ஓர் ஓவியம்... ஓர் உலகம்!
நீங்கள், அடுக்கு மாடி வீட்டில் இருக்கும்போது, கீழ் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ என்ன செய்வார்கள் என யோசித்தது உண்டா? ஆனால், அந்த நேரத்தில் உலகமே என்ன செய்யும் என யோசித்து, தனது கற்பனையை ஓவியத்தில் காட்டியுள்ளார், சின்டா விடால் (Cinta Vidal). ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்துப் பெண் ஓவியர் இவர். வயது 32. இதற்கு கிரேவிடன்ட் ஓவியம் (Gravitant Art) என்று பெயர்.

இந்த கிரேவிடன்ட் ஓவியத்துக்கு பார்சிலோனாவில் மிகவும் பிரபலம். துணிகளில் வரையப் பயன்படுத்தும் சாதாரண பெயின்ட்டை மட்டுமேவைத்து, இப்படி அசாதாரணப் படைப்பை உருவாக்கி வரும் சின்டாவின் ஓவியங்களை, இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என எப்படிப் பார்த்தாலும் புதிய விஷயங்களை அளித்து வியக்கவைக்கும்.

‘‘நான், பார்சிலோனாவில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறேன். அது ஒரு சின்ன நகரம். எனது வீட்டில் இருக்கும் ஸ்டுடியோவில் அமர்ந்தபடி, சுற்றுப்புறத்தைக் கவனிப்பேன். கீழ் வீடு, எதிர் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள், நாம் வாழும் பூமிக்கும் அந்தப் பக்கம், இப்போது என்ன நிலையில் இருக்கும் எனச் சிந்திப்பேன். நாம் வாழும் பூமியில் ஒரு நொடியில், ஒவ்வொரு மனிதனின் சிந்தனைகள், செயல்கள் வேறுபடுகின்றன. அதைக் காட்டவே இந்த ஓவியங்கள்” என்கிறார் சின்டா விடால்.
பார்சிலோனாவின், மிஸ்செலானியா பிஎஸ்என் (Miscelanea BSN) என்னும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தனது ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார் இந்த 32 வயது பெண்.
ஷாலினி நியூட்டன்