
பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

வியர்க்குரு, அதீத வியர்வை போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் தொடங்கி... அம்மை, சீழ்கட்டி, சிறுநீர் கடுப்பு பிரச்னைகள் வரை வெயில்கால நோய்கள் கண் முன்னே மிரட்டுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இவை வருமுன்னரே காக்க என்ன செய்ய வேண்டும்..? சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் டாக்டர் அன்புமணி.
நோய்கள் எதனால் வருகின்றன என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கும் வழிகளும் தெரிந்ததாகிவிடும். அந்த வகையில் கோடை நோய்களை அணுகுவோம் இங்கு.
அம்மை

சிறியவர்கள், வயதானவர்கள் என வெயில் காலங்களில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களைத்தான் அம்மை நோய் அதிகம் தாக்குகிறது. சத்துள்ள உணவு வகைகளை உண்டு நோய் எதிர்ப்புத் திறனை கூட்டுவதோடு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் அம்மையில் இருந்து தப்பலாம். காபி, டீ போன்றவை உடலை டீஹைட்ரேட் செய்யும் என்பதால், கோடையில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வெப்பக் கட்டிகள்

கோடையில் ‘ஹாட் பாயில்ஸ்’ என்று சொல்லக்கூடிய வெப்பக் கட்டிகள் உடலில் உண்டாகலாம். சிறிய கொப்புளங்கள் போன்று தோன்றும் இவை வராமல் தடுக்க, எண்ணெய்ப் பலகாரங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டாம். எப்போதும் வெந்நீரில் குளிப்பவர்களும், கோடையில் குளிர்ந்த நீரில், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு வேளை குளிக்கவும்.
வியர்க்குரு

வியர்க்குரு, கோடையில் அனைவரையும் தாக்கும் பிரச்னை. தினமும் இரண்டு வேளை குளித்து, வெயிலில் சென்று வீட்டுக்குத் திரும்பியவுடன் கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவுவது வியர்க்குருவை தவிர்க்க உதவும். வியர்க்குருவை சொறிந்தால் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
தோல் அரிப்பு மற்றும் வெயில் ஒவ்வாமை

வெயிலில் அலையும் பலருக்கு தோலில் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்கு ‘சன் பர்ன்’ என்று சொல்லக்கூடிய வெயில்கால வெடிப்பும் ஏற்படலாம். இப்பிரச்னை அதிகம் உள்ளவர்கள் தளர்வான காட்டன் ஆடைகள் அணிவது முக்கியம்.
சீழ் கட்டிகள்

நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களையும், சுகாதாரமான பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களையும் தாக்கும் சீழ் கட்டிகள், சருமத்தில் கிருமித்தொற்று ஏற்படுவதாலும் உடற்சூட்டாலும் உண்டாகின்றன. முதுகு, கழுத்து, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளை அதிகம் தாக்கும் இக்கட்டிகள் வீங்கிக்கொண்டு வலி கொடுத்தால், மேலும் தொற்று ஏற்படுவதற்குள் மருத்துவரை நாடவும். கட்டியை உடைத்துவிடுதல் கூடாது.
சிறுநீர் கடுப்பு

கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவில்லை எனில் சிறுநீர் அடர்த்தியாக, மஞ்சள் நிறத்தில் பிரிவதோடு வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். இந்த நீர்க்கடுப்பு பெண்களையே அதிகம் தாக்கும். உடலின் நீர்ச்சத்து கோடையில் வியர்வையாக வெளியேறும் என்பதால், வெயில் நாட்களில் தேவையைவிட சற்று அதிகமாகவே தண்ணீர் அருந்தவும். நீர்க்கடுப்போடு அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடவும்.
ஹீட் ஸ்ட்ரோக்

அதிக நேரம் வெளியே அலையும்போது திடீரென மயக்கம், தலைவலி, படபடப்பு மற்றும் நிதானமின்மை ஏற்பட்டு சீரியஸான நிலைமைக்குத் தள்ளிவிடும். அதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவரின் உடைகளைத் தளர்த்தி காற்றோட்டமான இடத்தில் அமரவைத்து முதலுதவி கொடுக்க வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்க்க காலை 10 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை வெயி
லில் அலைவதை தவிர்க்கவும். வெயில் நேரங்களில், காற்றுப் புகமுடியாத இடங்களில் அமர்வதைத் தவிர்க்கவும்.
``மொத்தத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களால் வெயிலில் இருந்து காக்கும் கவசம் அமைப்போம்!’’

- எளிமையான தீர்வு சொன்னார், டாக்டர் அன்புமணி.
கோ.இராகவிஜயா
முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்!
• வெயிலில் வெளியே செல்லும்போது ஏற்படும் தாகத்தைத் தணிக்க கண்ணில்படுவதை எல்லாம் வாங்கிக் குடிக்காமல், கையோடு எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கட்டும்.
• காரமான, அதிகம் எண்ணெய் கொண்ட உணவு வகைகளைத் தவிர்த்து... இளநீர், மோர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
• மிகவும் இறுக்கமான ஆடைகள் தவிர்த்து, உடலில் ஈரம் தங்காதவாறு வியர்வையை உறிஞ்சக்கூடிய, சருமத்தில் அரிப்பு ஏற்படுத்தாத, பருத்தி ஆடைகளையே அணியவும்.