உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி, பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பனந்தோப்பு தெருவில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வீட்டிலேயே குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் திடீரென, ஐஸ்க்ரீம் தயாரித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய அனுமதி பெறாமல் சுகாதாரமற்ற முறையில் குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரித்து, விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
உடனடியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குல்ஃபி ஐஸ்க்ரீம், ஐஸ் கட்டிகள், குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை நகராட்சித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் உரிய அனுமதி பெறாமல் மேற்கொண்டு குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் குல்ஃபி ஐஸ்க்ரீம் பொருள்களை, நகராட்சிக் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் சென்று அழித்தனர்.
இது குறித்து நகராட்சி ஆய்வாளர் ராமையனிடம் பேசியபோது, ``எப்போதும்போல நாங்கள் ரவுண்ட்ஸ் சென்றபோது ஒரு வீட்டில் சுத்தமற்ற நிலையில் குல்ஃபி தயாரிப்பதைக் கண்டறிந்தோம். எந்த ஒரு சான்றிதழும் இல்லாமல் குல்ஃபி தயாரிப்பது தெரியவந்தது. அதையடுத்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்" என்றார்.