கோவிட் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
டவுனிங் ஸ்ட்ரீட் செய்தி மாநாட்டில் நேற்று பேசிய இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ``இந்த நாள் கோவிட் நோய்த்தொற்றை வெற்றி கொண்டோம் என அறிவிக்கும் நாள் இல்லை. ஏனெனில் இந்த வைரஸ் இன்னும் நம்மைவிட்டு நீங்கவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இனி `கோவிட் உடன் வாழும் புதிய திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த இரண்டாண்டுக் காலம் வரலாற்றில் இருண்ட, கொடூரமான ஆண்டுகள்'' என குறிப்பிட்ட அவர், இங்கிலாந்தின் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் வியாழன் அன்று முடிவடைய உள்ளதாகவும், பொது இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளும் ஏப்ரல் 1-ம்தேதி முதல் நிறுத்தப்படும் எனவும், நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே இனி பரிசோதனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பெரும்பாலான கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து வந்ததை பிப்ரவரி நேற்றுடன் இங்கிலாந்து அரசாங்கம் கைவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோய்த்தொற்று உறுதியானவர்கள் இனி சட்டபூர்வமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை, மாறாக ஐந்து நாள்களுக்கு வீட்டிலேயே இருக்கவும், மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறைந்த வருமானத்தை ஈட்டும், கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சுய தனிமைப்படுத்தல் உதவித்தொகை இனி கிடைக்காது. சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்டோருக்கான ஊதியம் மட்டுமே ஒரு மாதம் வரை தொடரும்.
பாஸ்போர்ட்டுகள் குறித்த அரசாங்க வழிகாட்டுதல்கள் நடைமுறையும் இங்கிலாந்தில் முடிவடைவதாக அறிவித்து அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளார் போரிஸ் ஜான்சன்.