குழந்தைகள், இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது மிகச் சாதாரணமான ஒன்று. அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் நடக்கும் இந்தச் செயல்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற வேண்டும். அது 10, 15 வயதைக் கடந்த பிறகும் தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்.
தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையால் பல குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இது எதனால் ஏற்படுகிறது? இது சரி செய்யக்கூடியதா என்று நரம்பியல் மருத்துவர் பெ.வெங்கடேஷிடம் கேட்டோம்.
"குழந்தைகள், இரவு நேரத்தில் தூக்கத்தின்போது சிறுநீர் கழிப்பதை `நாக்டர்னல் என்யூரிசிஸ்' (Nocturnal enuresis) என்பார்கள். இந்தப் பிரச்னை மரபுரீதியாகவும் வரலாம். தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையை `பிரைமரி பெட் வெட்டிங்' (Primary Bedwetting), `செகண்டரி பெட் வெட்டிங்' (Secondary Bedwetting) என இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். `பிரைமரி பெட்வெட்டிங்' என்பது நரம்பு தொடர்பான பிரச்னையால் வரலாம். சிறுநீர்த் தொற்று காரணமாகவோ, கால்சியத்தின் அளவு அதிகரிப்பதாலோ, சர்க்கரைநோய் பாதிப்பதாலோ ஏற்படுவது `செகண்டரி பெட் வெட்டிங்'.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசெகண்டரி பெட் வெட்டிங் இல்லையென்றால், அவர்களுக்கு பிரைமரி பெட் வெட்டிங் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவோம். பெரும்பாலும், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம். அந்தக் குழந்தைகளை இரவு 7 மணிக்கு மேல் நீர் அருந்தவோ, டீ, காபி அருந்தவோ கூடாது என்போம். மேலும், இரவில் அவர்களுக்கு இனிப்புப் பண்டங்களைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவோம். தூங்கச் செல்வதற்கு முன்பும், தூங்கி ஒரு மணி நேரம் கழித்தும் அவர்களை எழுப்பி சிறுநீர் கழிக்கப் பழக்கச் சொல்வோம். இதை`நைட் லிஃப்டிங்' (Nigth Lifting) என்பார்கள். இதன் மூலம், அவர்களை இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்போம்.

டயாப்பர், குழந்தையின் உள்ளாடையில் `பயோ ஃபீட்பேக்' (Bio feedback) அலாரத்தைப் பொருத்துவதன்மூலம் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்ததும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும். தூங்கச் செல்வதற்குமுன், மூக்கில் `டிடிஏவிபி ஸ்ப்ரே' (ddavp spray) அடிப்பதன்மூலம், இரவில் தூங்கும்போது சிறுநீர் வெளியேறாது. இவை தவிர, நரம்பியல் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு வலிப்பு வரும். இதனால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கலாம் என்பதால், இதுவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சித்த மருத்துவத்திலும் இந்தப் பிரச்னைக்கு மிக எளிதாகத் தீர்வு காணலாம் என்கிறார் சித்த மருத்துவர் ஜி.ராஜாசங்கர்.
"ஐந்து வயது நிறைந்த 20 சதவிகிதக் குழந்தைகள், இரவு நேரங்களில் தங்களையும் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். ஏழு வயது வரையிலான குழந்தைகளில் 10 சதவிகிதம் பேரும், 12 முதல் 14 வயது வரையான குழன்தைகளில் மூன்று சதவிகிதம் பேரும் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். நான்கு வயது வரையிலான குழந்தைகள், இரவு படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயற்கையே. இந்த விஷயத்தில் ஏழு வயது வரை அச்சப்பட ஒன்றுமில்லை. இதில், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகம் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர். இப்படிப் படுக்கையில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சியின்போது ஏற்படக்கூடிய இயல்பான ஒரு விஷயம்.
சிறுநீர்ப்பை நிறைந்துவிட்டது என்ற உணர்வைக் கொடுத்ததும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தரும் மூளையின் சிக்னல், குழந்தைகளை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பும். ஆனால், அந்த நிகழ்வு நடக்காமல்போகும்போது அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள். இரவில் சிறுநீரின் அளவைக் கட்டுப்படுத்தும் `வாசோப்ரெசின்' (Vasopressin) என்ற ஹார்மோனின் செயல்பாடு சமச்சீராக இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
தூக்கத்தில் உண்டாகும் மூச்சுத்திணறலின்போதும்கூட, அதாவது சுவாசப்பைக்குத் தடையின்றி செல்லும் உயிர்க்காற்று குறைபாட்டாலும்கூட இது ஏற்படலாம். சிலருக்கு குறட்டை (Sleep apnea) வரும்போது இப்படி ஏற்படலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் மற்றும் அடினாய்டு அழற்சியினாலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாலும், படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் கவனச்சிதறல் நோயினாலும் (ஏடிஎச்டி - ADHD - Attention Deficit Hyperactive Disorder) இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

கவனச்சிதறல் உள்ள குழந்தைகளுக்கு சுட்டித்தனம் அதிகம் இருப்பதுடன், அவர்கள் பொறுமையிழந்து காணப்படுவார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர்களுக்கும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதற்கு, பரபரப்பும் பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். தினமும் ஒழுங்காக மலம் கழிக்காத குழந்தைகளுக்கு, மலக்குடல் சிறுநீர்ப்பையை அழுத்தும்போது அவர்கள் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிக்கலாம்.
இவை தவிர, ஒரே நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழிவது சர்க்கரைநோயின் ஆரம்ப குறிகுணமாக இருக்கலாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குப் பரம்பரையும் மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. பெற்றோரில் ஒருவருக்கு சிறுவயதில் இந்தப் பிரச்னை இருந்திருந்தால் 40 சதவிகிதமும், இருவருக்கும் இருந்திருந்தால் 70 சதவிகிதமும், பரம்பரையாக இந்தப் பாதிப்பு ஏற்படலாம். வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பதாலும், பள்ளி மாறுவதாலும், பெற்றோரிடையே உண்டாகும் சிறு பிணக்குகளாலும்கூட குழந்தையின் மனம் பாதிப்புக்குள்ளாகி இந்நிலை உண்டாகலாம்.

மருந்துகளைவிட சரியான வாழ்வியல் முறைகளே இதற்கான தீர்வு. திரவ உணவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் கொடுக்கக்கூடாது. இரவு தூங்கச்செல்வதற்கு முன், தினமும் சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இதைச் செய்து, பின்னர் படுக்கைக்குச் செல்வது நல்லது. இது ஒரு பிரச்னையே அல்ல, சரி செய்துவிடலாம் என்ற முற்போக்குச் சிந்தனையைக் குழந்தைகளுக்கு உண்டாக்க வேண்டும். இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காத அடுத்தநாள், காலை நோபல் பரிசு கிடைத்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதைவிட பெரிய மருந்து எதுவும் இல்லை. பெற்றோர் மிகவும் பொறுமையாக இதைக் கையாள வேண்டும். மற்றவர்கள் முன் எக்காரணம் கொண்டும் இதைப் பற்றி விமர்சித்தோ கேலி செய்தோ பேசக்கூடாது.
`கஃபைன்' (caffeine) கலந்த உணவுகள் கொடுப்பதைக் குறைக்க வேண்டும். குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகளில் கஃபைன் உள்ளதால் அதைத் தவிர்ப்பது நல்லது. உடல் எடை அதிகரிக்கும்போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம்.
ஃபோலிக் ஆசிட் (Folic acid) நிறைந்த உணவுகளான பச்சைக் காய்கறிகள், கீரைகள், வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சுப் பழங்கள், பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் சாப்பிட்டால் படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்னையிலிருந்து விடுபடலாம். பி-12 சத்து நிறைந்த புலால் உணவுகளை வாரம் ஒருமுறை கொடுக்கலாம். ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி-12 உணவுகள் மூளையின் நடுவே உள்ள நரம்பு தொடர்பைப் பலப்படுத்தி இரவில் சிறுநீர் பிரிவதைத் தடுக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களும் மிகவும் நல்லது. முளைகட்டிய தானியங்களில் ஃபோலேட் சத்து அதிகமுள்ளது என்பதால் அவற்றைச் சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் உள்ள தாவரக் கூறுகள், சிறுநீர்ப்பையின் தசைகளைப் பலப்படுத்தும் என்பதால், அவற்றைத் தேனுடன் சேர்த்தோ தனியாகவோ கொடுக்கலாம். பெருஞ்சீரகத்தைப் பொடியாக்கி, அரை டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால், நோய் குணமாகும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பாலும் பால் பொருள்களும் உடலில் கால்சியம் சத்தை அதிகரித்து, இரவில் சிறுநீர் வெளியேறுவதைத் தூண்டுவதால், குழந்தைகளுக்கு இரவில் பால் கொடுப்பதைத் தவிர்க்கவும். சர்க்கரையும் மைதாவும் சேர்ந்த பொருள்கள் சிறுநீர்ப்பையின் அழற்சியை அதிகமாக்கும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
பிரம்மி, அமுக்கரா, வல்லாரை, விஷ்ணுகிரந்தி, சடாமஞ்சில், சீந்தில், கடுக்காய், வசம்பு மற்றும் வாலுழுவை போன்ற மூலிகைகள், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் என்று சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது.

சித்த மருத்துவ முறைப்படி வாதத்தைக் கட்டுப்படுத்துவதே இதற்கான முழுத் தீர்வு. மலம் அல்லது சிறுநீர் அதிகரித்தாலும் அளவில் குறைந்தாலும் வாதம் அதிகரிக்கிறது என்பதன் அறிகுறியாகும். மனதின் பரபரப்பும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, சித்த மருத்துவரை அணுகி காலத்துக்கேற்ப நல்லெண்ணெய்க் குளியல், பேதி மருந்துகள், கிருமிக்கான மருந்துகள் மற்றும் ஊட்டம் நிறைந்த உணவுகள் பற்றிய அறிவுரைகளைப் பெற்று குழந்தைகளுக்கான இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம்'' என்கிறார் டாக்டர் ராஜாசங்கர்.