Published:Updated:

Doctor Vikatan: தினமும் கடுக்காய் பொடி சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

கடுக்காய் பொடி
News
கடுக்காய் பொடி

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தினமும் கடுக்காய் பொடி சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கடுக்காய் பொடி
News
கடுக்காய் பொடி

தினமும் இரவில் கடுக்காய்ப் பொடியும் திரிபலா பொடியும் சாப்பிடுவது நல்லதா, இந்த இரண்டும் எடைக்குறைப்புக்கு உதவும் என்பது சரியா, இதை எல்லா வயதினரும் எடுத்துக்கொள்ளலாமா? எவ்வளவு, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

- ருத்ரா (விகடன் இணையத்திலிருந்து)

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

``இரவில் தினம்தோறும் கடுக்காய்ப் பொடி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். ஆனால், அந்தக் கடுக்காய்ப் பொடியின் தயாரிப்பு முறை ரொம்பவே முக்கியம். பிஞ்சு கடுக்காயாக இருக்க வேண்டும், தோல் நீக்க வேண்டும். கொட்டையைப் பயன்படுத்தக் கூடாது.

கடுக்காய் என்பது இளமையையும் அழகையும் தந்து முதுமையைத் தடுக்கக்கூடிய ஒரு காயகல்ப பொருள். எனவே, ஒரு மண்டலம் அதாவது 48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு ஒரு மண்டலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு மண்டலம் சாப்பிடலாம். `விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு' என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். மற்ற மருந்துகளுக்கெல்லாம் இத்தனை நாள்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஒரு கணக்கு இருக்கும்.

ஆனால், காயகல்ப மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவற்றின் தரம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். சில இடங்களில் அதன் கொட்டையோடு சேர்த்து அரைத்து விற்பார்கள். அப்போது அதன் மருத்துவ குணம் மாறும். தோலை மட்டும் தட்டியெடுத்துவிட்டு, கொட்டை நீக்கி அரைத்த கடுக்காய்ப் பொடியை தினமும் ஒரு கிராம் அளவுக்கு எடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம். பேதி பிரச்னை உள்ளவர்கள், பசி உணர்வே இல்லாதவர்கள் இதைத் தவிர்க்கலாம். பசி இருக்கிறது ஆனால், மலச்சிக்கலும் இருக்கிறது என்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி அபார்ஷன் ஆனவர்கள், வயிற்றுப்போக்கு பிரச்னை உள்ளவர்கள் கடுக்காயைத் தவிர்க்க வேண்டும்.

அளவும் முக்கியம். 500 மி.கி முதல் ஒரு கிராம் அளவு வரை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம். கடுக்காய்க்கு எடையைக் குறைக்கும் தன்மையும் உண்டு. திடீரென ஏதோ ஒரு காரணத்தால் எடை கூடுவதாக நினைப்பவர்கள் அதிகரித்த எடையைக் குறைக்க கடுக்காய் உதவும்.

இதே போன்றதுதான் திரிபலா. அதில் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று மூலிகைகள் உள்ளன. இவற்றில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. நெல்லிக்காயில் வைட்டமின் சி அபரிமிதமாக உள்ளது. இந்த மூன்றும் சேர்ந்து வாதம், பித்தம், கபத்தை சமநிலைப்படுத்தக்கூடியவை. கடுக்காய்க்கு சொன்னதுபோல திரிபலாவுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம். இதிலும் அளவும் தயாரிப்பு முறையும் முக்கியம். ஆயுளை வளர்க்கும். முதுமையைத் தள்ளிப்போடும். அதிகாலையில் அல்லது இரவில் ஏதேனும் ஒருவேளை மட்டும் இதை 500 மி.கி. முதல் ஒரு கிராம் வரை வெந்நீருடன் சேர்த்து எடுத்துக்கொள்ளவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?