மலச்சிக்கல் பல்வேறு நோய்களுக்கு மூலகாரணமாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபட எளிய வழிமுறைகள் சிலவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன் கூறுகிறார்.

“மலச்சிக்கல், இது நம்மில் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு பிரச்னை. இது சிலருக்கு தினம் தினம் பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவர்களாகிய நாங்கள், எங்களிடம் வரும் நோயாளிகளிடம்,`நீங்கள் இயல்பாக மலம் கழிக்கிறீர்களா?' என்ற கேள்வியைக் கேட்கத் தவறுவதில்லை.
`உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறதா?' என்று கேட்டால்,`எனக்கு மலச்சிக்கல் பிரச்னையெல்லாம் கிடையாது...' என்றே பலரிடமிருந்து பதில் வரும். `இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் வாழைப்பழம் போன்ற பழங்கள் சாப்பிடும் பழக்கம் உண்டா, காலையில் கண் விழித்ததும் இயல்பாக மலம் கழிப்பீர்களா. டீ, காபி அருந்திய பிறகுதான் மலம் கழிக்க முடிகிறதா?' என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்போம். இதற்கு அவர்கள் பதிலளிப்பதை வைத்தே அவருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிவோம்.

ஒருவர் இரவில் பழங்கள் மற்றும் காலையில் டீ, காபி போன்றவற்றை சாப்பிட்டால்தான் மலம் கழிக்க முடியும் என்றால் அவருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது என்று அறியலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி பல நோய்களுக்கு மூலகாரணமே மலச்சிக்கல்தான். ஒரு மனிதனுக்கு மலம் சரியாக வெளியேறினால் மனம் அமைதியாக இருக்கும். மலம் சீராக வெளியேறவில்லை என்றால் உடல்நலம் பாதிப்பதுடன் மனமும் பாதிக்கப்படும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமென்றால், நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதேபோல உணவு உட்கொண்ட ஒரு மணிநேரம் கழித்து சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து உட்கொள்ள வேண்டும். இதைத் தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்வதால் நாளடைவில் மலச்சிக்கல் என்பதே இருக்காது” என்கிறார் ஆர்.பாலமுருகன்.