
குடும்பம்

கடந்த சில ஆண்டுகளாக, இரவு நீண்ட நேரம் கழித்து தூங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பின் இரவில் தூங்கி, பின் காலையில் எழுவது நல்லது அல்ல. ஒரு நாள் ஆரோக்கியமான தூக்கம் தடைபடும்போது, உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பார்ப்போம்.
உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, உடல் பலவீனம் அடையும்.
ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. மெலட்டோனின் என்கிற ஹார்மோன் சீராக சுரக்காததால், காலையில் எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கும். அன்றைய தினத்தை புத்துணர்ச்சியோடு தொடங்க முடியாது.

நன்றாகத் தூங்கவில்லை எனில், மறுநாள் காலை உணவைச் சாப்பிடும் உணர்வு தோன்றாது. காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும்.
காலையில் நீண்ட நேரம் தூங்கி, அவசர அவசரமாக கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்வதால், உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்காது. இதனால், தசைகள் வலுவிழக்கும்; உடல்பருமன் ஏற்படும்.
காலைக்கடன் தாமதமாவதால், உடலில் நச்சுக்கள் தேங்கி, உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
முறையற்ற தூக்கத்தால் மூளையில் இருக்கும் திசுக்கள் சோர்வடையும். இதனால், கவனமின்மை, மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
- பு.விவேக் ஆனந்த்