ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்'. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
`ஆவி பிடித்தல்' யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனாவுக்கான தீர்வுகள் என்ற பெயரில் தவறான செய்திகளும் தகவல்களும்தான் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவுகின்றன. அவற்றில் ஒன்று,`நீராவி பிடித்தால், உடலுக்குள் இருக்கும் கொரோனா வைரஸை அழித்துவிடலாம்' என்பது.

இந்த ஆவி பிடித்தல் வைத்தியம் மூலம் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையானது என்பதை அறிய, நுரையீரல் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸை அணுகினோம்.
``முதல் விஷயம், கொரோனா வைரஸ் என்பது, சாதாரண சளித்தொந்தரவல்ல. சாதாரண சளியும் கொரோனா வைரஸ் தொற்றும் உடலுக்குள் ஏற்படுத்தும் தாக்கமும், பாதிப்பும் வெவ்வேறாக இருக்கும். சொல்லப்போனால், இரண்டுக்கும் அறிகுறிகளேகூட வேறுபடும். கோவிட் -19 பாதிப்பில் மூக்கொழுதல், வறண்ட இருமல், தலைவலி, வாசனையை அறியும் திறன் குறைவு போன்ற கூட்டு அறிகுறிகள் இருக்கும். சில நேரங்களில், அறிகுறிகளே இல்லாமல்கூட ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்.
நீராவி பிடித்தல் சிகிச்சை, சாதாரண சளித் தொந்தரவுக்கு சொல்லப்படும் பாட்டி வைத்தியம் மட்டுமே. கொரோனா வைரஸ் அழிப்புக்கான வழிமுறையாக அது நிச்சயம் இருக்காது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நீராவி பரிந்துரை, தவறான பரப்புரை மட்டுமே.
நீராவி என்றில்லை, வெந்நீர் குடிப்பது / வெந்நீரில் குளிப்பது போன்றவை கொரோனா வைரஸை அழிக்கும் என்றெல்லாம்கூட ஒரு சிலர் சொல்கின்றனர். இந்தத் தகவல்களுக்கெல்லாம் அடிப்படை, `அதிக வெப்பத்தில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும்' என்ற கருத்தாக்கம்தான். ஆனால், இந்தத் தகவல் நிரூபிக்கப்பட்டதில்லை.

ஆவி பிடிக்கும்போது என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும்... விளக்குகிறார் அவசர சிகிச்சை மருத்துவர் முகமது ஹக்கீம்.
``ஆவி பிடித்தலால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு வருவோர்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருக்க `ஆவி பிடித்தலும்' ஒரு தற்காப்பு முறை என்று மக்கள் தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். உண்மையில், ஆவி பிடிப்பதன் மூலம் எந்தவொரு வைரஸ் அல்லது பாக்டீரியாவையும் அழிக்க முடியாது. நமக்கு ஜலதோஷம் அல்லது சளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மூக்கடைப்பிலிருந்து உடனடியாக விடுபட மட்டுமே `ஆவி பிடித்தல்' உதவுகிறது. தவிர நோய்க்கிருமிகளால் நமக்கு ஏற்படும் காய்ச்சலைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ இதனால் முடியாது. சொல்லப்போனால் `ஆவி பிடித்தல்' என்பது ஒரு மருத்துவ முறையே அல்ல. மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும் ஒரு எளிய வழி. அவ்வளவே.
சூடான வெந்நீரிலிருந்து வரும் ஆவியை சுவாசிக்கும்போது நம் மூச்சுக்குழல் சற்று வெதுவெதுப்பான வெப்பத்தை உணரும். இந்த வெப்பம் மூச்சுக்குழலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைத்துச் சிக்கலற்ற சுவாசத்துக்கு உதவும். சிலர் ஆவி பிடிக்கிறேன் என்ற பெயரில் தைலம் அல்லது மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மாத்திரையை வெந்நீரில் கலந்து அதில் வரும் ஆவியை சுவாசிக்கின்றனர். இன்னும் சிலர் வெந்நீரில் பச்சிலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கின்றனர். இவை எல்லாம் முற்றிலும் தவறானவை. இதனால் மூச்சுக்குழல் மற்றும் கண்களில் எரிச்சல், அலர்ஜி ஏற்படலாம்.

சிலரோ அதிக சூடான நீரில் ஆவி பிடித்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று, தண்ணீரை 100 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைத்து அப்படியே ஆவி பிடிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது வெந்நீர் உடல் மீதோ, கண்களிலோ பட்டு கொப்புளங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா காலத்தில் சிலர் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளைக்கூட போர்வையைப் போர்த்தி ஆவி பிடிக்க வைக்கின்றனர். வெந்நீரைச் சரியாகக் கையாளத் தெரியாத குழந்தைகளைத் தனியே ஆவி பிடிக்க வைக்கும்போது அவர்கள் சூடான நீரை மேலே கொட்டிக்கொள்வதற்கான ஆபத்து அதிகம். அதனால் குழந்தைகளை ஆவிபிடிக்க வைக்கும்போது பெற்றோர்கள் கூடவே இருக்க வேண்டும்.
ஆவி பிடிக்க ஓரளவுக்குக் கொதிக்க வைத்த வெந்நீர் மட்டுமே போதுமானது. அதில் தைலம், மாத்திரைகள் அல்லது பச்சிலைகளைச் சேர்க்கத் தேவையில்லை. அதுபோல் தினமும் ஆவிபிடிக்கக் கூடாது. உங்களுக்கு ஜலதோஷம் அல்லது மூக்கடைப்பு ஏற்பட்ட நேரத்தில் மட்டும் செய்தால் போதுமானது.
ஒருவேளை நீங்கள் ஆவி பிடிக்கும்போது வெந்நீர் உடல் மீது கொட்டி கொப்புளங்களையோ காயங்களையோ ஏற்படுத்தினால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். தவிர வெந்நீர் கொட்டியதால் ஏற்படுத்திய காயத்தில் இங்க், தோசை மாவு என்று எதையாவது தேய்த்து நீங்களே வைத்தியம் செய்துகொள்ளக் கூடாது."
கொரோனா சிகிச்சையில் `ஆவி பிடித்தல்' பயன் தருமா என்ற கேள்வியை சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டிருந்தோம். அப்போது பேசிய அவர், ``கபம் எனப்படும் இருமல், சளிபோன்ற பிரச்னைகளுக்கு `ஆவி பிடித்தல்' சிகிச்சை முறையை நாம் பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறோம். எனவே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல் அறிகுறிகளிலிருந்து விடுபடவும் `ஆவி பிடித்தல்' சிறந்த தீர்வாக இருக்கும். சூடான வெந்நீரில் கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, கிராம்பு போன்றவற்றை போட்டு ஆவி பிடிக்கும் போது மூக்கடைப்பிலிருந்து விடுபட்டு சீராகச் சுவாசிக்க முடியும். மேலும் சளியின் காரணமாக மூச்சுக்குழலில் படிந்திருக்கும் `மியூகஸ் '(Mucous) என்ற கோழைப் பொருள் வெளியேறி தடையற்ற சுவாசத்திற்கு வழிவகுக்கும்.
கொரோனா சிகிச்சையில் `ஆவி பிடித்தல்' எந்த அளவியில் உதவுகிறது என்று சென்ற வருடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், ``சூடான நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் காரணமாக கொரோனா வைரஸில் இருக்கும் புரதம் அழிந்து, வைரஸின் வீரியத்தைக் குறைப்பதாக" முடிவுகள் வெளியாகின. ஆனால் இவை சிறிய அளவிலான ஆய்வுகளே. இது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து குணமடைய `ஆவி பிடித்தல்' உதவுமா என்பதைத் தீர்மானமாகக் கூற முடியும். நான் பணிபுரியும் திருப்பத்தூர் சித்த மருத்துவ கோவிட் சிகிச்சை மையத்தில் சென்ற வருடத்தில் 600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு `ஆவி பிடித்தல்' சிகிச்சையும் வழங்கப்பட்டது. கொரோனாவால் ஏற்படும் இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட இந்த சிகிச்சை அவர்களுக்குப் பெரிதும் உதவியது" என்றார்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள நினைப்பவர்கள், இந்தச் சூழலில்...
* நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் இருங்கள்
* தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்
* பிஸிக்கல் டிஸ்டன்சிங்கைக் கடைப்பிடியுங்கள்
* சுய சுத்தத்தில், அலட்சியத்தோடு இருக்காதீர்கள்
* வைரஸ் தாக்கம் குறையும்வரை, உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.