
`தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்’ என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதாவது, அவரவர் உடலுக்குத் தகுந்தது போல, உடல் உழைப்பைச் செய்யுங்கள் என்பதுதான் இதன் சாராம்சம். குழந்தைகளை அவர்கள் போக்கில் விளையாடவிட்டாலே, அவர்களுக்குத் தேவையான உடல் உழைப்பு கிடைத்துவிடும். படிப்பில் கவனம் குவிக்கவும், எதிர்ப்பு சக்தி பெருகவும் சில எளிமையான ஆசனங்கள் இங்கே...
• யோகாவுக்குத் தயாராகும் முன் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.
வீரபத்ராசனம் (Virabhadrasana)
நேராக நிற்க வேண்டும். வலது காலை முன்வைத்து, இரண்டு அடி தூரத்தில் இடது காலைப் பின்வைக்க வேண்டும். மூச்சை இழுத்துக்கொண்டே கைகள் இரண்டையும் பக்கவாட்டில் மேலே உயர்த்தி, வணக்கம் சொல்வதுபோல கைகூப்ப வேண்டும். மெதுவாக, கழுத்தை மேலே உயர்த்தி, கையைப் பார்க்க வேண்டும். பிறகு, மூச்சை வெளிவிட்டபடி, இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் இடது காலை முன்வைத்தும் பயிற்சி செய்ய வேண்டும். முறையே, மூன்று முறை இந்தப் பயிற்சியைச் செய்வது நல்லது.
கவனிக்க: எலும்பு அடர்த்தி குறைதல், வலிப்பு நோய், மூட்டுப் பிரச்னை இருப்பவர்கள் இந்தப் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்:
• புஜம், கால்கள், அடிமுதுகு வலிமையாகும்.
• உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு, இந்தப் பயிற்சி மிகவும் நல்லது. தேவையான உடல் அசைவுகள் இந்தப் பயிற்சியால் நடைபெறும்.
• கவனத்திறன் அதிகரிக்கும். மாணவர்கள் அவசியம் செய்ய வேண்டிய பயிற்சி இது.
• உடல் வலு சமநிலை பெறும்.
• நினைவுத்திறன் அதிகரிக்கும்.
• முதுகுவலி சரியாகும். தண்டுவடம் பலம் பெறும்.
• தோள்பட்டை வலி, அழுத்தம் சரியாகும்.
திரிகோணாசனம் (Trikonasana)
இரு கால்களையும் முடிந்த அளவுக்கு முன்னும் பின்னுமாகப் பரப்பிவைத்து நிற்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கைகளைப் பக்கவாட்டில் தோள் உயரத்துக்குத் தூக்க வேண்டும். இப்போது, மூச்சை விட்டபடி மேல் உடலை வலதுபுறம் திருப்பி, வளைந்து வலது காலைத் தொட வேண்டும். கழுத்தை மெதுவாகத் திருப்பி, மேலே இருக்கும் இடது கையை 10 விநாடிகள் பார்க்க வேண்டும். பின்னர், முச்சை இழுத்தபடியே எழுந்து நின்று, மூச்சை விட்டபடியே கைகளை கீழே இறக்கி பழைய நிலைக்கு வர வேண்டும். இதே போல இன்னொரு பக்கமும் செய்ய வேண்டும். இரு பக்கமும் தலா மூன்று முறை செய்ய வேண்டும்.
கவனிக்க: உயர் ரத்த அழுத்தம், மூட்டுப் பிரச்னை இருப்பவர்கள், காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல் இருப்பவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள் இந்தப் பயிற்சியைத் தவிர்க்கலாம்.

பலன்கள்:
• தொடைத் தசைகள் வலுப்பெறும்.
• உடல்பருமனாக இருப்பவர்கள் செய்ய, கொழுப்பு கரையும். முதுகு வலி சரியாகும்.
• வளரும் பிள்ளைகள் செய்ய, உயரம் அதிகரிக்கும்.
• செரிமான செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
• உடலின் ஸ்டாமினா பவர் அதிகரிக்கும்.
vகழுத்து, மார்பகம், தோள்பட்டை வலிமையடையும்.
- ஆரோக்கியக் கலை அறிவோம்
- ப்ரீத்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ், மாடல்: சந்தியா
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை