மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
கே.கணேசன்
மாயா டீச்சர், வீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல சுட்டிகள் டீச்சர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். காலை நொண்டியபடியே நடந்து வந்த பிரசன்னாவைப் பார்த்த டீச்சர், ''காலுக்கு என்னாச்சு பிரசன்னா?'' என்று கேட்டார்.
பிரசன்னா உடனே எரிச்சலுடன், ''வர்ற வழியில ஒரு பெரிய பாறைல கால் இடிச்சுடுத்து.'' என்று சொன்னான்.

##~## |
''இவ்ளோ நாளா அது அங்க தானே கிடக்குது. நீதான் பார்த்து வந்திருக்கணும்.'' என்றாள் மது.
''இந்த மாதிரி பாறைகளே இல்லாம மணலாவே இருந்திருக் கலாமே டீச்சர்?'' என்றான் பிரசன்னா.
''டீச்சர்... பாறைகள், தனிமங்கள் பற்றியெல்லாம் கொஞ்சம் சொல்லுங் களேன்... ஸ்கூலுக்கும் புராஜக்ட் ரிப்போர்ட்டா யூஸ் பண்ணிப்போம்.'' என்றான் கணேஷ்.
''இதோ பார்டா கடமை கருப்புசாமி'' என்று அவனை கிண்டல் செய்தனர் சுட்டிகள்.
'''நீரின்றி அமையாது உலகம்’ என்று சொல்றா மாதிரி பாறைகள் இன்றி அமையாது பூமி!'' என்ற டீச்சர், பூமி முழுவதுமாக இறுக்கமான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. பூமி மேற்பரப்பில் இருந்து அதன் மையப் பகுதி சுமார் 6,370 கிலோமீட்டர் தூரம் இருக்கும். இதில் முதல் நாற்பது கிலோமீட்டர் ஆழத்துக்கு இருக்கும் பாறைப் பகுதிக்கு 'க்ரஸ்ட்’ (Crust) என்று பெயர். க்ரஸ்ட்கள் பலவிதமான பாறைகளால் உருவானது.
பாறைகள் எப்படி உருவாகின்றன? என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிய, வாங்க போகலாம்'' என்றபடியே டீச்சர் மந்திரக் கம்பளத்தை எடுத்தார். அதன் சக்தியால் மாயா டீச்சரும் சுட்டிகளும் உருவத்தில் சிறிதாகி, பூமியின் மையத்தில் நுழைந்தனர். இதில் கொஞ்சம் லேட்டாக நுழைந்த சரண்யா, மேல் பரப்பிலேயே நின்று விட்டாள். டீச்சரும் சுட்டிகளில் மூன்று பேர்கள் நடுவிலும், ஆர்வம் மிகுதியால் கணேஷ் இன்னும் சில அடி ஆழத்திலும் சென்றுவிட்டனர்.
கணேஷ் போன இடம் கடினமான பாறையாக இல்லாமல் கொதிக்கும் திரவக் குழம்பாக இருந்தது. கணேஷ் முதலில் பயந்தாலும், மந்திரக் கம்பளத்தின் சக்தியால் அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. டீச்சர் இருக்கும் இடத்திலிருந்தே சுட்டிகளுக்கு பூமியின் அடுக்குகளை விவரித்தார். ''நான் முதலில் சொன்னது போல்... பூமி, க்ரஸ்ட் பாறைகளால் சூழப்பட்டிருக்கிறது. இந்த கிரஸ்ட் மொத்தம் மூன்று விதமான பாறைகளால் ஆனது. அதில் கணேஷ் நிற்கும் பகுதி பூமியின் மையப் பகுதி. இந்தப் பகுதியில் காணப்படும் பாறைக்கு (1) தீக்குழம்புப் பாறைகள் (Igneous Rocks) எனப் பெயர். இதில் உள்ள பாறை, பூமியின் வெப்பத்தால் இளகிய திரவ நிலையில் இருக்கும். இந்தச் செந்நிற திரவகக் குழம்பு (Lava)பூமியில் ஏற்படும் இடைவெளிகளில் நுழைந்து வேகத்துடன் வெளியேறும். இதைத்தான் எரிமலைக் குழம்பு என்று சொல்கிறோம்.இவைதான் எரிமலைகள் உருவாகக் காரணம். இவ்வாறு பூமியைப் பிளந்து கொண்டு வெளியேறும் எரிமலைக் குழம்பானது குளிர்ச்சி அடைந்து பாசல்ட் (Basalt) பாறைகள் ஆகின்றன. இவை பசுமை நிறத்தில் இருக்கும். அடுத்து, நாம் பார்க்கப் போவது சரண்யா நிற்கும் பகுதி. (2) வண்டல் பாறைகள் (Sedimentry Rocks). இவை, ஏற்கெனவே இருக்கும் பாறைகள் உடைவதால் ஏற்படுகின்றன. இந்தப் பாறைகள் அத்தனை உறுதியானவை அல்ல. அறிவியலாளர்களும் நிலவியல் ஆய்வறிஞர்களும் பூமியின் வரலாற்றில் பலவிதமான பாறைகள் உருவாகி உள்ளன என்கிறார்கள். சில பாறை மலைகளும் இருக்கின்றன. அவை, கடலில் வாழ்ந்த நத்தைக் கூடுகள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றால் உருவாகி இருக்கலாம் என்கின்றனர். இவை, பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கடல் பகுதிகளாக இருக்கலாம் என்று உறுதியாகச் சொல்கின்றனர். இவ்வகைப் பெரிய பாறைகளில்... ஆற்று நீர் மற்றும் மழை நீர் ஆகியவை ஏற்படுத்தும் தாக்கத்தினால் உருவாகின்றன. அடுத்து, நாம் நிற்கும் இந்த அடுக்குக்கு (3) உருமாற்றப் பாறைகள் (Metamorphic Rock) என்று பெயர். இவை, வண்டல் பாறைகள் மற்றும் தீக் குழம்புப் பாறைகள் ஆகியவற்றில் இருந்து உருவானவை. பூமியின் அடிஆழத்தில் பரவி இருக்கும். இவை மிகவும் எடை கொண்டதாக இருக்கும். பூமியின் வெப்பத்தால் உருமாற்றம் அடைவதால் இவற்றுக்கு இப் பெயர் வந்தது. உதாரணம்: மார்பிள் பாறைகளாகும்.

பாறைகள் பலவிதங்களில் இருக்கும். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் வித விதமான கற்களைச் சேகரித்து அவற்றைச் சுத்தம் செய்து பார்த்தால், அவை ஒவ்வொன்றும் எப்படி வேறு படுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்'' என்று விவரித்தார்.
''டீச்சர்... கிராபைட், குவார்ட்ஸ், டால்க் இதெல்லாமும் பாறைகளாகத்தானே கிடைக்குது... ஆனா, இவற்றை நாம் ஏன் கனிமங்கள்னு சொல்றோம்? இது பிரசன்னாவின் கேள்வி.
''பாறைகள் மிகவும் கடினத் தன்மை வாய்ந்தவை. ஆனால், கனிமங்கள் அப்படி இல்லை. அதுவும் தவிர ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் இரும்பு ஆகியவற்றின் கூட்டுக் கலவைதான் கனிமங்கள் (விவீஸீமீக்ஷீணீறீs). இவற்றை நாம் தாதுப் பொருள்கள் என்றும் சொல்கிறோம். இவை இயற்கை யாகவே உருவானவை.
நமது பூமியில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான கனிமங்கள் உள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவையும் கனிமங்கள்தான்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் கனிமங்களால் ஆனவை''என்ற டீச்சர், கணேஷை பென்சிலாக மாற்றினார். இஷ்டத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடி, கணேஷ் பென்சிலின் ஊக்கைக் கரைத்தான். நீங்கள் தினமும் பயன்படுத்தும் பென்சிலில் ஊக்கு (Lead), க்ராபைட் எனும்

கனிமத்தால் ஆனது. கறுப்பு நிறத்தில் மென்மையாக இருக்கும். இது தவிர, நாம் முகத்துக்குப் பயன்படுத்தும் டால்கம் பவுடர் கூட 'டால்க்’ (Talc) எனப்படும் ஒரு வித கனிமம்தான். இது மிகவும் மென்மையான கனிமம். இதிலிருந்துதான் வரைவதற்குப் பயன்படுத்தும் கலர் க்ரயான்ஸையும் தயாரிக்கிறார்கள். அதே போல சாப்பிடப் பயன்படுத்தும் தட்டுகளை வெள்ளைக் களிமண் என்றழைக்கப்படும் காவோலினைட் (Kaolinite) எனப்படும் கனிமத்தில் இருந்துதான் தயாரிக் கிறார்கள். இன்னும் ஒரு முக்கியமான கனிமம் ஒன்று உள்ளது அது க்வார்ட்ஸ் (Quartz).இவற்றைக் கடிகாரங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த உபயோகிக்கின்றனர். அதேபோல, நாம் விழாக் காலங்களில் வெடிக்கும் வாணவேடிக்கைகளில் சல்பர் (Sulphur) எனும் கனிமத்தைப் பயன் படுத்துகிறார்கள். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
திடீரென மது, ''டீச்சர்... நிலக்கரியை விட்டுட்டீங்களே?'' என்றாள்.
''நீ போன வாரம் நெய்வேலிக்குப் போயிட்டு வந்தது எல்லாருக்கும் தெரியும்.'' என்று அவளை கிண்டல் அடித்தான் பிரசன்னா.
''பார்ப்பதற்கு நிலக்கரி பாறை போலவே கடினமாகவும் ஒழுங்கற்றும் இருந்தாலும், இது பாறையாகவோ கனிம மாகவோ ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இவை, நிலத்தில் இருந்து கிடைக்கும் எரி பொருளாகத்தான் பார்க்கப் படுகின்றன.'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, ''கனிமங்களைப் போன்றதே படிவங்களும். இவற்றை கிரிஸ்டல் (Crystals) என்று அழைப்பார்கள். கிரிஸ்டல்களும் கிரானைட் பாறைகளும், திரவப் பாறைகளான (Magma) எரிமலைக் குழம்பானது, பூமியின் உட்பகுதியிலேயே குளிர்ச்சி அடைந்து படிவதால் ஏற்படுகின்றன. கிரிஸ்டல்கள் பெரிய அளவில் படியும். இவற்றை வெறும் கண்களால் பார்த்தே அடையாளம் காணமுடியும். முற்காலத்தில் கிரிஸ்டல்களைக் கரையாத பனிக்கட்டி என்றே நம்பி வந்தார்களாம்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ச்சியாளர்கள் குகைப் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்துதான் அறிந்துகொண்டார்கள். வெண்பளிங்குப் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்டதுதான் தாஜ்மகால்.'' என்று முடித்தார் டீச்சர்.
ஏதோ ஞாபகத்துக்கு வந்தவரைப் போல யோசித்துக் கொண்டு இருந்த டீச்சரைப் பார்த்து மது, ''டீச்சர் நாம் போன முறை மந்திரக் கம்பளத்தில் பயணம் செய்யவில்லையே?'' என்றாள்.
''நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்து விரித்தார். சுட்டிகள் ஜாலியாகக் கத்தியபடியே கம்பளத்தின் மீது ஏறி உட்கார்ந்தார்கள்.
''பாறைகள் என்றால் பூமிக்கு அடியில் மட்டும் இருக்காது. சில இடங்களில் இயற்கை நிகழ்வுகளால் அவை பூமிக்கு வெளியேயும் இருக்கும்.'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, கம்பளம் ரியோடி ஜெனிரோவில் இருக்கும் 'சுகர் லோஃப் மவுன்ட்டன்’ என்ற மிகப் பெரும் கிரானைட் பாறைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. 375 மீட்டர் உயரத்துக்கு பல குட்டிக் குன்றுகள் சூழ இருக்கிறது இந்தப் பாறைமலை. இந்தப் பாறை மலைக்கு வயது பலகோடி வருடங்களாம். இதைத் தூங்கிக் கொண்டிருக்கும் அரக்கனின் முழங்கால் என்று கதைகளாகச் சொல்வார்களாம்.'' என்றபடியே கம்பளத்தை இத்தாலியின் ட்ராவர்டைன் நீர் வீழ்ச்சிக்குப் போகும்படிச் செய்தார். பரந்த அளவிலான சுண்ணாம்புக் கல் பாறைகளால் அமைந்திருக்கும் மலையில், நீர் வீழ்ச்சி ஒன்று அமைந்து இருந்தது. இயற்கை நமக்களித்த வரங்களான பாறைகளைப் பற்றி நினைத்து வியந்தபடியே சுட்டிகள் நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டுக் கிளம்பினார்கள்.