நாட்டின் பலமே, அந்நாட்டின் மக்கள்தான். இன்றைய குழந்தைகள்தான் நாளைய இளைஞர்கள். நாளைய இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். ஆனால் அடித்தளமான பிறப்பின் எண்ணிக்கையே குறைந்தால், அந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகலாம். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்பதால், பிறப்பு எண்ணிக்கை விகிதம் குறையாமல் இருக்க நாடுகள் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்ளும்.

கடந்த ஆண்டு ஜப்பானில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த விகிதத்தை அதிகரிக்கக் குழந்தை பிறக்கையில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரிக்க, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதாவது `Childbirth and Childcare Lump-Sum Grant’ என்ற பெயரில், புதிதாகக் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வரசு 2,52,338 ரூபாய் பணத்தை (420,000 யென்) இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொகையை 3,00,402 (500,000 யென்) வரை உயர்த்த இப்போது திட்டமிட்டுள்ளது. அதாவது 48,000 ரூபாயை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது. இதனால் மக்களிடையே குழந்தை பிறப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜப்பான் நாட்டின் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர் கட்சுனோபு காடோ, ஜப்பானின் பிரதம மந்திரி ஃப்யூமியோ கிசிடாவிடம் கடந்த வாரம் பேசியுள்ளார். இந்த ஊக்கத்தொகை அதிகரிப்புக்குப் அனுமதி கிடைத்துள்ளதாகவும், வரும் நிதியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜப்பானில் 8,11,604 பிறப்புகளும், 14,39,809 இறப்புகளும் பதிவாகி உள்ளன. இதன் விளைவாக மக்கள்தொகை எண்ணிக்கை 6,28,205 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.