இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், தற்போது பெருந்தொற்றின் பரவல் கணிசமாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் வசதிக்காக, `கோவின்' என்ற இணையதளப் பக்கத்தை உருவாக்கியது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். இந்தத் தளத்தில், தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புபவர்கள், இந்த கோவிட் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் என அரசினால் வலியுறுத்தப்படுகிறது. இந்தத் தளத்தில் பதிவு செய்ய இயலாதவர்களின் வசதிக்காக, தடுப்பூசி மையங்களிலும் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
`40 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், கோவின் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்த பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்கின்றனர். 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நேரடியாகத் தடுப்பூசி மையத்துக்கே சென்று பதிவு செய்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில் ஒரு நாளில் ஆயிரம் முறைக்கு மேல் தகவல்களைத் தேடும் பயனாளரின் கணக்கு, அடுத்த 24 மணிநேரத்துக்கு முடக்கப்படும். இதேபோல, செல்போன் எண் மூலம் கோவின் தளத்தில் பதிவு செய்த ஒருவர், தடுப்பூசி போடப்படும் இடம், தடுப்பூசி கையிருப்பு அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் ஒரு நாளில் ஆயிரம் முறைக்கு மேல் தேடினாலும், 50 முறை ஓ.டி.பி எண்ணைப் பெற்றாலும், சம்பந்தப்பட்ட நபரால் அடுத்த 24 மணிநேரத்துக்கு கோவின் இணையதளப் பக்கத்தைப் பயன்படுத்த முடியாது. பயனாளர் ஒருவர், 15 நிமிட இடைவெளியில் 20 முறை தடுப்பூசி விவரங்களைத் தேடினாலும் அவரது இணையதளப் பக்கம் தானாகவே லாக்அவுட் ஆகிவிடும்.
இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ள கோவின் இணையதள நிர்வாகம், ``கோவின் இணையதளத்தில் கணக்கு முடக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். கோவின் தளத்தில் தொடர்ந்து அதிக முறை தகவல்களைத் தேடிய வகையில், கடந்த சில தினங்களில் மட்டும் நாடு முழுக்க 6,000-க்கும் மேற்பட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம்.

இதுபோன்று தேவைக்கு அதிகமாகவோ, அதிக முறையோ இந்தத் தளத்தில் தொடர்ந்து தகவல்களைத் தேடுவோரின் கணக்குகள் நிரந்தரமாகவும் முடக்கப்பட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதுபோன்ற செயல்பாடுகள், பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் தேவையற்ற சந்தேகங்களை உண்டாக்குகின்றன. எனவேதான், இதுபோன்ற புதிய நடைமுறைகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்று விளக்கம் அளித்துள்ளனர்.