Guru Peyarchi Palangal 2023 to 2024 (Tamil) - மகரம்
மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
தவறு என்று தோன்றினால் தயங்காமல் தட்டிக்கேட்கும் மகர ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான மீனத்தில் அமர்ந்து உங்கள் முயற்சிகளை எல்லாம் முறியடித்துக்கொண்டிருந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை நான்காவது வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார்.
இனி செலவுகள் அதிகரிக்கும். வாய்வார்த்தைகளால் பிரச்னைகள் வரும். எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்க வேண்டியது அவசியம். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் விவாதங்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகும். மகனுக்கு படிப்பில் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலைக்கு முயல்பவர்களுக்கு எதிர்பார்த்த நாட்டிலிருந்து விசா கிடைக்கும்.
குருபகவான் ராசிக்கு 8,10,12 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் பலவிதங்களிலும் ஆதாயம் உண்டாகும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. அடிக்கடி அலர்ஜி அஜீரணம் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிப் புது வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சின்ன சின்ன உரசல்கள் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை
குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் சுமாரன பலன்களே உண்டாகும். நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டும். குல தெய்வக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். ஊர்க் காரியங்களில் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை
உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிர பகவானின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றிப் புது வாகனம் வாங்குவீர்கள். புதிய வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த வரம் கிடைக்கும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்வதால் வழக்குகளில் சாதகமான போக்கு நிலவும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.2023 முதல் 20.12.2023 வரை
குருபகவான் வக்ர கதியில் அசுவினி, பரணி ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வதால் எதிலும் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
வியாபாரிகள் : வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். அதைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகருங்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வேலையாள்கள் அவ்வப்போது பிரச்னை செய்வார்கள். புதிய அணுகுமுறைகளையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாகும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயமுண்டு.
உத்தியோகஸ்தர்கள் : மூத்த அதிகாரி உங்களைப் பாராட்டுவார். பதவியுயர்வு, சம்பள உயர்வு தாமதமானாலும் கிடைத்துவிடும். அயல்நாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். புதிய சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் அதற்கான சலுகைகள் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கடுமையான உழைப்பைத் தந்தாலும் புதிய பாதையில் சென்று வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.