ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

 ஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்

ஹெல்த்

எனக்கு 42 வயது. பார்வை சிறிது மங்கலாகத் தெரிந்ததால், கண் பரிசோதனை செய்து பார்த்தேன். ‘பவர்-0.5’ என்று சொன்னார்கள். இதற்கு அவசியம் கண்ணாடி அணிய வேண்டுமா... வாழ்வியல் மாற்றங்கள் உதவாதா?

- நிம்மி, ஈரோடு

கன்சல்ட்டிங் ரூம்

- நவீன், கண் மருத்துவர்

“முறையான மருத்துவப் பரிந்துரைப்படி, பார்வை அளவுகோலில் ‘-0.5’ அல்லது அதற்கு அதிகமான அளவு இருந்தால், எல்லா நேரமும் கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து கண்ணாடி உபயோகிக்கும் சூழல் மாறுபடலாம். உதாரணமாக, மிக அருகிலிருக்கும் பொருள்கள், எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லையென்றால் கண்ணாடி உபயோகத்தைத் தவிர்க்கக் கூடாது. ‘புத்தகம் வாசிக்கும்போது மட்டும் சிரமம் இருக்கிறது’ அல்லது ‘டிஜிட்டல் திரைகளின் எழுத்துகளைப் பார்க்கும்போது மட்டும் சிரமம் இருக்கிறது’ என்றால், அப்போது மட்டும் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். ‘குறிப்பிட்ட சூழலில் மட்டும் கண்ணாடி அணிந்துகொண்டால் போதும்’ என அறிவுறுத்தப்படும் பலரும் குறுகிய காலத்திலேயே, ‘கண்ணாடி நமக்குத் தேவையில்லை’ என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் அவசியப்படும் நேரத்திலும்கூட கண்ணாடியைத் தவிர்க்கிறார்கள். இந்தப் பழக்கம் நீடிக்கும்போது பார்வைத்திறனில் பிரச்னை அதிகரித்துவிடும்.

பயன்தரும் வாழ்வியல் மாற்றங்கள்:

கிட்டப்பார்வை பிரச்னை இருக்கும் பலர் பொருள்களை மிக அருகில்வைத்துப் பார்க்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். டிஜிட்டல் திரைகளை அதிகமாக உபயோகிப்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே, இந்தப் பிரச்னை உள்ளவர்கள், தினமும் ஒரு மணி நேரம் கட்டாயம் இயற்கை வெளியில் நேரம் செலவழிக்க வேண்டும். இயற்கையான இடத்தில், தொலைவிலுள்ள பொருள்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது கண்கள் புத்துணர்ச்சியடைந்து சிரமங்கள் ஏற்படாமல் இருக்கும்.’’

என்னுடைய இரண்டு காதுகளுக்குப் பின்புறத்திலும் சில நாள்களாகச் சிறிய அளவில் தேமல்போல ஏற்பட்டிருக்கிறது. உடலில் வேறெங்கும் இல்லை. இதற்கு என்ன காரணம்... தீர்வு உண்டா?

- தங்கப்பாண்டி, விருதுநகர்

கன்சல்ட்டிங் ரூம்

- ஷரதா, சரும மருத்துவர்

“நம் உடலிலுள்ள ஆன்டிபாடிகள் சில ஒன்றோடொன்று இணைந்து மூட்டுகளிலோ, சருமத்திலோ பாதிப்பை ஏற்படுத்தும். இது, `இணைப்புத் திசு பாதிப்பு’ (Connective Tissue Disease) என அழைக்கப்படுகிறது. உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இந்த பாதிப்பாகக்கூட இருக்கலாம். ரத்தப் பரிசோதனை, சில சருமப் பரிசோதனைகள் மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். இது வெண்புள்ளியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. வெண்புள்ளியாக இருந்தால் பார்த்தவுடன் தெரிந்துவிடும். சிவப்பாக, செதில் செதிலாக இருந்தால் ‘செபோரிக் டெர்மடைட்டிஸ்’ (Seborrheic Dermatitis) அல்லது சோரியாசிஸாக இருக்கக்கூடும். இவை மூன்றும் இல்லாதபட்சத்தில் வெறும் தேமலாக இருக்கலாம். அப்படியெனில், சரும மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுச் சரிசெய்துவிடலாம். இது போன்ற பிரச்னைகளுக்கு வீட்டு மருத்துவத்தைத் தவிர்த்துவிட்டு, சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.’’

எனக்கு 38 வயது. காலையில் மட்டுமல்ல, எந்த நேரம் பல்லை விரலால் தேய்த்தாலும் ரத்தம் வருகிறது. சில நேரங்களில் முகம் கழுவும்போதும், வாய் கொப்புளிக்கும்போதும்கூட ரத்தம் வருகிறது. இதற்கு என்ன காரணம்... எளிய தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.

- பிரகாஷ், கருங்கல்

கன்சல்ட்டிங் ரூம்

- ஞானம் செந்தில்குமரன், பல் மருத்துவர்

“பற்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யாவிட்டால், ஈறுகளில் அழற்சி ஏற்பட்டு வலுவிழக்கத் தொடங்கும். இதனால் பல் துலக்கும்போது, சாப்பிடும்போது, விரலால் தேய்க்கும்போது எனப் பற்களுக்கு சிறு அசைவு கொடுத்தாலும் ரத்தம் வரத் தொடங்கிவிடும். இப்படிப்பட்டவர்கள் முறையாக பற்களைச் சுத்தப்படுத்துவதுதான் பிரச்னைக்கான தீர்வு. பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதிகபட்சம், வருடத்துக்கு ஒரு முறையாவது பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பற்களைச் சுத்தம் செய்த பிறகும் பிரச்னை சரியாகவில்லையென்றால், எக்ஸ்ரே எடுத்து எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் பற்களின் வேர்களைச் சுத்தப்படுத்தும் ‘ரூட் பிளானிங்’ (Root Planing) சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.’’

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:

கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.