
சிவகுமார், சரும நோய் மருத்துவர்ஹெல்த்
பாத வெடிப்பு... இப்போது இளம்வயதினரையும் அதிகம் பாதிக்கிறது. பாத வெடிப்பு எதனால் ஏற்படுகிறது, அதை எப்படித் தவிர்ப்பது, பாதங்களைப் பராமரிப்பது எப்படி? விவரிக்கிறார் சரும மருத்துவர் சிவகுமார்.
பாதவெடிப்பு ஏற்படக் காரணங்கள்

* பருவகால மாற்றம் காரணமாக, பாதத்தைச் சுற்றியுள்ள சருமத்தில் ஏற்படும் வறட்சி
* நீண்ட நேரம் நின்று கொண்டே வேலைசெய்வது
* செருப்பு அணியாமல், வெறுங்கால்களுடன் நடப்பது
* இறுக்கமான காலணிகளை தினமும் அணிவது
* ஹை ஹீல்ஸ் அணிவது
* நீண்டநேரம் தண்ணீரில் நிற்பது

பாதவெடிப்பு இருப்பவர்கள் கவனத்துக்கு
* உங்கள் பாதங்களுக்குச் சரியாகப் பொருந்தும் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்.
* பாதத்தை இறுக்கமாகப் பிடிக்கும் காலணிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஷூ அணிபவர்கள் மெலிதான சாக்ஸை மட்டும் அணிய வேண்டும்.
* பின்பக்கப் பாதங்களை மறைக்கும்படியான செருப்புகளைப் பயன்படுத்தவும். ஹீல்ஸ் உள்ள செருப்பைத் தவிர்க்கவும்.
* அதிகநேரம் ஒரே இடத்தில் நிற்கவேண்டாம்.
* உடல் வறட்சி ஏற்படாமலிருக்க, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவும்.
* சர்க்கரைநோய் பாதிப்பு இருப்பவர்கள், பாதங்களின்மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதவெடிப்பு ஏற்பட்டால், அதற்கென உள்ள சிறப்பு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறவும்.

* பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் அரிப்பு, வலி, ரத்தம் வருதல், வீக்கம், புண் என ஏதேனும் பிரச்னைகளை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
* இரவு தூங்குவதற்கு முன், சோப் பயன்படுத்திக் கால்களைச் சுத்தப்படுத்த வேண்டும். மிருதுவான துணியைக் கொண்டு துடைத்துவிட்டு. மெலிதான சாக்ஸை அணிந்து கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன், குளிர்ந்த நீரில் கால்களைச் சுத்தம் செய்யவும்.
* இரவு தூங்கப் போவதற்குமுன் தினமும் `மாய்ஸ்சரைசர்’ அல்லது `பெட்ரோலியம் ஜெல்லி’ பயன்படுத்தவும். பாதிப்பு பெரிதாகி, வலி ஏற்பட்டு ரத்தம் வரும்வரை அலட்சியமாக இல்லாமல் வெடிப்புகளை முதல் நிலையிலேயே சரிசெய்ய வேண்டும்.
பாதவெடிப்பைத் தவிர்ப்பது எப்படி?

விளக்குகிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.
``பாதவெடிப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் நல்லெண்ணெயை உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரைத் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும். வெடிப்பின் மீதும் எண்ணெய் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் பாதங்கள் மகிழ்ச்சியடையும்.
வெளியிடங்களுக்குச் சென்று வந்ததும் பாதத்தையும் சுத்தமாகக் கழுவ வேண்டும். இரவு தூங்கப்போவதற்கு முன்னர், வெடிப்புள்ள இடங்களில் நெய் அல்லது தேன் தேய்த்துக்கொள்வது நல்லது. அவை இரண்டும் கிருமிநாசினிகளாகச் செயல்படுவதோடு, வறட்சியையும் நீக்கும்.
தண்ணீருடன், உப்பு அல்லது திரிபலா சூரணத்தைக் கலந்து, அதில் கால்களை ஊறவைக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து நாரால் வெடிப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு வெடிப்பின்மீது வெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயைத் தடவிக் கொள்ளவும். தொடர்ந்து செய்துவந்தால், வெடிப்புகள் குறையும்.
பாதவெடிப்புகளின் இடுக்குகளில் அழுக்குகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். உணவில் நெய் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.’’
- ஜெ.நிவேதா