இலங்கையில் உள்ள மருத்துவமனைகளின் மருந்தகங்களில் மாஸ்க் எனப்படும் முகக்கவசங்களுக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முகக்கவசங்களையும் அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள்களையும் சீனாவிலிருந்து இலங்கை இறக்குமதி செய்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதால் இலங்கையில் முகக்கவசங்களின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் முகக்கவசங்களுக்கான மூலப்பொருள்கள் தயாரிக்கும் பெரும் நிறுவனங்கள் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளன. இதே மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது.
முகக்கவசங்கள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருள்களின் இறக்குமதி குறைந்துள்ளதால் இலங்கையிலும் முகக்கவசங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்தியுள்ளன. இலங்கையில் இயங்கும் முகமூடி தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தியும் அந்நாட்டின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்கத் தள்ளப்பட்டுள்ளன இலங்கை அரசு மருந்து நிறுவனங்கள். மேலும், மற்ற நாடுகளிலிருந்தும் இலங்கை முகக்கவசங்களை இறக்குமதி செய்கிறது.

கடந்த காலத்தில் முகக்கவசங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது இலங்கை. ஆனால், இந்தியாவிலிருந்த முக்கிய நிறுவனம் அதன் ஏற்றுமதியை நிறுத்தியதால் இலங்கை பெரும் பற்றாக்குறையைச் சந்தித்திருப்பதாக அந்நாட்டின் அரசு மருந்து நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கையின் நிலை இவ்வாறு இருக்க சீனா முகக்கவசங்களின் உற்பத்தியை ஒரே மாதத்தில் பன்னிரண்டு முறை அதிகரித்துள்ளது. அங்கே பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு முன்பு உலகின் முகக்கவச உற்பத்தியில் பாதியை சீனா செய்து வந்தது. கொரோனாவிற்குப் பின்பு தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் உற்பத்தியை விரிவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது அந்நாட்டு அரசு. மற்ற பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து முகக்கவசங்களைத் தயாரிக்க ஏற்றதாக மாற்றி உற்பத்தி செய்து வருகின்றன.