பிரசவத்தில் தாய், சேய் இறப்பு, நோய்களை வரும் முன் காப்பதற்கான நடவடிக்கைள், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற 23 அம்சங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு சுகாதாரப் பட்டியல் வெளியிடப்படும். 2017 முதல் 2018 வரை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஒத்துழைப்புடன் ஆய்வு நடத்தி அதற்கான அறிக்கையை `நிதி ஆயோக்' வெளியிட்டுள்ளது. கடந்த 2015 - 16-ம் ஆண்டுக்கான சுகாதாரப் பட்டியலில் கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து மூன்றாவது இடம்பிடித்த தமிழகம் தற்போது 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரப் பட்டியல், பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தையும் ஆந்திரா, மகாராஷ்டிரா முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. சிறிய மாநிலங்களில் மிசோரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா ஆகியவை உள்ளன.

கடந்த வருடம் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், இப்போது 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழகம் பின் தங்கக் காரணம் என்ன என்று தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.

'' `நிதி ஆயோக்' கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட சிறப்புப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த தமிழகம், ஆறு மாதத்துக்குள் எப்படி 9-வது இடத்துக்குச் செல்லும்..? தரவுகளைக் கணக்கிடுவதில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்கள் 80 சதவிகிதம் எனக் கணக்கிட்டுள்ளனர். தமிழகத்தில் நடக்கும் ஐந்து பிரசவங்களில் ஒன்று வீட்டில் நடப்பதாகச் சொல்கிறார்கள். தமிழகத்தின் எந்தப் பகுதிகளிலும் அப்படியொரு நிலை கிடையாது. ஆம்புலன்ஸில் அழைத்துவரும்போது சில பிரசவங்கள் நிகழ்கின்றன. இதுதவிர தவறான வழிகாட்டுதலால் ஒரு சில பிரசவங்கள் வீடுகளில் நடக்கின்றன. அவர்கள்மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பது 80 சதவிகிதம் எனச் சொல்லும் அவர்களது அறிக்கையிலேயே பிறப்புப் பதிவில் தமிழகம் 100 சதவிகிதம் என்றிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 9.5 லட்சம் குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன. ஆனால், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து `நிதி ஆயோக்' கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால்தான் கணக்கு தவறாக வருகிறது. எங்கள் கணக்குப்படி 96 சதவிகித பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. அதை உறுதியாகச் சொல்லமுடியும்.

நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் பின்பற்றும் சில வழிமுறையைத்தான் இந்திய சுகாதாரத்துறை பின்பற்றுகிறது. ஆனால், அதில் தமிழகம் பின் தங்கியிருப்பதாக தவறான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதில் தமிழகம் 76 சதவிகிதம் என்று சொல்கிறார்கள். எங்கள் கணக்குப்படி 96 சதவிகிதம். எவ்வளவு குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்பதை வைத்துக் கணக்கிடாமல், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்து உத்தேசமாகக் கணக்கிட்டதால்தான் தவறுகள் நடந்திருக்கின்றன. மேற்கண்ட இரண்டையும் சரிசெய்தாலே தமிழகம் இரண்டாவது இடத்துக்கு வந்துவிடும்.

இதுதவிர, தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களில் பற்றாக்குறை தமிழகத்தில்தான் குறைவு. தமிழகத்தில் மொத்தம் 19 ஆயிரம் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முதுகலை படிக்கப்போகும்போது, பணி ஓய்வு பெறும்போது சில காலியிடங்கள் ஏற்படும். அதையும் உடனடியாக நிரப்பிவருகிறோம். கடந்த மார்ச் மாதத்தில் காலியாக இருந்த 1,000 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. உண்மை இப்படியிருக்க தவறான மதிப்பீடுகளால் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் தலைமையில் பேசி முடிவெடுத்து, மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதுவோம்'' என்றார் அவர்.