மருத்துவ வரலாற்றிலேயே பெரிய திருப்புமுனையாகப் பன்றியின் இதயத்தை மனிதர் ஒருவருக்குப் பொருத்தியிருக்கின்றனர். அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். வேறு இதயத்தைப் பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் இருந்தார் அவர். இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கான அமெரிக்கச் சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். மரணம் நிச்சயம் என்பதால் இதனைச் சோதனை முயற்சியாக முயன்றிருக்கிறார்கள். இதையடுத்து மனிதர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் முடிந்து மூன்று நாட்கள் ஆகிறதாம். மூன்று நாட்களாக பென்னட் ஆரோக்கியமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயத்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் முயற்சி ஏற்கனவே நடைபெற்றிருக்கிறது. விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பயன்படுத்தும் முயற்சியில் இதுவரை பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. 1984-ல் கூட இறந்து கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு, குட்டி பபூனின் இதயத்தைப் பொருத்தியிருக்கின்றனர். ஆனால், அந்த குழந்தை 21 நாட்கள் மட்டுமே பபூனின் இதயத்துடன் உயிர் வாழ்ந்திருக்கிறது.

மனிதர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது. இதில் நம்பிக்கையான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதயம் மட்டுமல்லாது, சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தவும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகெங்கும் உறுப்பு தானத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.