
கல்லீரல் சிகிச்சையில் கலக்கல் சாதனை!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாலத்தீவைச் சேர்ந்த ஒரு வயதுக் குழந்தை ஃபாத்திமாத்துக்கு, பிறக்கும்போதே பித்தப் பையில் அடைப்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்குப் பித்தப் பையை அகற்றும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதன் பிறகும் மஞ்சள்காமாலை குறைந்ததே தவிர, கல்லீரலில் நோய்த் தொற்று தொடர்ந்து ஏற்பட்டது. சென்னை குளோபல் மருத்துவமனையின் டாக்டர் நரேஷ் சண்முகம், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரைத்து இருக்கிறார். குழந்தையின் உறவினர் ஒருவர் தன்னுடைய கல்லீரலில் சிறிய பகுதியைக் குழந்தைக்குத் தானமாகக் கொடுக்க, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது.
'கல்’வெட்டில் பொறிங்கப்பா!
கறிவேப்பிலைக்குத் தடை?

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் நச்சுப் பொருட்கள் இருப்பதாகக் கூறி 'ரெட் அலர்ட்’ எச்சரிக்கை செய்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள். கேரள வேளாண் பல்கலைக்கழக ஆய்விலும் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் மேட்டுப்பாளையம் கறிவேப்பிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கறிவேப்பிலை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்யும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கறிவேப்பிலைக்கே வேப்பிலை அடிக்க வேண்டிய கதியா?
சபாஷ் தமிழகம்!
இந்தியாவிலேயே முன்னோடியாக 'மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக மாநில ஆதார வள மையம் சென்னையில் அமைக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. இதன்படி மாற்றுத்திறனாளிகளின் குறைபாட்டினை அறிந்து சிகிச்சை மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்க இந்த மையம் வழிவகை செய்யும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறைபாடுகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் தனிப் பிரிவு உருவாக்கப்பட இருக்கிறது.
ஓராண்டுச் சாதனைகளில் உருப்படியான சாதனை!

தாமதித்தால் கொழுப்பு வரும்!
நேரம் கடந்து தாமதமாகச் சாப்பிடுபவர்களுக்கு 'உடலில் கொழுப்புச் சத்து உருவாகும்’ என்று கண்டுபிடித்திருக்கிறார் கலிஃபோர்னியாவில் இருக்கும் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே என்ற இந்திய மருத்துவர். எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் தாமதமாகத் தீனி போட்டு வளர்க்கப்பட்ட எலிகளுக்கு கொழுப்புச் சத்து அதிகமானது தெரியவந்துள்ளது. மனிதர்கள் காலதாமதாகச் சாப்பிட்டாலும் கொழுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.
தாமதத்தின் தண்டனை தடிமன்?!
இதோ, இதய பம்ப்!
'மாசிவ் ஹார்ட் அட்டாக்’ என்னும் கடுமையான மாரடைப்பு, ஏற்பட்டால் இதயம் செயல் இழக்கும் ஆபத்து உண்டு என்பது தெரியும். அப்படி நடந்தால், இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டு 90 சதவிகித உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மாசிவ் ஹார்ட் அட்டாக் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 56 வயதான நோயாளி ஒருவரை 'எக்மோ’ (ECMO - Extra Corporeal Membrane Oxygenation) தொழில்நுட்பச் சிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்திருக்கிறது ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை.

'எக்மோ’ என்பது நவீன வசதிகள்கொண்ட (கைக்கு அடக்கமான) சிறிய செயற்கை இதய பம்ப். சுமார் ஒரு மாத காலம் வரை இந்த செயற்கை பம்ப், இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பிவைக்கும். ஹெச்1என்1 இன்புளூயன்ஸினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூச்சுவிடுதலில் சிரமப்படும் மெகோனியம் அஸ்பிரேஷன் சின்ட்ரோம் ( Meconium aspiration syndrome) எனப்படும் இந்த நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளுக்கும்கூட இந்தக் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும்.
பம்ப் இருக்க பயம் ஏன்?
பிரசவ சாதனை!

தமிழகம் முழுவதும் 1,612 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நிதி ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 57,564 பிரசவங்கள் நடந்துள்ளன. நமது மாநிலத்தில் நடந்த மொத்தப் பிரசவங்களில் இது 27.2 சதவிகிதமாகும்.
இந்தச் சாதனையை முறியடிக்க புதுசா யாரும் பொறந்தாத்தான் உண்டு!