Published:Updated:

Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Pixabay )

தினமும் வைட்டமின் சி சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உண்மையா? எவ்வளவு மில்லிகிராம், எத்தனை வேளை எடுக்க வேண்டும்?
எந்த வயதினரும் எடுக்கலாமா? மல்டிவைட்டமினும் சேர்த்து எடுக்கலாமா? கொரோனா நோயாளிகளுக்கே அவற்றைத்தானே பரிந்துரைக்கிறார்கள்?

- முகேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சக்திவேல்
மருத்துவர் சக்திவேல்

பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.

``ஏதோ ஒரு வைட்டமின் சப்ளிமென்ட்டை எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்றெல்லாம் இல்லை. ஒவ்வொரு வைட்டமினுக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. சில பிரச்னைகளுக்கு வைட்டமின் ஏ உதவலாம். வேறு சில பிரச்னைகளுக்கு வைட்டமின் பி, இன்னும் சிலவற்றுக்கு வைட்டமின் சி என உடலின் பற்றாக்குறை மற்றும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கேற்ப வைட்டமினின் வேலை வேறுபடும். பொத்தாம்பொதுவாக வைட்டமின் சி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று நம்புவது தவறு.

நோய் எதிர்ப்பாற்றல் என்பது ஒரே ஒரு மாத்திரையில் கிடைத்துவிடுகிற விஷயமில்லை. அது சிறப்பாக இருக்க ஊட்டச்சத்துகள் அவசியம். ஆன்டிபாடிக்கள் வேண்டும். இப்படி நிறைய காரணிகளை உள்ளடக்கியது அது.

சந்தோஷமாக இருக்க எந்தக் காயைச் சாப்பிட வேண்டும் என்று கேட்பது போன்றிருக்கிறது இந்தக் கேள்வி. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு உடல், மன ஆரோக்கியம் அவசியம். நன்றாகச் சாப்பிட வேண்டும், முறையான தூக்கம் வேண்டும் என நிறைய விஷயங்கள் இருப்பதைப் போன்றதுதான் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதும்.

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைப் பலரும் ஓர் இலக்காக வைத்துக்கொள்கிறார்கள். அது தேவையில்லை. வழக்கமான விஷயங்களைச் சரியாகச் செய்து கொண்டிருந்தாலே சந்தோஷமாக இருக்க முடியும். அதே போல நோய் எதிர்ப்பாற்றலையும் ஓர் இலக்காக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் சி உள்ளிட்ட சத்து மாத்திரைகளை வழங்குவது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதற்காக அல்ல. நோய் பாதித்த நிலையில் அவர்களது உடலில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருந்தால் அதைச் சரிசெய்வதற்குத்தான் கொடுக்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பாற்றல் என்பதே என்னவென்று புரியாமல் இன்றும் பலர், `நான் வைட்டமின் சியும் மல்ட்டி வைட்டமினும் எடுத்துக்கொள்கிறேன்.... எனக்கு கொரோனா வராது' என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பாற்றல் என்பது உங்களுடைய உணவுப்பழக்கம், தூக்க சுழற்சி, மகிழ்ச்சியான மனநிலை, தொற்றுக்கு இலக்காவதில் உங்கள் உடல்வாகு எனப் பல விஷயங்களைப் பொறுத்தது. இவை எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் நோய் எதிர்ப்பாற்றலும் சிறப்பாகவே இருக்கும்.

தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவோருக்கு, தனியே வைட்டமின் மாத்திரைகள் தேவையே இல்லை. ஒருவருக்கு குறிப்பிட்ட சத்துக்குறைபாடு இருப்பது நிரூபிக்கப்பட்டால்தான் அவருக்கு அந்தச் சத்துக்கான சப்ளிமென்ட் மாத்திரை, மருந்துகள் தேவைப்படும். அந்தத் தேவை இல்லாதவர்களுக்கு செயற்கையான மருந்து, மாத்திரைகள் அவசியமில்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?