கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் சத்துகளும், வைட்டமின் பி, ஈ, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. கலோரி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. மற்ற தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும். எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு உதவும்.

பலன்கள்: பஜ்ஜி சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள், மலச்சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. தாமரைத்தண்டில் இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால், இது மலச்சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு, `ஷாலோ ஃப்ரை’ (Shallow Fry) எனப்படும் குறைந்த அளவு எண்ணெயில் பொரித்துக் கொடுக்கலாம். அதிகபட்சம், இரண்டு முதல் மூன்று டீஸ்பூன்வரை எண்ணெய் பயன்படுத்தலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழைத்தண்டு கூட்டு செய்வதுபோல, தாமரைத்தண்டையும் கூட்டு செய்து சாப்பிடலாம். ஆனால், துவர்ப்புச் சுவை காரணமாகப் பலர் இதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்காகத்தான் இந்த ரெசிபி. பஜ்ஜி வடிவில் உட்கொண்டாலும், தாமரைத்தண்டிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்தில் எந்தக் குறையும் இருக்காது. தாமரைத் தண்டை மெலிதாகச் சீவி, பஜ்ஜி செய்து பரிமாறினால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். உடலின் ரத்த ஓட்டத்தை இது சீராக்கும். ரத்தச்சோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இரு முறை தாமரைத்தண்டு சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து தேவைப்படும். அவர்களுக்கு தாமரைத்தண்டை உலரவைத்து வற்றல் செய்து கொடுப்பது வழக்கம்.

தேவையானவை:
தாமரைத்தண்டு : ஒன்று (ஃப்ரெஷ்)
கடலை மாவு : 50 கிராம்
அரிசி மாவு : 50 கிராம்
மைதா : ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
பெருங்காயத்தூள் : சிறிதளவு
எண்ணெய் : 50 கிராம்
மஞ்சள்தூள் : சிறிது
செய்முறை: முதலில் தாமரைத்தண்டை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைக்கவும். இப்படிச் செய்வதால் தண்டிலுள்ள துவர்ப்புத் தன்மை நீங்கிவிடும். அரிசி மாவு, மைதா, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிறகு மாவுக் கலவையை தாமரைத்தண்டில் முக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், பஜ்ஜி தயார்.
ஜெ.நிவேதா - படங்கள்: வள்ளிசெளத்ரி