``நாஞ்சில் நாடான மணக்காவிளையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், தினந்தோறும் திருவிதாங்கூர் சேனல் ஆற்றில், மூச்சிரைக்க நீச்சல் பயிற்சியும் பசித்த வயிற்றுக்கு மீன் உணவுமாக உடம்புக்கு உரமேற்றிக் கொண்டவன் நான்!’’ - பெருமிதத்துடன் பேச ஆரம்பிக்கிறார், அரசியல் மேடைகளுக்கு வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு, இலக்கிய மேடைகளில் இணைந்திருக்கும் நாஞ்சில் சம்பத்.

``கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அவர்களது வாழ்க்கைச்சூழலே உடற்பயிற்சியாக அமைந்துவிடும். அந்த வகையில், உடம்பின் அத்தனைத் தசைகளுக்கும் பயிற்சியளிக்கும் நீச்சல்தான் என் தலையாயப் பயிற்சி. இப்போதும் ஊரிலிருக்கும் நாள்களில், உடல் களைப்புறும்வரை ஆற்றில் நீந்திக் களைத்துதான் வீடு திரும்புகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவித்த பாசிப்பயறு, அப்பளம், பச்சரிசி மாவில் செய்த புட்டு, இடியாப்பம் - சொதி, ஆப்பம் - முட்டை குருமா என ஏதாவது ஒன்று காலை உணவாக இருக்கும். மதிய உணவில், கட்டாயம் ஏதாவதொரு வகை மீன் குழம்பு உண்டு. கூடவே காய்கறிகள் கலந்த கூட்டு. ஒரட்டி, ஆப்பம், நீர்க் கொழுக்கட்டை, ஓட்டப்பம், கலத்தப்பம் எனப் பச்சரிசி கலந்த உணவுகள்தான் இரவில் இருக்கும்’’ என்றவரிடம், வெளியூர் பயணங்களின்போதான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு முறைகள் குறித்துக் கேட்டோம்.

``வெளியூர் பயணங்களின்போது, நீச்சலுக்கு பதிலாக நடைப்பயிற்சிதான் என்னுடைய ஆரோக்கியத்தை ஈடுகட்டுகிறது. இரவில் எவ்வளவு தாமதமாகப் படுக்கைக்குச் சென்றாலும், காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். முதலில், மூச்சுப்பயிற்சி; பின்னர் நடைப்பயிற்சிக்குக் கிளம்பிவிடுவேன். சென்னையில் இருக்கும்போது, பட்டினப்பாக்கத்திலிருந்து கண்ணகி சிலைவரை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல், கைகால்களை வீசி நடக்கும்போது அணிந்திருக்கும் ஆடை வியர்வையில் நனைந்துவிடும். பின்னர் சீரகம் சேர்த்துக் காய்ச்சிய இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததும் குளியலை முடிப்பேன்.
சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகள்தான் என் தினசரிப் பழக்கம். வலது காலை அகட்டிவைத்து, வலது கரத்தால் பக்கவாட்டில் பூமியைத் தொடுவேன். அதேபோல் இடப்பக்கமும். சில வருடங்களுக்கு முன்னர் முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. ‘தினமும் முதுகுத்தண்டுவடத்தை நன்றாகப் பின்னுக்கு வளைத்துப் பயிற்சி எடுத்துக்கொண்டாலே போதும், அறுவை சிகிச்சை தேவையில்லை’ என்ற மருத்துவரது ஆலோசனையை ஏற்று, இன்றுவரை அந்தப் பயிற்சியையும் செய்துவருகிறேன். முதுகுவலி போயே போச்சு!’’ என்று புன்னகைக்கும் நாஞ்சில் சம்பத்தின் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோதான் முன்னோடியாம்.

``அரிசி உணவுக்குத் தடா விதித்துவிட்ட வைகோவுக்கு எண்ணெய் கலக்காத சப்பாத்தியும் காய்கறிகளும்தான் தினசரி உணவு. இடைவேளைகளில் அவித்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துக்கொள்வார்.

அவரது வழியில், எனக்கும் வீட்டுச் சாப்பாடுதான் விருப்ப உணவு. நானும்கூட எண்ணெய்ப் பலகார நொறுக்குத்தீனிகளைத் தொடுவதே இல்லை. கொண்டைக்கடலை, கொள்ளு, பாசிப்பயறு போன்றவற்றை வேகவைத்து, தாளித்துச் சாப்பிடுகிறேன். அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும்போது, முன்கூட்டியே இரவுச் சாப்பாட்டுக்கு இட்லி வாங்கிவைக்கச் சொல்லிவிட்டுத்தான் மேடையேறி மைக் பிடிப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...’’ என்று தனது ஆரோக்கிய ரகசியங்களை அடுக்கி முடிக்கிறார் நாஞ்சில் சம்பத்!
- த.கதிரவன், படங்கள்: ப.சரவணகுமார்