ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த்: கீலாய்டு தழும்பு... இது வேற மாதிரி!

கீலாய்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கீலாய்டு

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், தேவிகா ராணி என்ற வாசகி, ``என் மகளுக்கு முன்று வருடங்களாக நெஞ்சின் மேற்பகுதியில் கீலாய்டு தழும்பு (keloid) உள்ளது. அதை எப்படிச் சரிசெய்வது?”

ன்ற கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்கு விடை தேடும் முயற்சியாக எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. உங்களுக்கும் இது போன்ற கேள்விகள், சந்தேகங்கள் தோன்றினால், http://bit.ly/DoubtOfCommonMan என்ற இணைய பக்கத்தில் பதிவுசெய்யலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர் உரிய பதில்கள் பிரசுரமாகும்.

ஹெல்த்: கீலாய்டு தழும்பு... இது வேற மாதிரி!

‘உங்கள் உடலில் எங்கெங்கே தழும்புகள் இருக்கின்றன?’ - பள்ளியில் அங்க அடையாளங்களைப் பதிவுசெய்வதற்காக இப்படிக் கேட்ட பிறகுதான், தழும்புகளைத் தேடிப் பார்ப்போம். அதை நினைவில் வைத்துக்கொண்டு வேறு எப்போது கேட்டாலும் அடையாளமாகச் சொல்வோம். ஆனாலும் பல நேரங்களில் தழும்பு இருக்கும் இடத்தை மறந்தே போய்விடுவோம். ஆனால், பிறர் பார்க்கும்படியாகத் தோற்றமளிக்கும் தழும்புகள் எப்போதும் ஓர் அசௌகர்யத்தைத் தந்துகொண்டே இருக்கும். அதை மறைக்க ஆடை அணியும் முறையிலிருந்து நம் அன்றாட நடவடிக்கைகள்வரை மெனக்கெட வேண்டியிருக்கும். அதிலும், கீலாய்டு (Keloid) வகைத் தழும்புகள் என்றால் கூடுதல் அசௌகர்யம் ஏற்படும்.

அதென்ன ‘கீலாய்டு’ தழும்பு?

சாதாரணத் தழும்புகள் ஏற்கெனவே ஏற்பட்ட காயத்தின் அடையாளமாக, சருமத்துடன் ஒட்டிய வடுவாகக் காட்சியளிக்கும். ஆனால் கீலாய்டு தழும்புகள், சருமத்துக்கு மேல் சதைபோலப் பெருத்து, வளர்ந்திருக்கும்.

இந்த வகைத் தழும்புகள் உண்டாகக் காரணங்கள் என்னென்ன, அவற்றைச் சரிசெய்ய முடியுமா... அழகுக்கலை அறுவை சிகிச்சை நிபுணர் சிவக்குமார் விளக்குகிறார்.

``உடலில் புண்கள், காயங்கள் ஏற்பட்ட இடத்திலோ, அறுவை சிகிச்சை செய்த இடத்திலோ தழும்புகள் உருவாகும். சில தழும்புகள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறியதாகவும், சில தழும்புகள் மிகப்பெரியதாகவும் இருக்கும். இவையெல்லாம் இயல்பான தழும்புகளே. ஆனால், சிலருக்கு மட்டும் தழும்பு வளர்ந்துகொண்டே இருக்கும். அப்படி வளரும் தழும்புகளைத்தான் ‘கீலாய்டு’ என்கிறோம். உடலில் சுரக்கும் ‘கொலாஜென்’ எனும் புரதம், தழும்புகளை மறையச் செய்துவிடும். ஆனால், கீலாய்டு வகைத் தழும்புகள் மறையாது.

ஹெல்த்: கீலாய்டு தழும்பு... இது வேற மாதிரி!

உடலின் அனைத்துப் பகுதிகளிலும் கீலாய்டு தழும்புகள் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், பெரும்பாலும் நெஞ்சு மற்றும் தோள்பட்டைப் பகுதியில்தான் உருவாகும். அந்தப் பகுதிகளில் சருமம் மிகவும் இறுக்கமாக இருப்பதே காரணம். காயம்படுவது, அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் உருவான கீலாய்டு தழும்புகள், அருகிலுள்ள இடத்துக்கும் பரவும். சிலருக்கு மிகப்பெரிய காயங்கள் ஏற்படாமல் லேசான சிராய்ப்பு, பருக்கள்கூட கீலாய்டு தழும்புகளாக மாறலாம். இதற்கு மரபணுக் கோளாறுகளே காரணம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தத் தழும்புகள் உருவாகலாம். பெற்றோருக்கு இருந்தால் குழந்தைகளுக்கும் இதே வகையான தழும்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் தீக்காயங்கள், அறுவை சிகிச்சை செய்த பிறகு ஏற்படும் காயங்களால் உண்டாகும் தழும்புகளே கீலாய்டு தழும்புகளாக மாறும். தவிர அம்மைத் தழும்பு, சுகாதாரமற்ற முறையில் காது குத்துவதால் ஏற்படும் தழும்பு, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் உண்டாகும் தழும்பு போன்றவையும் கீலாய்டு தழும்புகளாக மாறும். இவை, முதலில் சிவப்பாகத் தோன்றும். நாளடைவில், பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். இவை சாதாரண தழும்புகளைப்போல் அல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்கும். தழும்புகளில் வலியும் அரிப்பும் ஏற்படும்.

ஹெல்த்: கீலாய்டு தழும்பு... இது வேற மாதிரி!

தொடக்கநிலையில் களிம்பு, சிலிக்கான் ஜெல் ஷீட் மூலம் சரிசெய்துவிடலாம். இவை தவிர, தழும்பிலேயே போடப்படும் ஊசி மூலமும் அதைக் கரைத்துவிடலாம். பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்படும். ஆனாலும், தழும்புகள் மீண்டும் உருவாக வாய்ப்புகள் அதிகம். 100 சதவிகிதம் சரிசெய்வதற்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்காக இதை தீவிர பாதிப்பாக நினைத்து பயப்படத் தேவையில்லை. காதில் உண்டாகும் கீலாய்டு தழும்புகளுக்குத்தான் அடிக்கடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் காது குத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரமானமுறையில் காது குத்திக்கொள்வது நல்லது. ஃபேஷனுக்காக காதில் பல இடங்களில் துளையிட்டு, காதணி அணிவதைத் தவிர்ப்பதும் நல்லது’’ என்கிறார் டாக்டர் சிவக்குமார்.