`இந்த வெறுமை விடாதா, ஒரு சிறகு விழாதா’ எனத் தன்னுடைய தனிமையின் ஏக்கங்களில் களைத்து, துணையின் நிழலைத் தேடாதவர்கள் இல்லை. தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டால் வரம்; தள்ளப்பட்டால் சாபம். இந்த சாபத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு சுகந்த உறவுகள் ஏற்படுமா என்பதெல்லாம் தெரியாது; ஆனால், விரைவாகவே வயதாகும் என்கிறது ஆய்வு.

அதுவும், தினசரி புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் வயது அதிகரிப்பைவிட தனிமையிலும் சோகமாகவும் இருப்பவர்களுக்கு விரைவிலேயே வயது மூப்பு ஆகும் என்கிறது ஆய்வு முடிவு.
Deep Longevity என்ற பயோடெக்னாலஜி நிறுவனம், சுமார் 12,000 சீன பெரியவர்களிடம் உளவியல் காரணங்கள் எவ்வாறு நம்முடைய வயதை அதிகரிக்கிறது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டது.
அதற்காக, `Ageing Clock’ என்ற டிஜிட்டல் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில், அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இதில் புகைபிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களைக் காட்டிலும் தனியாக இருப்பது, கவலையாக இருப்பது வயதாவதை அதிகரிக்கிறது என்று சோதனையின் முடிவு கண்டறிந்தது.

ஆராய்ச்சியின் முடிவில்,
* புகைபிடிப்பவர்களின் வயதாகும் வேகம் 1.25 ஆண்டுகள் அதிகமாக உள்ளது.
* தனிமையாக இருப்பது போன்ற உணர்வோடு இருப்பவர்களுக்கு, வயதாகும் வேகம் 1.65 ஆண்டுகள் வரை துரிதமாகிறது.
* தனிமை மட்டுமே வயதைத் துரிதப்படுத்தாமல், பயம், நம்பிக்கையின்மை, மனஅழுத்தம், சந்தோஷமின்மை மற்றும் குறைந்த தூக்கம் போன்ற ஒட்டுமொத்த உளவியல் சிக்கலும் சேர்ந்தே, வயது மூப்பைத் தீவிரப்படுத்துகிறது.
* திருமணம் ஆகாமல் தனிமையில் இருப்பவர்களுக்கும் வயதாகும் வேகம் 0.35 வருடமாக அதிகரித்துள்ளது.
புகைபிடிக்கும் பழக்கத்தைவிட தனிமையாக இருப்பவர்களின் வயது அதிகரிப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.