ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது நபரின் வயிற்றிலிருந்த, 116 ஆணிகள், நீளமான வயர், இரும்புக் குண்டுகள் ஆகியவற்றை அகற்றி அம்மாநில அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் போலோ சங்கர். தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்துவந்த இவருக்கு, அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், வயிற்றுவலி தீராததால், எக்ஸ்-ரே எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் ஏதோ சில பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதில், அவர் வயிற்றிலிருந்து 116 இரும்பு ஆணிகள், நீண்ட வயர், இரும்புக் குண்டுகள் ஆகியவை வெற்றிகரமாக அகற்றப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அனில்சைனி கூறியதாவது,
``பெரும்பாலான இரும்பு ஆணிகள் 6.5 செ.மீ என்கிற அளவில் இருந்தன. தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர, அறுவைசிகிச்சைக்குப் பிறகு இயல்பான நிலையில் உள்ளார். இவ்வளவு இரும்புப் பொருள்களை அவர் எப்படி விழுங்கினார் என அவரின் குடும்பத்தினரிடம் கேட்டோம் அவர்களுக்கும் ஏதும் தெரியவில்லை என்றார்கள்.''