வரிக்குதிரையும் சாலைவிதியும்!
கவிதைப் பூங்கா


குதிரை இனமே ஆயினும் நாங்கள்
கொள்ளைத் தின்பது இல்லையே
வரிக்குதிரை என்பார் யார்க்கும் நாங்கள்
வரிகள் விதித்தது இல்லையே
வெட்டவெளிகளும் பசும் புல்வெளி நிலங்களும்
வாசம் செய்திடும் இடங்களாம்
மரங்களின் பட்டை, வேர்கள், மொட்டு
மலர்கள், கனிகள் உணவாம்

கூட்டமாகச் சேர்ந்தே வாழ்வோம் நாங்கள்
கேட்போம் தலைவரின் சொல்லை
சத்தம் கேட்டால் ஓட்டம் போட்டு
செல்வோம் பாதுகாப்பின் எல்லை
ஒவ்வொரு மனிதன் கைகளின் ரேகை
தனித்தனி விதம் அதுபோல
எங்கள் வரிகளின் அமைப்பும் மாறும்
அதுவே எங்கள் அடையாளம்
சங்கடம் இன்றிச் சாலையைக் கடக்க
வரிகள் வரைந்து வைத்தீர்
எங்கள் பெயரால் அழைத்து எமக்கும்
எத்தனை பெருமை சேர்த்தீர்
சாலையைக் கடக்க விதிகள் இருக்கு
அதனை நினைவில் வைப்பீர்
சாலை விதிகளைச் சரியாய் மதித்து
விபத்துகளைத் தவிர்த்துச் செல்வீர்.
வெற்றித் திரு