இளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?#DoubtOfCommonMan

இளநரை ஏற்பட காரணங்களும், அதற்கான தீர்வுகளும்.
இளைஞர்கள் பலரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் ஒரு விஷயம், இளநரை. இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒருவரை முப்பதைத்தாண்டிய மனிதரைப்போல காட்சியளிக்க வைக்கிறது இந்த இளநரை. இன்று சரிபாதிக்கும் மேற்பட்டோரை இளநரை பாதித்திருக்கிறது. இளைஞர்களை அழகு என்ற வரைமுறைக்குள் கொண்டு வரும் இரண்டு விஷயங்களில் ஒன்று முகத்தோற்றம், மற்றொன்று தலைமுடி. அதில் சிக்கல் வரும்போது, மனதளவில் அவர்கள் துவண்டுபோக வாய்ப்புள்ளது என்கின்றன சில ஆய்வுகள். இதுஒருபுறமிருக்க, இளநரை ஏற்பட மனஅழுத்தமே காரணம் என்கிறது மருத்துவம்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் அருண் குமார் என்கிற வாசகர், `இளநரை ஏற்படக் காரணம் என்ன? நரை முடியைப் போக்க ஏதேனும் வழி உள்ளதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வாசகரின் இந்தக் கேள்வி குறித்து சரும மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்.

"இளநரை ஏற்பட மரபும் ஊட்டச்சத்து குறைபாடும் இரண்டு முக்கியக் காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்பட்டது என்றால், அதைச் சரிசெய்ய மாத்திரைகள் எடுக்க வேண்டியிருக்கும்.
இளநரை ஏற்பட்டதும் சிலர் மொட்டை அடித்துக்கொண்டால் தீர்வு கிடைத்துவிடுமென நினைத்து அப்படியே செய்கின்றனர். புதிதாக தலைமுடி வளரும்போது முன்பு இருந்த பிரச்னை எதுவும் வராது என்பது அவர்களின் நம்பிக்கை. தலைமுடியின் எந்தவொரு பிரச்னையும் எப்போதும் அதன் வேரிலிருந்துதான் தொடங்குகிறது, நரையும்கூட அப்படித்தான். இளமைக்காலத்தில் அளவுக்கதிகமாக நரை ஏற்படுவது, குறிப்பாக நீளமான கூந்தல் இருந்து அதன் உட்பகுதி முடிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
சில நேரங்களில், வயது காரணமாகக்கூட நரை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதை சிலர் இளநரை என்று தவறாகப் புரிந்து கொள்வர். அதுபோன்ற நேரத்தில், மருத்துவர் ஆலோசனையில்லாமல் சுயமருத்துவத்தைப் பின்பற்றுவர். இதைத் தவிர்த்து ரத்தப் பரிசோதனை மூலம் இளநரையின் சரியான பின்னணியைக் கண்டறியவேண்டும்.
மரபுகாரணமாக இருந்தால், அதைச் சரிசெய்வது இயலாத காரியம். அப்படிப்பட்டவர்கள், சரும மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சாயம் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணம் என்றால், எந்தச் சத்து என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்" என்றார்.
`இளநரை பிரச்னையைத் தடுக்கும் வழிகள் ஏதும் உள்ளனவா? ஒருவேளை பிரச்னை வந்துவிட்டால், அதை இயற்கையாக சரிசெய்ய என்ன செய்வது?' என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.

"இன்றைய சூழலில், ஐந்து வயது குழந்தைகூட இளநரையால் பாதிப்புக்குள்ளாகிறது. மரபைவிட பிற காரணிகளே அதற்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை போன்றவற்றைச் சொல்லலாம்.
இளநரையைத் தடுக்க....
* யாரொருவர் காற்று மாசு நிறைந்த பகுதியில் அதிக நேரம் இருக்கிறாரோ, அவருக்கு இளநரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே இளைஞர்கள், குழந்தைகள் அதுபோன்ற சூழலை முடிந்தவரைத் தவிர்க்கவேண்டும். மாறிவரும் உலகில், தூய்மையான காற்றைச் சுவாசிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி வருகிறது என்பதால், இதற்கு வேறொரு தீர்வை மக்கள் நாடலாம். அது, தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகளும் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது. இதன்மூலம் பிரச்னையை எளிதில் தவிர்க்கலாம், தடுக்கலாம்.
* தலைமுடிக்குத் தினமும் எண்ணெய் வைத்துப் பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். இதன்மூலம் தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியின் அடர்த்தியை உறுதிசெய்ய முடியும். செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய்மையான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது இதற்குப் போதுமானது என்பதால், காற்று மாசுபாடு நிறைந்த பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் இதைப் பின்பற்றலாம்.

இளநரைக்கான தீர்வுகள் இதோ...
* இளநரை பிரச்னை உள்ளவர்களை கவனித்தால், அவர்களது உணவில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகள் அதிகம் இருப்பதைக் காணலாம். அதேபோல அவர்கள், தேவையான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். எனவே இதுபோன்ற பழக்கங்களை இவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். செரிமானப் பிரச்னைகள், மலச்சிக்கலைத் ஏற்படுத்தாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரைச் சாற்றை எடுத்து சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்கவைத்து தலைக்குத் தேய்த்துவருவது நல்ல பலன் தரும். எண்ணெய் தயாரிக்கும்போது, குறிப்பிட்ட இலையின் சாறு முழுவதும் ஆவியாகும்வரை கொதிக்கவிட வேண்டும். கரிசலாங்கண்ணிக்குப் பதில் மருதோன்றியின் இலை, கறிவேப்பிலையை உபயோகப்படுத்தலாம்.

* ஆயுர்வேத மருத்துவத்தில், எண்ணெய் மட்டுமன்றி மருந்து வகைகளும் உண்டு. ஏனென்றால் எந்தவொரு பிரச்னைக்கும் புறக்காரணிகள் இருப்பதுபோல அகக் காரணிகளும் இருக்கும். அவற்றையும் நாம் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் மருந்துகள் தரப்படுகின்றன. அந்த வகையில், ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகு இரும்புச்சத்து நிறைந்த லோகம் என்ற மருந்து, நெல்லிக்காய், அகசி போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு வரவேண்டும்.
* உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்

இவை அனைத்தையும் விட முக்கியமானது மனஅழுத்தம் இல்லாத, காற்று மாசுபாடில்லாத, மகிழ்ச்சி மற்றும் நிறைவான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பு:

இளநரை பிரச்னை உள்ள பலரும், தலைமுடிக்கு சாயம் உபயோகப்படுத்துவது மட்டுமே தீர்வு என்று நினைத்துக் கொள்கின்றனர். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அது தீர்வே தராது" என்கிறார் அவர்.
