ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்: பயன்படுத்துவது குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்!

ஆக்ஸிமீட்டரை விரலில் பொருத்திய பிறகு, அதில் உள்ள ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டும். ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜனின் அளவும் டிஸ்பிளேயில் நமக்குத் தெரியும்.
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கிய சில நாள்களிலேயே நம்மிடம் பிரபலமானது 'ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்'(Finger Pulse Oximeter). இது நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் (Clip) போன்ற எலெக்ட்ரானிக் கருவி.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரின் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு வெகுவாகக் குறையும். உடலில் உள்ள மொத்த ஆக்ஸிஜனின் அளவு 95 -100 என்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம்.
உடலுக்குள் கொரோனா வைரஸ் சென்ற உடனேயே அறிகுறிகள் தென்பட்டுவிடாது. ஒரு நோய்க் கிருமி நம் உடலில் சென்று நோயை ஏற்படுத்தும்போது அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சில நாள்களை எடுத்துக்கொள்ளும். இது நோய்க் கிருமியின் 'இன்குபேஷன் காலம்' (Incubation period) எனப்படும். இன்குபேஷன் காலம் என்பது நம் உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரி நம் உடலில் உள்ள செல்களை அழித்து அது பல்கிப் பெருகிட எடுத்துக்கொள்ளும் காலம். கொரோனா வைரஸின் இன்குபேஷன் காலம் 14 நாள்கள். இதனால் கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் சென்ற 14 நாள்களுக்குப் பிறகே இந்தத் தொற்றின் முழுமையான அறிகுறிகள் வெளிப்படும். இந்த இடைவெளியில் நம்மைச் சுற்றி உள்ள பலருக்கு நம் மூலம் நோய் பரவ வாய்ப்பிருக்கிறது.

நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத 'ஏசிம்ப்டமடிக்' (Asymptomatic) நிலையில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட 14 நாள்களுக்குப் பிறகும் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு இந்நோய்த்தொற்று மருத்துவச் சிகிச்சை இல்லாமலேயே சரியாகிவிடும். ஆனால், மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும்போதே கொரோனா தொற்று இருப்பது தெரியவரும். உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளரை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அரிது.
கொரோனா தொற்று ஏற்பட்டும் அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்கும், வைரஸின் இன்குபேஷன் காலத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றைக் கண்டறிய 'ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' உதவுகிறது. ஆக்ஸிமீட்டர் கொண்டு ஒருவரின் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடும்போது தொடர்ந்து 95 சதவிகிதத்திற்குக் கீழாகவோ, 80, 70 சதவிகிதமாக இருந்தாலோ அவர்கள் கொரோனா டெஸ்ட் செய்துகொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசும் 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 23,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்களும் அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் இதை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் தேவை அதிகரித்துள்ளதால் சில தரம் குறைந்த ஆக்ஸிமீட்டர் கருவிகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் சிலர், இந்தக் கருவியை கையில் மாட்டி தினமும் குறைந்தபட்சம் 20 தடவையாவது ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக, நார்மல் ஆக்ஸிஜன் அளவு 95-100% என்றால், ஒருவர் ஆக்ஸிமீட்டரில் 9 முறை பரிசோதிக்கும்போது 99% என்று காண்பிக்கும். அதுவே பத்தாவது முறை 96% என்று காண்பித்தால் அது நார்மல்தான் என்றாலும் கூட, மருத்துவ தெளிவு இல்லாத காரணத்தால் சிலர் 'ஐயோ... கடந்த தடவையைவிட இந்த முறை அளவு குறைந்துள்ளதே.. ஒருவேளை கொரோனா தொற்றாக இருக்குமோ?!' என்று தேவையில்லாமல் பதற்றப்படவும் வாய்ப்புள்ளது.
பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் மீதான இந்தக் குழப்பங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள "யாரெல்லாம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அவசியம் பயன்படுத்த வேண்டும், எப்போதெல்லாம் அதனை கொண்டு உடலில் ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிடலாம், தரம் குறைந்த ஆக்ஸிமீட்டரை எவ்வாறு கண்டறிவது.." என்பது குறித்து தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும் மருத்துவருமான குழந்தைசாமியிடம் பேசினோம்.
ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்:
"ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்பது நம் உடலின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவையும், இதனுடன் சேர்த்து பல்ஸின் அளவையும் எளிய முறையில் பரிசோதித்து அறிந்துகொள்ள உதவும் ஒரு சிறிய எலெக்ட்ரானிக் சாதனம். இந்தக் கருவியை நம் கையில் ஏதேனும் ஒரு விரலில் மாட்டி, கொஞ்சம் அழுத்தம் கொடுக்கும்போது ஆக்ஸிமீட்டரில் இருந்து வெளிப்படும் ஒளி விரல் தசையை ஊடுருவிச் சென்று நம் உடலின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிட்டு, கண்டறிந்த அளவை ஆக்ஸிமீட்டரின் டிஸ்பிளேயில் நமக்குக் காட்டுகிறது. கூடவே அந்த நேரத்தில் நமக்கு இருக்கும் நாடித்துடிப்பின் வேகமும் காட்டப்படுகிறது.
பொதுவாக இதில் காட்டப்படும் ஆக்ஸிஜனின் அளவு 95-100 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும். நாடித்துடிப்பின் எண்ணிக்கை 60-க்கு குறையாமலும், 100-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் அவசியம் பயன்படுத்த வேண்டும்?

1. கொரோனா டெஸ்ட் 'பாசிட்டிவ்' என்று வந்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
2. கொரோனா டெஸ்ட் 'நெகட்டிவ்' என்று வந்து 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அந்த 14 நாள்களும் ஆக்ஸிமீட்டர் மூலம் உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
3. ஏதேனும் காய்ச்சல் அல்லது சளி, இருமல் இருப்பவர்கள் அவை குணமாகும்வரை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தலாம்.
4. ஏற்கெனவே ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை அவசியம் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
5. மருத்துவமனையில் பணிபுரிவோர்கள் பணிக்குச் செல்லும் முன்பும், சென்று வந்த பிறகு இதனைக் கொண்டு உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
6. இது தவிர, முதியோர்கள் முதல் குழந்தைகள்வரை யார் வேண்டுமானாலும் தங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்துகொள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம்.
எப்போது, எத்தனை முறை பரிசோதிக்க வேண்டும்?
பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொண்டு இந்த வேளையில்தான் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இத்தனை முறைதான் பரிசோதிக்க வேண்டும் என்று வரைமுறைகள் எதுவும் இல்லை. அதற்காக, இதனை ஒருநாளைக்கு 10, 20 முறை எல்லாம் பயன்படுத்த வேண்டாம்.
பொதுவாகக் காலை, மாலை, மதியம் மற்றும் இரவு என்று நான்கு வேளைகள் இதனை உபயோகித்து ஆக்ஸிஜன் அளவை சரிபார்த்துக்கொண்டால் போதுமானது.

காலையில் தூங்கி எழுந்தவுடன் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதித்தால் ஆக்ஸிஜன் அளவு பெரும்பாலும் 99 அல்லது 100 சதவிகிதம் என்று வரும். இதுவே ஏதாவதொரு வேலை செய்துவிட்டோ, உடற்பயிற்சி செய்த பிறகோ பரிசோதித்தால் ஆக்ஸிஜன் அளவு 96 அல்லது 95 என்ற விகிதத்தில் இருக்கும். எனவே 4 முறை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு டெஸ்ட் செய்யும்போது நான்கு முறையும் ஒரே அளவு வரவில்லை என்றாலோ, வரும் அளவுகளில் ஒன்று அல்லது இரண்டு விகிதங்கள் மாற்றம் இருந்தாலோ பயப்படத் தேவையில்லை. இது இயல்பானதே.
இதுபோல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் நம் நாடித்துடிப்பு குறைவாக இருக்கும். அதுவே சிறிது நேரம் வேகமா நடந்த பிறகோ அல்லது ஏதாவதொரு பரபரப்பான நேரத்திலோ இந்த அளவு கிட்டத்தட்ட 99 அல்லது 100 என்ற அளவில்கூட காட்டும். இதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தும் வழிமுறை:
* விரலை நன்றாகத் துடைத்துவிட்டு, விரலில் க்ளிப் போன்ற பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பொருத்த வேண்டும். ஆக்ஸிமீட்டர் பொருத்தப்படும் விரலில் நகப்பூச்சு (Nail Polish) இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் டிஸ்பிளேயில் காட்டப்படும் ஆக்ஸிஜன் அளவு தவறாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
* ஆக்ஸிமீட்டரை விரலில் பொருத்திய பிறகு, அதில் உள்ள ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டும். ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜனின் அளவும் டிஸ்பிளேயில் நமக்குத் தெரியும்.
* ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்த பிறகு, இந்தக் கருவியை விரலில் இருந்து அகற்றிவிட்டால் அது தானாகவே ஆஃப் ஆகிவிடும்.
* இதன் மூலம் கண்டறியப்பட்ட, நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு 95%-திற்கும் குறைவாக இருந்தாலோ, நாடித்துடிப்பின் அளவு 60-க்கு குறைவாகவும், 100-க்கு அதிகமாகவும் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தரம் குறைந்த, போலி ஆக்ஸிமீட்டரை எவ்வாறு கண்டறிவது?
பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்க நினைப்பவர்கள் நேரடியாக நம்பகமான மருந்தகங்களில் அதனை வாங்குவது நல்லது. ஆன்லைனில் வாங்க நினைத்தால் நீங்கள் வாங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும், வாங்கும் கருவியைப் பற்றித் தரப்பட்டுள்ள தகவல்களையும் பரிசோதித்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்க வேண்டாம்.
ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் டெக்னிக்கலாக பெரிய தவறுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு குடும்பத்தில் வெவ்வேறு வயதுடைய நால்வர் இருக்கும்போது அவர்கள் பயன்படுத்தும் ஆக்ஸிமீட்டர் நால்வருக்கும் ஒரே மாதிரியான அளவீடுகளைக் காட்டினாலோ, எப்போதும் ஒரே மாதிரியான அளவைக் காட்டினாலோ அந்தக் கருவியில் ஏதாவது குறைபாடு இருக்கலாம். மற்றபடி இது அதிகம் சிக்கல் இல்லாத எளிய எலெக்ட்ரானிக் கருவிதான்" என்றார் மருத்துவர் குழந்தைசாமி.