Published:Updated:

Doctor Vikatan: குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகியும் சுரக்கும் தாய்ப்பால்; புற்றுநோயின் அறிகுறியா?

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by Nicolas Postiglioni from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகியும் சுரக்கும் தாய்ப்பால்; புற்றுநோயின் அறிகுறியா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by Nicolas Postiglioni from Pexels )

எனக்கு 26 வயது. குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் மார்பகத்தில தாய்ப்பால் மாதிரி திரவம் சுரந்துகொண்டே இருக்கிறது. இதனால் எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு இது duct ectasia என்ற பிரச்னை என்கிறார்கள். இது சரியாகிவிடுமா?

- சாரா பானு (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``மார்பகங்களில் தாய்ப்பாலைக் கொண்டுபோகவென பிரத்யேக குழாய்கள் இருக்கும். அவை மில்க் டக்ட்ஸ் (Milk Ducts) என அழைக்கப்படும். இந்தக் குழாய்கள், மார்பகங்களின் நிப்பிள் பகுதிக்குக் கீழே சில நேரம் விரிவடைந்து, பெரிதாகலாம். அதன் விளைவாகப் பால் கொண்டு போகும் குழாய்களில் திரவம் நிரம்பி, அந்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தடை ஏற்படலாம். அதைத்தான் நாம் `டக்ட் எக்டேசியா' (Duct ectasia) என்று சொல்கிறோம். எக்டேசியா என்பது விரிவடைதலைக் குறிக்கும். இந்தப் பிரச்னைக்கு அறிகுறிகள் பெரிதாக இருக்காது. சிலருக்கு மட்டும் மார்பகக் காம்புகளிலிருந்து, தொந்தரவு கொடுக்கும் கசிவு இருந்துகொண்டே இருக்கலாம். சிலருக்கு மார்பகங்களில் வலி இருக்கலாம். பாலைக் கொண்டுபோகும் குழாய்கள் அடைபடுவதால் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு மாஸ்ட்டிட்டிஸ் (Mastitis) என்ற நிலையும் வலியும் இருக்கலாம். இந்தப் பிரச்னை பெரும்பாலும் 45 - 55 வயதுப் பெண்களுக்குத்தான் வரும்.

அதாவது மெனோபாஸுக்கு முந்தைய `பெரிமெனோபாஸ்' காலகட்டத்தில் வரும். சிகிச்சைகள் ஏதும் தேவைப்படாமலேயே இது சரியாகிவிடும். ஒருவேளை இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தால் வலியும், மார்பகக் காம்புக்குக் கீழே சின்ன கட்டிபோன்றும் இருக்கலாம்.

அதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகளே போதுமானதாக இருக்கும். எதற்குமே சரியாகவில்லை என்ற நிலையில் சம்பந்தப்பட்ட அந்த ஒரு குழாயை மட்டும் அறுவைசிகிச்சை செய்து நீக்குவோம். இது மிக அரிதாகச் செய்யப்படுவது.

டக்ட் எக்டேசியா பிரச்னை இருப்பவர்களுக்கு மார்பகக் காம்புகளில் அழுக்கான அல்லது கறுப்பான திரவக் கசிவு இருக்கலாம். நிப்பிளைச் சுற்றியுள்ள பகுதி வலியுடனோ, சிவந்தோ இருக்கலாம். குழாயின் அடைப்பு காரணமாக, மார்பகங்களில் கட்டி இருப்பது போன்று தோன்றலாம். நிப்பிள் உள்ளிழுத்தது போல இருக்கலாம்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

இந்த அறிகுறிகளையெல்லாம் வைத்து இதை மார்பகப் புற்றுநோயாக நினைத்துக் குழம்பிக்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்களாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். மருத்துவரை அணுகி, இது டக்ட் எக்டேசியாவா அல்லது புற்றுநோயா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். டக்ட் எக்டேசியா பிரச்னை, புற்றுநோய்க்கான அபாயத்தை நிச்சயம் அதிகரிக்காது. வெதுவெதுப்பான சூட்டில் மார்பகங்களில் வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியும் குறையும், டக்ட் எக்டேசியா பாதிப்பும் குறையும்.

மார்பகத் திசுக்களில் வயதாக, ஆக சில மாற்றங்கள் வரும். அதனால்தான் இந்தப் பிரச்னை 45 வயதைத் தாண்டியவர்களையே பாதிக்கும் என்கிறோம். அரிதாக இளவயதிலும் சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். நிப்பிள் உள்ளடங்கி இருப்பதால் ஏற்படும் தொற்றின் காரணமாகவும் வரலாம்.

நிப்பிள் உள்ளடங்கி இருந்தால் அவசியம் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் அல்லது மேமோகிராம் செய்து பார்த்தால்தான் அது டக்ட் எக்டேசியாவா, புற்றுநோயா என உறுதிசெய்ய முடியும். கூடவே உங்களுக்கு புரொலாக்டின் என்ற ஹார்மோன் அளவையும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அது அதிகமாக இருந்தாலும் பால் சுரப்பு தொடர்ந்துகொண்டே இருக்கலாம்.

புற்றுநோய் பயம் தவிர்த்து, அடிப்படையான பரிசோதனைகளைச் செய்து அதற்கேற்ற சிகிச்சைகளைத் தொடருங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?