
வியர்வை வாடை விரட்டுவோம்!
வியர்வை.... உடல் தன்னைக் குளிர்வித்துக்கொள்ள இயற்கை அமைத்துக்கொடுத்த வழி. அது உடலுக்கு அரணாக இருப்பதோடு, பல தருணங்களில் அசௌகர்யத்தையும் தருவதுண்டு. குறிப்பாக, வியர்வை வாடை. உடலில் ரோமங்கள் உள்ள பகுதிகளில் அதிகம் வியர்க்கும். அந்தப் பகுதிகளில் `அபோக்ரைன்' என்கிற சுரப்பி இருக்கும். அது 'பெரோமோன்ஸ்' என்கிற ரசாயனத்தை உற்பத்தி செய்யும். அந்த ரசாயனத்துக்கென பிரத்யேகமான வாடை ஒன்று உண்டு. அதுதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம்.

வியர்வை வாடையைக் கட்டுப்படுத்த உடலை `டீடாக்ஸ்' செய்ய வேண்டியது அவசியம். அதாவது உடலின் உள்ளுறுப்புகளைச் சுத்தம்செய்வது. உடலை இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்வதற்கான சில வழிகள்...
* தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது உடலிலுள்ள அனைத்து அசுத்தங்களையும் வெளியேற்றிவிடும்.

* ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கிர்ணி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிடலாம். இதிலுள்ள வைட்டமின் சி, குடல் சுத்திகரிப்புக்கு உதவும்.
* பசலைக்கீரை, முட்டைகோஸ், குடமிளகாய் போன்ற பச்சைக் காய்கறிகள், கீரைகள் அன்றாட மெனுவில் இடம்பெறுவது நல்லது. அவற்றிலுள்ள நார்ச்சத்து உடலிலுள்ள நச்சுகளை நீக்கும்.
* உடலில் உள்ள நச்சுகளை நீக்க கிரீன் டீ குடிப்பதும் உதவும்.
* பசுமையான மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்த சூழலில் தினமும் சிறிது நேரம் நடக்கலாம். உடலுக்குள் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் ஆக்ஸிஜனுக்கு உண்டு.
