
தவித்து நிற்கும் மக்களுக்கு எப்போதும் முன்வந்து உதவும் விகடன் வாசகர்கள்.
மழைவெள்ளம், புயல்போன்ற இயற்கைப் பேரிடர்கள் மக்களின் இயல்பு வாழ்வைச் சீர்குலைத்தபோதெல்லாம் விகடன் தன் வாசகர்களோடு கரம்கோத்து பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்திருக்கிறது. தற்போது உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிப் போராடி வருகிறது. நோயோடு சேர்த்து எளிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக நிற்கிறது.
ஊரடங்கால் நாடோடிகள், பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்ட சாமானிய மக்களுக்கு வாசகர்களின் ஆதரவுடன் களத்தில் இறங்கி உதவி செய்துவருகிறது விகடன். பெரும்பாலான நாடோடிகள், பழங்குடிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் கிடையாது. அதனால் இந்தப் பேரிடர் காலத்தில் அரசு அறிவிக்கும் திட்டங்களும் உதவிகளும் அவர்களில் பெரும்பாலானோருக்குச் சென்றடைவதில்லை. அவர்களில் பலரும் அன்றாட உணவுக்கே அல்லல்படுகிறார்கள். அவர்களைக் கண்டடைந்து களத்திற்கு விரைந்தது விகடன்.

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த 65 நாடோடிக் குடும்பங்களுக்கு ரூ. 1.2 லட்சம் செலவில் இரண்டு மாதத்துக்குக் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. அடுத்த கட்டமாக, சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு மற்றும் கரிமேடு பகுதியில் உணவுக்குக்கூட வழியில்லாமல் பரிதவித்து வந்த 110 ஆந்திர மாநில கூலித்தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமைமாவு, சர்க்கரை உட்பட 1,77,210 ரூபாய் மதிப்பில் இரண்டு மாதத்துக்குத் தேவையான மளிகைப்பொருள்களை வழங்கினோம். சென்னையை அடுத்த குன்றத்தூர்ப் பகுதியில் ஊரடங்கால் வருமானமின்றித் தவித்துவந்த 10 நாடோடிக் குடும்பங்களுக்கு 15,000 ரூபாய் செலவில் அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினோம். சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள இரண்டு காப்பகங்களுக்குப் பொருளுதவி புரிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் வர, அந்த இரண்டு காப்பகங்களுக்கும் 12,137 ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருள்கள் வழங்கப்பட்டன.
சென்னை அம்பத்தூரை அடுத்த நொளம்பூர்ப் பகுதி மசூதி அருகில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த 20 வருடகாலமாக வசித்துவருகின்றனர். நேபாளம் மற்றும் ஆந்திராவிலிருந்து வந்து தங்கியிருக்கும் அவர்கள் சென்னையின் நகர்ப்புறங்களில் கூலிக்குக் கட்டட வேலைகள் செய்துவந்தவர்கள்.

130 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் வேலைக்குச் சென்றால்தான் வருமானம் என்ற நிலையில், தற்போது அந்த மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதே சிரமம். குழந்தைகளுடன் பசியால் வாடிய 130 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு வாசகர்களின் துணையோடு விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை 1,95,000 ரூபாய் செலவில் இரண்டு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருள்களை அவர்களுக்கு வழங்கியது.
ஊரடங்கின் முதலாம் கட்டத்தில் தொடங்கிய விகடனின் இந்த அறப்பணி தற்போது நான்காம் கட்டத்திலும் வாசகர்களின் துணையோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை அடையாளம் கண்டு உதவும் விகடனின் இந்தப் பணி மேலும் தொடரும். விகடனுடன் இணைந்து வாசகர்களாகிய நீங்களும் எளியவர்களுக்கு உதவ வகை செய்யப்பட்டுள்ளது. கரம் சேர்ப்போம்; துயர் துடைப்போம்.
வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - #HelpFightCOVID19
பேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.
நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.