"பூக்களெல்லாம் பருவமடைந்து நடனமாடிக்கொண்டிருக்க உயிர்ப்பு வந்து தழுவிச்செல்கிறது அதன் (சு)வாசத்தை..!" ஐம்புலன்களில் நம்மை அதிகம் தூண்டும் தன்மையுடையது நுகர்தல். அந்த நுகரும் புலனைத் தூண்டும் பூக்களின் மருத்துவக் குணங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
செம்பருத்தி (Hibiscus rosa sinensis)


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளிப்பருவத்தில் படித்த முதல் தாவரவியல் பெயர் இந்த `ஹைபிஸ்கஸ் ரோசா சைனென்சிஸ்' (Hibiscus rosa sinensis) உள்ளது. ஆக, நம் அனைவருக்கும் தெரிந்த தாவர வகையான இது தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இது ஆண்டு முழுவதும் பூக்களை உற்பத்தி செய்யக்கூடியது. பளபளப்பான இலைகளைக் கொண்டது. ஐந்து இதழ்களைக் கொண்ட இந்தப் பூ பெரும்பாலும் சிவப்பு நிறமாக இருக்கும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபப்புவா நியூ கினியா நாட்டில் அவர்களது பாரம்பர்ய மருத்துவத்தில் இந்தப் பூவை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது சுவாசம் மற்றும் செரிமானத்தைச் சீராக்குகிறது. சரும நோய்கள், காய்ச்சல் மற்றும் இதய நோய்களுக்கு இந்தப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோல் இதன் வேர்கள் அதிக மாதவிடாய், காய்ச்சல் மற்றும் தோல் நோய்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கொனொரியா பாதிப்பால் அவதிப்படுவோருக்கு இதன், வேர்கள் மற்றும் இலைகளை நசுக்கி எடுக்கப்பட்ட சாறு பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிகள் இதைப் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சரக்கொன்றை (Cassia fistula)
சரக்கொன்றை பாரம்பர்ய மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியக் காடுகளில் பரவலாகக் காணப்படும் மரங்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக, இலையுதிர்க் காடுகளில் அதிகமாகக் காணப்படும். கங்கை பள்ளத்தாக்கு முழுவதும் சரக்கொன்றை பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக மத்திய இந்தியா மற்றும் தென் பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகிறது.

ஆன்டிமைக்ரோஃபியல், மயக்க மருந்து, வலி நிவாரணி மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்பகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதுடன் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. யுனானி, ஆயுர்வேதம் மற்றும் பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களில் ஒன்று. இதன் இலை சரும நோய்கள், கல்லீரல் கோளாறுகள், நுரையீரல் சுரப்புக் கோளாறுகளைப் போக்கக்கூடியது.
நந்தியாவட்டை (Tabernaemontana divaricata)
புதர்ச்செடியாகவோ, குறுஞ்செடியாகவோ வளரக்கூடியது. கரும்பச்சை நிறத்தில் உள்ள இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைபவை. நந்தியாவட்டையின் மலர்கள், நுனியில் தொகுப்பாக அமைந்திருக்கும். வெண்ணிறமான இவை, ஐந்து இதழ்களுடன் கூடியவை. ஆண்டு முழுவதும் மலரக்கூடிய நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. கண் படலம், மண்டைக்குத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

நந்தியாவட்டையின் பால், வேர் ஆகியவை காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும். நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப்பாலுடன் கலந்து இரண்டு துளிகள் கண்ணில் விட்டால் கண் சிவப்பு குணமாகும்.
நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுத்தாலோ அல்லது இரண்டு துளி பூச்சாற்றை கண்ணில் விட்டாலோ கண் எரிச்சல் குணமாகும். பல்வலி குணமாக ஒரு துண்டு நந்தியாவட்டை வேரை வாயில் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக மென்று துப்ப வேண்டும். நந்தியாவட்டைவேர் ஒரு துண்டு எடுத்து நன்றாக நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளராகக் காய்ச்ச வேண்டும். இதை இரவில் ஒருவேளை குடித்துவந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
பவளமல்லி - (Nyctanthes arbor tristis)
சிவன் கோயில்களில் தல விருட்சமாக இருக்கும் பவளமல்லி பெரும்பாலும் வீட்டுத் தோட்டங்களிலும், நந்தவனங்களிலும் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் கால் வலி, மூட்டுவலி, காய்ச்சல், வாத நோய் மற்றும் பல்வேறு வலிகளுக்கு சிகிச்சையளிக்க சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பதற்றம், பரபரப்பு, இரைப்பை மற்றும் கல்லீரல் அழற்சி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் மற்றும் சூதகவலியைப் போக்கவும் பவளமல்லி பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளைக் கடுகு எண்ணெயில் கொதிக்க வைத்து, படர்தாமரையைப் போக்க வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும்; வேர்ப்பட்டை கோழையகற்றும்; பித்தத்தைச் சமன்படுத்தும்
குங்குமப்பூ - (Crocus sativus Indian saffron)
பிள்ளைப்பேறு அடைந்தவர்களுக்கு இந்த மலரைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நமக்கு பரிச்சயமானது குங்குமப்பூ. இந்தப் பூவின் இதழ்களுக்கு இடையே இருக்கும் சூலகமுடியை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பயன்படுத்துகிறார்கள். குங்குமப்பூவை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதில் துளிகூட உண்மையில்லை. அது மருத்துவரீதியாக எங்கும் நிரூபிக்கப்படவும் இல்லை. கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிட்டாலோ பாலில் சேர்த்துக் காய்ச்சி அருந்தி வந்தாலோ சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணிகள் கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும். பிரசவ காலத்துக்குப் பிறகும் சாப்பிடலாம். ஆனாலும், குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது உடலுக்கு வேறு சில துன்பங்களைத் தரும். பசியைத் தூண்டக்கூடியது. மாதவிலக்குக் கோளாறு மற்றும் வலியைப் போக்கும். இதயத்தைப் பலப்படுத்த உதவும். துவர்ப்புத் தன்மை கொண்ட இது செரிமானத்துக்கு நல்லது. சமைத்த உணவுகளில் குங்குமப்பூவை சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் தரும்.