
பாலகுமார்
அதிர்ச்சியில் இருக்கிறது அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் பங்கின் விலை. காரணம், அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை. அப்படி என்ன அந்த அறிக்கையில் இருந்தது?
இந்திய மருந்துகள் மிக அதிக அளவில் அமெரிக்காவில் விற்பனை யாவதால், யூ.எஸ்.எஃப்.டி.ஏ-வின் ஒப்புதல்களும், அந்த அமைப்பு இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்பு நிலையங் களில் மேற்கொண்ட ஆய்வுகளும், அது தொடர்பான அறிக்கைகளும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
மருந்து தயாரிக்கும் யூனிட்டுகளை ஆய்வு செய்தபின் இந்த அமைப்பு வெளியிடும் அறிக்கை சாதகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை நன்கு உயரும். மாறாக, இந்த அமைப்பின் 483 படிவத்தில், நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் நிலையங்களின் செயல்பாடு களிலோ அல்லது அங்கிருக்கும் வசதிகள் குறித்தோ, சில பாதகமான விஷயங்களை வெளியிட்டால், அந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிவைச் சந்திக்கும்.

இத்தகைய சரிவின் அளவானது, படிவம் 483-ல் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் குறைகளின் தன்மையைப் பொறுத் திருக்கும். உடனடியாகச் சரிசெய்யப்படக்கூடிய குறைகள் என்றாலோ அல்லது சொல்லப்பட்ட குறைகளால் பெரிதாக நிறுவனத்தின் நம்பகத்தன்மைப் பாதிக்கப்படாது என்றாலோ அந்தப் பங்கு பெரிய அளவில் சரிவைச் சந்திக்காது.
சமீப காலங்களில், சன் பார்மா, அரபிந்தோ பார்மா மற்றும் லூபின் உள்ளிட்ட பல பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங் களின் பங்குகள், யூ.எஸ்.எஃப்.டி.ஏ அந்த நிறுவனங்களின் தயாரிப்பு நிலையங்களில் செய்த ஆய்வுக்குப்பிறகு வெளியிட்ட அறிக்கைகளினால் சில சரிவுகளைச் சந்தித்தன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம், குஜராத் மாநிலம் ஹலாலில் (Halol) உள்ள சன் பார்மா நிறுவனத்தின் மிகப் பெரிய யூனிட்டில், யூ.எஸ்.எஃப்.டி.ஏ நடத்திய ஆய்வு சம்பந்தமான அறிக்கை, சென்ற பிப்ரவரி மாத இறுதியில் வெளியானது. அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைகள், பெரிய அளவில் கவலை அளிக்கக்கூடியவையாக இல்லாதது பாசிட்டிவான விஷயம். ஆனால், 2015-ம் ஆண்டு கடைசியில் வெளியான யூ.எஸ்.எஃப்.டி.ஏ-வின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட கடுமையான குறைகளின் காரணமாக, ஹலால் யூனிட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்தது. இதனால், சன் பார்மாவின் லாபம், சென்ற காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர் 2017) பெருமளவில் குறைந்தது.

சென்ற மாதம் வெளியிடப்பட்ட படிவம் 483-ல் சொல்லப் பட்டிருக்கும் குறைகள் மிக முக்கியமானவையல்ல என்று சொல்லப்படுகிறது. இந்தப் படிவத்தில், டேட்டா நம்பகத்தன்மை (Data Integrity) குறித்து எந்த நெகட்டிவான விமர்சனமும் இல்லை என்பதும், குறைகள் என எடுத்துக்கொண்டால் தயாரிப்பு நிலையத்தின் சுத்தம் மற்றும் கருவிகள் சம்பந்தமானது மட்டுமே என்ப தாலும், இவற்றை விரைவிலேயே சன் பார்மா சரிசெய்துவிடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று அரபிந்தோ பார்மா நிறுவனத்துக்குச் சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள இன்ஜெக்ட்டிபிள்ஸ் தயாரிக்கும் யூனிட்டில் யூ.எஸ்.எஃப்.டி.ஏ நடத்திய ஆய்வுக்கான அறிக்கை வெளியானது. இதில், பாரம் 483-ல் மொத்தம் ஒன்பது குறைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இன்ஜெக்ட்டிபிள்ஸ் மருந்து வணிகத்தில், அமெரிக்க சந்தையில் ஏறக்குறைய 40% வளர்ச்சியை எதிர்நோக்கும் அரபிந்தோ பார்மாவுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தியாகவே இருந்தது.
இந்தத் தகவல் வெளியான அன்றே அரபிந்தோ பார்மா நிறுவனப் பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 5% சரிந்தது. மறுதினம் சற்று ஏறுமுகம் காணப்பட்டாலும், புதனன்று அந்தப் பங்கு மீண்டும் சரிவையே கண்டது.
யூ.எஸ்.எஃப்.டி.ஏ அமைப்பு ஒன்பது குறைகளைக் குறிப்பிட்டிருந் தாலும், இதில் எதுவும் டேட்டா நம்பகத்தன்மை பற்றியதல்ல என்றும், தொடர்ந்து காணப்படும் குறை எதுவுமில்லை என்றும் அரபிந்தோ பார்மா நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும், தன்னுடைய பதிலை விரைவிலேயே யூ.எஸ்.எஃப்.டி.ஏ-வுக்குத் தெரிவிப்போம் என்றும் சொல்லியிருக்கிறது.
அரபிந்தோ பார்மா நிறுவனப் பங்குகள், 52-வார குறைந்தபட்ச விலையாக ரூ.504 (மே 29, 2017)யிலிருந்து சுதாரித்து, நவம்பர் 7, 2017-ல் உச்சபட்ச விலையான ரூ.808.95-யைத் தொட்டது. கடந்த வியாழனன்று 590.75 என்கிற அளவில் வர்த்தகமானது!
அரபிந்தோ பார்மா நிறுவ னத்துக்குத் தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு தற்காலிக நிகழ்வுதான். இப்போது ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியிலிருந்து இந்த நிறுவனம் சீக்கிரமே வெளிவந்துவிடும் என்று எதிர்பார்ப்போம்!