
தனிமை பயம் (Monophobia)
தனிமை ஓர் இனிமையான அனுபவம். ஆர்ப்பாட்டமாக நாளைக் கழிக்கும் ஒரு மனிதன் தினமும் சில மணி நேரமாவது தனிமையில் இருக்க விரும்புவார். ஆனால் சிலருக்குத் தனிமை என்றாலே பயம். இந்தப் பயத்துக்கு ‘மோனோபோபியா’ (Monophobia) என்று பெயர். உலகம் முழுவதும் இந்த போபியா பரவலாக இருக்கும் ஒன்றுதான். பாதிக்கப்பட்டவர்களால் குறுகிய காலம்கூடத் தனியாக இருக்க முடியாது. உறங்க, சாப்பிட அல்லது தனியாகக் குளியலறை செல்லக்கூட மறுப்பார்கள். மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகளும் இவ்வகை பயத்தினால் பாதிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்: நிலையற்ற உணர்வு, மூச்சுத்திணறல், விரைவான இதயத்துடிப்பு, தசைப்பிடிப்பு, வியர்வை, மார்பு வலி, அசௌகர்யம், குமட்டல், நடுக்கம் அல்லது கூச்ச உணர்வு, பாதுகாப்பின்மை, பதற்றம், மனச்சோர்வு மரண பயம், கட்டுப்பாட்டை இழத்தல், மயக்கம் போன்றவை.

இதற்கான காரணங்கள் பல. குழந்தைப் பருவத்தில் யாரேனும் பயமுறுத்திய அனுபவம் ஏதாவது இருந்திருக்கலாம். நீண்டகால மன அழுத்தம், பதற்றம் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகள் மோனோபோபியாவுக்கு வழிவகுக்கலாம். பாதிக்கப்பட்டவர் தன் பயத்தின் காரணமாக நம்பிக்கையான ஒரு நபரை எப்போதும் கூடவே வைத்திருப்பார்.
சிகிச்சை: தனிநபர் சமாளிக்கும் உத்திகள் மற்றும் சுய உதவி நுட்பங்கள் போன்றவை தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள உதவுகின்றன. மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளரைச் சந்தித்துச் சிகிச்சை பெறலாம். பேச்சு சிகிச்சை, புலனுணர்வு சார்ந்த சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படலாம். தியானம், சுவாசப் பயிற்சி, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது ஆகியவை பலனளிக்கும்.
- இ.நிவேதா