’ஸ்மைல் ப்ளீஸ்’ நன்மைகள்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நான்தான் உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா பேசுறேன். நீங்க எப்பவும் ஜாலியா சிரிக்கிறவங்கதானே... அந்தச் சிரிப்பைப் பற்றிதான் பேசப்போறேன்.
சிரி... சிரி...

‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ எனச் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. கள்ளங்கபடம் இல்லாம சிரிக்கிறவங்களுக்கு, இயல்பாவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருந்தா, காய்ச்சல் முதலான எந்த நோயும் பக்கத்துல வராது. சிரிக்கும்போது, எண்டார்பின், செரடோனின், டோபமைன், ஆக்ஸிடோன்சின் என்ற நான்கு ஹார்மோன்களும் உடம்பில் அதிக அளவு சுரக்கும். இந்த ஹார்மோன்கள், மூளைக்கு ஆக்சிஜன் போறதுக்குத் துணையா இருக்கும். சீரான இதயத் துடிப்புக்கு துணையா இருக்கும். இதனால், நம்ம உடம்பும் மனசும் எப்பவும் சுறுசுறுப்பா இருக்கும்.
நல்ல சிரிப்பும் கெட்ட சிரிப்பும்!

சிரிச்சா உடலுக்கு நல்லது. சரி, எப்படி சிரிக்கிறது? வேலியோரம் பேசாம இருக்கும் ஓணானை அடிப்பதோ, வகுப்பில் சக மாணவனைக் கேலி செய்து சிரிப்பதோ சரியா? அப்பவும் ஹார்மோன்கள் சுரக்குமா? என்றால், சுரக்கும். உடம்பு சுறுசுறுப்பா இருக்கும். ஆனால், மற்றவர்கள் உங்களை ஒதுக்குவாங்க. தனிமையை உணர்வீங்க. அப்போ, சிரிப்பு தானாகப் போய்விடுமே? தனியா உட்கார்ந்து சிரிப்பதைவிட நண்பர்களுடன் இணைந்து சிரிப்பது சிறந்தது. இதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

புன் சிரிப்பு... மென் சிரிப்பு!
தினமும் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து மனிதர்களைச் சந்திக்கும்போது, சின்னதாக ஒரு புன்னகையுடன் பாருங்கள். உங்களது ஒரு சிறிய புன்னகை, மற்றவர்களுக்கு மிகவும் உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். பள்ளியில், வீட்டில், தெருவில் நண்பர்களுடன் சண்டை போடாதீர்கள். ஏதாவது தவறு செய்தால், தயக்கமின்றி மன்னிப்பு கேட்டுவிட்டு, ஒரு புன்னகையை வீசுங்கள். அனைவரையும் நண்பராக்கிக்கொள்வதுதான் உண்மையான வெற்றி.
நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்!
நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்து நகைச்சுவையான விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அடுத்தவர்களைச் சிரிக்கவைக்கும் திறமை உங்களிடம் இருந்தால், உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு நட்பு வட்டம் இருக்கும்.
நேர்மறை எண்ணம் அதிகரிக்க!

நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களுக்கு, நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். எந்தவொரு தோல்வியில் இருந்தும் உடனடியாக மீண்டு வர நகைச்சுவை உணர்வு உதவும். நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால், வெற்றி உங்களுக்கே. உறவுகளுக்கு இடையே சிக்கல்கள் வராமல் தடுக்கவும் நகைச்சுவை உணர்வு மிகவும் முக்கியம். ஈகோ என்ற வில்லனுக்கு வில்லாதி வில்லன் நகைச்சுவைதான்.
குழந்தைகளோடு விளையாடு!
குழந்தைகளுடன் விளையாடுவது நல்லது. குழந்தையின் சிரிப்பு, எப்பேர்ப்பட்ட மனக்கஷ்டங்களையும் போக்கிவிடும். அவர்களின் மழலைப் பேச்சும், குறும்புத்தனங்களும் நம்மை குலுங்கிக் குலுங்கி சிரிக்கவைக்கும். எனவே, குழந்தைகளுடன் குதூகலியுங்கள்.
பெற்றோரை சிரிக்கவையுங்கள்!

நீங்க, ஒரு நாளைக்கு பல முறை சிரிப்பீங்க. ஆனால், பெரியவர்கள், வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக எப்பவும் பரபரப்பா இருப்பாங்க. மன உளைச்சலில் இருக்கலாம். அவங்களை நீங்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிரிக்கவைக்கலாம். உங்க நண்பர்களோடு நடந்த ஜாலியான விஷயங்களை அவர்களிடம் சொல்லுங்க. அவர்களோடு சேர்ந்து காமெடி சேனல்கள் பாருங்க. பாட்டு, டான்ஸ் என இருங்க. ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், நம் உடம்பில் இருந்து 50 கலோரி குறைகிறது. எந்த உடற்பயிற்சியும், மருந்தும் இல்லாமல் கலோரியைக் குறைக்க உதவுவது சிரிப்பு. அந்தச் சிரிப்பை விட்டுடலாமா? சேர்ந்து சிரியுங்கள்... சந்தோஷமாக இருங்கள்.
டிப்ஸ்

எகத்தாளச் சிரிப்பு, கிண்டல் சிரிப்பு, நக்கல் சிரிப்பு போன்றவை நல்லதல்ல. மற்றவரைக் காயப்படுத்தி சிரிக்கக் கூடாது.
சம்பந்தம் இல்லாமல் சிரிக்கக் கூடாது. எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் புரிந்து சிரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் சிரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு சிரிப்பது பயன் தராது. எனவே, செயற்கை யாகக் சிரிக்க வேண்டாம்.
ஜோக்ஸ் படிப்பது, காமெடி சேனல் பார்ப்பது போன்றவை நல்லது. இரவு தூங்கப் போகும்போது, மகிழ்ச்சியாக உறங்கச் செல்வது அவசியம்.
பு.விவேக் ஆனந்த்
ச.சந்திரமௌலி்