னை அம்பத்தூரை அடுத்த முகப்பேர், ரெட்டிபாளையம் பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கிப் பரிதவிப்பது தெரியவந்தது. ரெட்டிபாளையம் பகுதியில் கடந்த 30 வருடங்களாக வசித்துவரும் இந்த நேபாள மக்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கூலிவேலைகளுக்குச் சென்று தங்கள் வாழ்க்கையை நகர்த்திவருகின்றனர். சென்னையின் தெருக்களில் இரவு நேரங்களில் கூர்க்கா பணியிலும், தொழில்நிறுவனங்களில் காவலாளிகளாகவும் பணிபுரியும் இந்த நேபாள மக்களின் வாழ்க்கைநிலை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஊரடங்கு இவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.

அறப்பணி தொடர்வோம்!

இப்படி மிகுந்த நெருக்கடியில் இருந்த 24 நேபாளிகள் குடும்பங்களுக்கு 38,664 ரூபாய் செலவில் இரண்டு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மளிகைப்பொருள்களை விகடன் குழுவினர் முறையாகச் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழங்கினோம். நம்முடைய உதவியில் நெகிழ்ந்து போன மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் இவர்களைப் போன்றவர்களைக் கண்டறிந்து உதவும் விகடனின் இந்த அறப்பணி தொடரும்.

வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - #HelpFightCOVID19

பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.

நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

அறப்பணி தொடர்வோம்!

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.

நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.