தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவப் பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் கட்டப்பட்டது. இதற்கான கட்டட பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு கட்டடத்தை, டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குநர் டாக்டர் ரகு, இந்திய ஹோமியோபதி மருத்துவத்தின் இணை இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இந்தக் கட்டடத்தின் 3 தளங்களில் ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைக்காக தனித்தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. கட்டடத்தை ஆய்வு செய்த மருத்துவக்குழுவினர், ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆய்வின் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு மிக விரைவில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது மதுரை, தேனி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ஆயுஷ் மருத்துவர்களிடம் விசாரித்தோம். ``கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆயுஷ் ஒருங்கிணைந்த மருத்துவப் பிரிவு கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா காலத்தில் இந்தக் கட்டடத்தை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க பயன்படுத்தினர். ஆனால் தற்போதும் இந்தக் கட்டடம் ஆயுஷ் மருத்துவத்துக்கு ஒதுக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்தக் கட்டடத்துக்கு நிதியுதவி வழங்கிய ஆயுஷ் ஆய்வுக்குழு வந்தபோது, மருத்துவப் பிரிவு இயங்குவது போல ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். சர்க்கரை நோய், கால் ஆணி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் தங்கி கண்காணிப்பில் வைத்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் தங்கும் வசதி இல்லாததால் நோயாளிகள் கேரளா மாநிலத்திற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் சில தனியார் ஆயுர்வேத மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளில் இலவச ஆயுர்வேத மருத்துவம் கொடுக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் செயல்படுகின்றனர். மேலும் சித்தா தமிழ் மருத்துவம் என்றும், ஆயுர்வேதம் சமஸ்கிருத மருத்துவம் என்றும் மொழி அரசியலை கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் ஆயுர்வேத சிகிச்சை மூலம் புரண குணமடைந்து சென்று தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சையை நாடி வருகின்றனர். மக்களின் நலன் கருதி ஆயுர்வேத மருத்துவத்துக்கு அரசு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.