உலகம் முழுவதும் சுமார் 45 கோடி பேர் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 80 சதவிகிதம் பேர் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க 'மனஅழுத்தம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் வருங்காலத்தில் மாபெரும் தலைவராவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கின்றன' என்கிறார் அமெரிக்காவில் மனநலப் பேராசிரியராகப் பணியாற்றும் நாசிர் கேமி.

2011-ம் ஆண்டு பேராசிரியர் நாசிர் கேமி எழுதிய 'எ ஃபர்ஸ்ட் ரேட் மேட்னஸ்' (A first - rate madness) என்ற புத்தகம் மிகவும் பிரபலம். அந்தப் புத்தகத்தில் நெருக்கடியை மிகவும் திறமையாகக் கையாண்ட தலைவர்கள் மனநலப் பாதிப்பு கொண்டவர்களாகவோ, அசாதாரண மனநலன் கொண்டவர்களாகவோ இருக்கிறார்கள். நெருக்கடி நிலைமையைச் சமாளிக்கத் தெரியாதவர்களே மனதளவில் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அரசியல், இலக்கியம் எனப் பல்வேறு தளங்களிலும் உன்னத நிலையை அடைந்த பலரும் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் மாபெரும் தலைவர்களாக இருந்த 10 பேரைப் பற்றியும் அவர்கள் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டார்கள் என்றும் பார்ப்போம்.
ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவின் 16-வது அதிபராகப் பதவி வகித்தவர் ஆபிரகாம் லிங்கன். இளம் வயதிலேயே தாயை இழந்து துன்பத்துக்குள்ளானவர். அத்துடன் வறுமையில் வாடிய அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது அவர் நண்பர்களின் கடிதங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அவர்தான் அமெரிக்காவின் மிகவும் வலிமையான அதிபராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் தென் பகுதி தனியாகப் பிளவுபட இருந்த நேரத்தில் மிக உறுதியான நடவடிக்கை எடுத்ததுடன், அடிமை முறையை ஒழிக்க தீவிர முடிவு எடுத்தவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அவர் பேசிய பேச்சு மிகவும் பிரபலமானது.
பீத்தோவன்
உலகமே கொண்டாடும் இசைமேதை பீத்தோவன். இவர் தன் இளம் வயதில் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். 26 வயதில் அவருக்கு காது கேட்காமல் போனது. இப்படியாக பல்வேறு நோய்களின் தாக்குதல்களுக்குள்ளான அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

'பைபோலர் டிஸ்ஆர்டர்' எனப்படும் மனஅழுத்தம் மற்றும் மேனியா என்ற இருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இன்றுவரை இசை உலகமே கொண்டாடும் சிம்பொனிகளை உருவாக்கி மக்களின் மனதில் வாழ்கிறார்.
வின்ஸ்டன் சர்ச்சில்
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், தனது பேச்சாற்றல் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்ததன்மூலம் வலிமையான தலைவராக உயர்ந்தவர். சிறந்த எழுத்தாற்றலைக் கொண்ட அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். அவர் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் வலிமையைத் திறமையாக வெளிப்படுத்தினார்.
அவர் ஆற்றிய உரைகளில், 'கடலில் போரிடுவோம், விண்ணில் போரிடுவோம், மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம், பள்ளத்தாக்குகளிலும் அகழிகளிலும் போரிடுவோம், தெருக்களில் போரிடுவோம், சந்துக்குச் சந்து, வீட்டுக்கு வீடு போரிடுவோம். ஆனால், ஒரு போதும் சரணாகதி அடைய மாட்டோம்' என்பது அடிக்கடி பலரால் மேற்கோள் காட்டப்படுவதாக உள்ளது.

இத்தகைய பெருமைக்குரியவரான சர்ச்சில், 'பைபோலர் டிஸ்ஆர்டர்' எனப்படும் மனப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். அடிக்கடி கோபம், மகிழ்ச்சி எனப் பல்வேறு நிலைகளுக்கு மாறிக்கொண்டிருந்த அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தார். அவர், தன்னை எப்போதும் ஒரு கறுப்புநிற வேட்டை நாய் துரத்திக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துடன் வாழ்ந்தார். இந்தநிலையில் அவருக்கு மனநலச் சிக்கல்கள் ஏற்படும்போதெல்லாம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் தீவிர அரசியல் வாழ்க்கைக்கு நடுவே 43 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
ஐசக் நியூட்டன்
அறிவியல் வல்லுநர்களில் மிகச் சிறந்தவராக மதிக்கப்படுபவர், சர் ஐசக் நியூட்டன். பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்த அவர் சிறு வயதிலேயே தாயையும் பிரிந்தார். ஆனாலும், தனக்கு இருந்த அறிவைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்குக் கொடுத்தார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளில் ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்த அவர், ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர். ஆட்டிசம், பைபோலர், மனச்சிதைவு எனப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டாலும், 'நியூட்டன் விதி' உள்ளிட்ட தன்னுடைய சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இப்போதும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
அடால்ஃப் ஹிட்லர்
உலகையே நடுநடுங்க வைத்த சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், ஜெர்மனியில் நாஜிக் கட்சியைத் தோற்றுவித்தவர். இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த அவர், அந்தப் போரில் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர். யூதர்கள்மீது தீராத கோபம் கொண்டதன் விளைவாகவே கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்.

தந்தையின் கொடுமையால் தாய் அவதிப்பட்டதை நேரில் பார்த்த ஹிட்லர் மனச்சிதைவு நோய்க்கு ஆளானார். அதனாலோ என்னவோ எதிரிகள்மீது தீராத வெறுப்பு கொண்டிருந்தார். அவருக்கு பூனையைக் கண்டால் பயத்தை உண்டாக்கும் 'ஐலூராபோபியா' என்ற நோய்ப் பாதிப்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சார்ல்ஸ் டிக்கன்ஸ்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரும்பிப் படிக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர், சார்ல்ஸ் டிக்கன்ஸ். வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்ததால் இளமையிலேயே தொழிற்சாலையில் கடினமான வேலைகள் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது தான் சந்தித்த மனிதர்கள், சம காலத்தில் தனக்கு அருகே வசித்தவர்கள் ஆகியோரை தன்னுடைய எழுத்துகளில் பிரதிபலித்தார். தனது சொந்த அனுபவத்தைக் கொண்டு 'ஆலிவர் ட்விஸ்ட்' நாவலை எழுதினார். எழுத்து உலகில் எல்லோராலும் மதிக்கப்படுபவராக விளங்கிய சார்ல்ஸ் டிக்கன்ஸ், மனஅழுத்தம், பைபோலர் டிஸ்ஆர்டர் பாதிப்புக்குள்ளானவர் என்பது விநோதம்.
நெப்போலியன்
பிரான்ஸ் நாட்டில் தனது 20-வது வயதில் போர் வீரனாக வாழ்க்கையைத் தொடங்கிய நெப்போலியன் படிப்படியாக உயர்ந்து நிகரில்லா மன்னனாக உயர்ந்தார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தை போர் முனையிலேயே செலவிட்டவர். நாடு பிடிக்கும் ஆசையால் உந்தப்பட்ட அவருக்கு 'ஆளுமைச் சிதைவு' எனும் நோய் இருந்திருக்கிறது.

அதனால் தனது சுய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் பாராட்டுகளை விரும்பக்கூடியவராகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வெறியுடனும் இருந்துள்ளார். 52-வது வயதில் மரணமடைந்த அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. புற்றுநோயால் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டாலும், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
லியோ டால்ஸ்டாய்
ரஷ்ய இலக்கியத்தின் பிதாமகனாகப் போற்றப்படும் டால்ஸ்டாய் எழுதிய 'போரும் அமைதியும்', 'அன்ன கரேனிகா' உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள் இப்போதுவரை பெருமளவில் சிலாகித்துப் படிக்குமளவுக்கு இருக்கிறது. 82 வயது வரை வாழ்ந்த அவர், தன்னுடைய மத்தியக் காலகட்டத்தில் பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதன் காரணமாக, தன்னுடைய மத நம்பிக்கை, புகழ், செல்வம் என அனைத்து அம்சங்களையும் ஒதுக்கித் தள்ளத் துணிந்தார். குறிப்பாக, மத நம்பிக்கையை முற்றிலுமாகக் கைவிட்டார். அதன் ஒரு பகுதியாகத் தனது இலக்கியப் பணியைக் கைவிட முன்வந்தார். அதனால், 'இலக்கியம் என்பது தேவையற்றது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட...' என்று எழுதினார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரும் பிரபலமான எழுத்தாளருமான அவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யுமளவுக்கு மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டார். இதுதொடர்பாக அவர் எழுதிய ஒரு கடிதத்தில், 'மனிதனுக்கு மட்டுமே தன்னைத்தானே கொல்லும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவன் தன்னையே கொன்றுகொள்ள வழியிருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த உளவியலாளராகக் கருதப்பட்ட டால்ஸ்டாய் உளவியல் சிக்கல்களால் உழன்றதுதான் வேதனையானது.
மகாத்மா காந்தி
பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவக் கல்விக்கான உளவியல்துறை தலைவராக உள்ள நாசில் கேமி எழுதிய 'எ ஃபர்ஸ்ட் ரேட் மேட்னஸ்' என்ற புத்தகத்தில், மகாத்மா காந்தி பற்றி குறிப்பிடும்போது, 'மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படிப்பவர்கள் அதில் அவர் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளை சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள்.

மகாத்மா காந்தி தனது சிறு வயதில் அவரின் நண்பருடன் சேர்ந்து ஒரு கோயிலுக்குச் சென்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை விளக்கியிருப்பார். அதைப் படிப்பவர்கள், சிறுவயது சம்பவம் எனச் சுலபமாக நினைப்பார்கள். ஆனால், அவரது இந்த சிறுவயது சம்பவத்துக்கும் பிற்காலத்தைய அகிம்சைக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது' எனப் பீடிகையாகக் குறிப்பிட்டுள்ளார்.
டார்வின்
மனித இனம் குரங்கிலிருந்து தோன்றியது என்பதைச் சொன்ன அறிவியல் அறிஞர், சார்லஸ் டார்வின். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளிப்படுத்திய அவர் விலங்குகள் குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டர். அதற்காக வெளியிடங்களுக்குப் பயணம் செய்தார்.

ஆனாலும், அவரது மனதில் தேவையற்ற அச்சம் எப்போதும் இருந்தது என்பதை அமெரிக்க மருத்துவ ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மனிதப் படைப்பு குறித்து அச்சமின்றி தனது கண்டுபிடிப்பை தெரிவித்த டார்வின், ஆய்வுகளுக்காகக் கடல் பயணங்களை மேற்கொண்டார். அப்போது தேவையற்ற அச்சத்தால் மன அழுத்தத்துடன் வாழ்ந்தது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது.