+2 முதல்வர்கள்!
எட்டு லட்சத்து 39 ஆயிரத்து 291 பேர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 12-ம் வகுப்பு தேர்வு முடிவில் ஓர் ஆச்சர்யம் இருந்தது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் 90.6.

இரு முதல்வர்கள்...
கோயம்புத்தூர் ஸ்ரீசெளடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி, எல்.பி.நிவேதா மற்றும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி, ஜெ.பவித்ரா ஆகிய இருவரும் 1,200-க்கு 1,192 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்ட வெற்றியாளர்கள். இந்த இருவருக்கும் இன்னோர் ஒற்றுமை இருக்கிறது. வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களிலும் இவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

"அன்றைய பாடங்களை அன்றே படித்து, திட்டமிட்டு முடித்ததால்தான் நினைத்த வெற்றியை அடைய முடிந்தது'' என்கிறார் பவித்ரா.
"பெற்றோர்களோ, ஆசிரியர்களோ படிக்கச் சொல்லி எந்த அழுத்தமும் தரவில்லை. அதனால், நான் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தேன். அதுவே, வெற்றியைத் தந்தது'' என்கிறார் நிவேதா.
முதல் இடத்தைப் பிடித்த பவித்ராவும் நிவேதாவும் "ஆடிட்டர் ஆவதே தங்கள் லட்சியம்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இரண்டாம் படியில் நான்கு பேர்


மாநில அளவில் இரண்டாம் இடத்தை, நான்கு மாணவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். பிரவிண் (எஸ்.கே.வி.மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்), எஸ்.இ.விக்னேஸ்வரன் (ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு), இ.வித்யவர்ஷினி (செளடாம்பிகா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்

பள்ளி, துறையூர்), எம்.சரண்ராம் (எஸ்.எஸ்.எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்) ஆகியோர் 1,190 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தனித்துப் பெற்ற மூன்றாம் இடம்!
1,189 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல், டிரினிட்டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பாரதி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கணக்குப் புலிகள் அதிகரிப்பு!
சென்ற ஆண்டைவிட, இந்த ஆண்டு கணக்குத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்களை 9,710 பேர் பெற்று அசத்தி இருக்கின்றனர். சென்ற ஆண்டு 3,882 மாணவர்களே கணக்கில் சதம் அடித்திருந்தனர்.
இது புதுச்சேரி அசத்தல்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், தமிழ்நாட்டைப் போலவே முதல் இடத்தை, இரண்டு மாணவிகள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
முதல் இடம்:

செயின்ட் பேட்ரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், இந்துஜா மற்றும் நிகிதா ஆகியோர் 1,200-க்கு 1,187 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இரண்டாம் இடம்:
பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹரிஸ் பாலாஜி, 1,186 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மூன்றாம் இடம்:
செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியைச் சேர்ந்த பிரதிக்ஷா. 1,182 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மாணவர்களின் இந்த வெற்றிப் பயணம், அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடர வாழ்த்துகள்.
தொகுப்பு: வி.எஸ்.சரவணன்
படங்கள்: தே.தீட்ஷித், குரூஸ் தனம்,
த.ஸ்ரீநிவாசன், அ.நவின்ராஜ்,
மு.குகன்