
க.பூபாலன் - படங்கள்: எஸ்.தேவராஜன்
உ டலும், உள்ளமும் நலமாக இருந்தும் பலரால் நினைத்ததைச் சாதிக்க முடிவதில்லை. ஆனால், ‘தன்னுடைய வாழ்நாள் எண்ணப்படுகிறது’ என்று தெரிந்தே தனது நடனத் திறமையால் நூற்றுக்கணக்கான விருதுகளைக் குவித்துவருகிறார், மாற்றுத்திறனாளி ஏஞ்சலின் ஷெரில்.

கடலூர் சாவடியைச் சேர்ந்த அமிர்தராஜ் - ஜீவா தம்பதியரின் ஒரே மகள், ஏஞ்சலின் ஷெரில். செயின்ட்மேரிஸ் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறார். பிறக்கும்போதே இவருக்கு, ‘அட்ரினல்’ என்ற நாளமில்லா சுரப்பி (எண்டோகிரைனாலஜி) கிடையாது. இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், இதனால் ஏற்படும் மரணத்தைத் தள்ளிப்போட முடியும். வாழும் காலம் தெரிந்தும், அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு, நினைத்ததை எப்படிச் சாதிக்க முடிகிறது என்று ஏஞ்சலின் ஷெரிலைக் கேட்டோம்.

‘‘எங்க அம்மா எனக்கு உறுதுணையாக இருப்பதால், இந்த மாதிரி கொடுமையான ஒரு நோய் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. எனக்கு நடனம் கத்துக்கணும்னு ரொம்ப ஆசை. அதை எங்கம்மா கிட்ட சொன்னேன். அப்போ சுற்றி இருந்தவங்க எல்லாம், ‘உனக்கு எதுக்கு இப்போ டான்ஸ்? கத்துக்கிட்டு என்னத்தச் செய்யப்போற?'ன்னு சொன்னாங்க. எங்க அம்மாதான், ‘கத்துக்கோ’ என்று ஊக்கப்படுத்தினாங்க. அந்த ஊக்கமும் உற்சாகமும்தான் இப்போதைக்கு என்னை உங்க முன்னால் நிறுத்தியிருக்கிறது.’’

இப்போதைக்கு இவர் பயிற்சிக்கு, நடனப் போட்டிக்கு, மருத்துவமனைக்கு என்று எங்குச் சென்று வந்தாலும் வாகனச் செலவு, வழிச் செலவு என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது ‘கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகள் குழு’தான். நாங்கள் அவர்களுக்குத்தான் கோடான கோடி நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், ஏஞ்சலின் ஷெரிலின் அம்மா ஜீவா.

‘‘நான் அரசு இசைப் பள்ளியில்தான் முதன் முதலில் பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் இதுல எதையாவது சாதிக்கணும்னு ஒரு வெறி வந்தது. தமிழர்களின் கலைகள் எதையும் விட்டுவைக்கக்கூடாது என்று மனதுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. தஞ்சாவூர், கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன்கிட்டே கரகத்தையும் சிதம்பரம், பாரதி லோகேந்திரன்கிட்டே பரதத்தையும் பண்ருட்டி, ரகுநாத்கிட்டே சிலம்பத்தையும் கடலூர், மனோகர்கிட்டே ஓவியத்தையும் கத்துக்கிட்டேன். இவை இல்லாமல் பாட்டு, பறை, கராத்தே, பொய்க்கால் குதிரை என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

கேரளா, ராய்ப்பூர் என இந்தியா முழுவதும் நடனப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். நடிகர் ராகவா லாரன்ஸ், கிரண்பேடி, சகாயம் எனப் பல விஐபி-க்கள் கைகளால் பரிசுகளையும், பதக்கங்களையும் வாங்கியிருக்கிறேன்.
‘‘என்னுடைய நோக்கமே, நமது கிராமியக் கலைகளை உலகம் முழுவதும் கொண்டு போகணும் என்பதுதான்’’ என்கிறார் வலிகளை மறைத்த புன்னகையுடன் ஷெரில்.