மத்தியப்பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், தன் சகோதரனுடனான சண்டையில் செல்போனை விழுங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தத் தகவலை அறிந்த அவரின் குடும்பத்தார், உடனே அந்தப் பெண்ணை குவாலியரிலுள்ள ஜெய ஆரோக்யா மருத்துவமனைக்கு (ஜேஏஎச்) கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான், செல்போனை வெளியே எடுக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டனர்.

மேலும், அறுவை சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனைக்கு பெண்ணைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கையும் வேகமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்துப் பேசிய மருத்துவர்குழு, "பெண்ணுக்குக் கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி ஏற்பட்டதால், அவரின் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
அல்ட்ராசவுண்ட், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட முழுமையான பரிசோதனையை மேற்கொண்ட பிறகு, எண்டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி போன்ற குறைவான ஊடுருவும் முறைகள் மூலம் செல்போனை அகற்ற முடியாது என உறுதியான பிறகே அறுவை சிகிச்சை வேண்டும் என மருத்துவக்குழு தீர்மானித்தது.

டாக்டர் பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா, துறைத் தலைவர், டாக்டர் பிரசாந்த் பிபாரியா, பிரிவு பொறுப்பாளர், இணைப் பேராசிரியர் டாக்டர் நவீன் குஷ்வாஹா தலைமையிலான திறமையான மருத்துவர்கள்குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு செல்போன் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. தற்போது பெண்ணின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று தெரிவித்திருக்கிறது.