’காக்காமுட்டை’ மணிகண்டன்டி.அருள் எழிலன்
தன் இரண்டாவது சினிமாவை வெளியிடும் பரபரப்பில் இருக்கிறார் 'காக்கா முட்டை’ மணிகண்டன். 'குற்றமே தண்டனை’... இதுதான் அவர் இயக்கி முடித்திருக்கும் படம். 'கிரைம் த்ரில்லரான 'குற்றமே தண்டனை’க்கு இசை... இளையராஜா!
'' 'காக்கா முட்டை’ வெற்றி நான் எதிர்பார்த்ததுதான். ஆனா, இந்த அளவு வரவேற்பை, நிச்சயம் எதிர்பார்க்கலை. நான் அடுத்து என்ன பண்ணப்போறேன்னு ஏக எதிர்பார்ப்பு. அது உண்டாக்கும் சுமை எனக்குள் இல்லாமல் நான் இயக்கிய படம் 'குற்றமே தண்டனை’. அதனால் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் இந்தப் படம் நிச்சயம் பதில் சொல்லும்'' - என்கிறார் மணிகண்டன்.
''இது 'காக்கா முட்டை’க்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு த்ரில்லர் களம். பொதுவா தப்பு பண்ற எல்லாருக்குமே தண்டனை கிடைச்சுடாது. பலர் குற்றம் செஞ்சுட்டு தண்டனையில இருந்து தப்பிடுவாங்க. அவங்க சந்தோஷமா வாழ்ற மாதிரி தெரியும். ஆனா, அது அப்படி இல்லை. சிலருக்கு அவங்க பண்ற தப்பே வாழ்க்கை முழுக்க தண்டனையாகிடும். அதான் படத்துக்கு இந்தத் தலைப்பு.

ஒரு பெண்ணின் கொலைதான் படத்தின் லீட். அந்தக் கொலையின் ஒரே சாட்சி, படத்தின் ஹீரோ. வங்கிக் கடனை வசூலிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் விதார்த், பார்வைக்குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளி. அவர் எப்படி அந்தக் கொலையைப் பார்க்கிறார், அந்தக் கொலை விதார்த் உலகத்தில் ஏற்படுத்தும் அதிர்ச்சியும் படிப்பினைகளுமே படம். பக்கத்து வீட்டுப் பெண்ணாக ஐஸ்வர்யா; விதார்த்துக்கு ஜோடியாக பூஜா. கண்ணாடியை உருக்கி பொம்மை செய்யும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நாசர் என திறமையான கலைஞர்கள்.

படம் மொத்தமா முடிக்கிற வரை இசை யாருனு ஃபிக்ஸ் பண்ணிக்கலை. என் மனசுல தோணின ஒரே பேர் இளையராஜா. படத்தில் ஹீரோவுக்குள்ள ஒரு பயணம் இருக்கு. அந்தப் பயணத்தின் சிறப்பே... மௌனம்தான். படத்துல ஒரு பாட்டுகூட இல்லை. அதனால் படத்தின் ஆன்மாவே இசைதான். ஆனா, பாடல்களே இல்லாத படத்துக்கு ராஜா சார் இசை அமைப்பாரானு ஒரு தயக்கம் இருந்தது. 'என் ரெண்டாவது படத்துக்கு நீங்க மியூசிக் பண்ணணும்’னு மட்டும் ராஜா சார்கிட்ட கேட்டேன். 'ம்... ம்...’னு மட்டும் சொன்னார். படத்தைப் பார்த்தவர் தொடர்ந்து ஏழு நாட்களில் ரீ-ரிக்கார்டிங் பண்ணி முடிச்சுக் கொடுத்தார். ஒவ்வொரு நாள் ரீ-ரிக்கார்டிங் முடிஞ்சதும், 'எப்படி வந்திருக்கு... திருப்தியா?’னு கேட்பார். ஒருநாள் ஒரு சீனில் பி.ஜி.எம் சேர்க்க குழுவினரைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். நான் அந்த இடத்தில் மியூசிக் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருந்தேன். ஆனா, அவர்கிட்ட எப்படிச் சொல்றதுனு தயங்கி நின்னேன். இசைக் குழுவினர் அவரோட சிக்னலுக்குத் தயாரா இருந்தப்ப, அந்த சீனை இன்னொரு முறை பார்த்தவர், 'இந்த இடத்தில் இசை வேண்டாமே! உங்களுக்கு வேணும்னா போட்டுத் தர்றேன்’னு சொன்னார். எனக்கு சந்தோஷம்... அதைவிட ஆச்சர்யம். ரீ-ரிக்கார்டிங் முடிந்த பிறகு அவர் பார்த்த சில படங்கள், அதோட காட்சியமைப்புகள் பத்தி நிறையப் பேசினார். அப்போதான், 'சார் நான் பண்ண 'காக்கா முட்டை’ படம் ரெண்டு தேசிய விருது ஜெயிச்சிருக்கு. நீங்க ஒருதடவை பார்க்கணும்’னு அவர்கிட்ட சொன்னேன். பார்த்தாரா என்னன்னு தெரியலை.''
''ஆச்சர்யமா ரிவ்யூ, ரெவின்யூ... ரெண்டுலயுமே ஹிட் அடிச்சது 'காக்கா முட்டை’. ஆனா, ரெண்டாவது படம் நீங்க பெரிய பட்ஜெட்ல பண்ணலை. ஏன்... அழைப்பு

இல்லையா... ஆசை இல்லையா?''
'' 'காக்கா முட்டை’ வெற்றி நிறையத் தயாரிப்பாளர்களை என்கிட்ட கொண்டுவந்தது. அப்படி வந்த யாரும், 'கமர்ஷியலா ஒரு வெற்றிப் படத்துக்குக் கதை சொல்லுங்க’ன்னோ, 'பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள கதை சொல்லுங்க’ன்னோ கேட்கலை. 'உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நல்ல சினிமாவுக்கான கதை சொல்லுங்க. பண்ணலாம்’னு கேட்டாங்க. 'குற்றமே தண்டனை’ அப்படியான நல்ல சினிமா. அதனால அதை இப்போ வெளியிடுறேன். ரெண்டு கதைகளை எழுதிட்டிருக்கேன். என் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்போதைக்கு இவ்வளவுதான் தகவல்!''
'' 'காக்கா முட்டை’யில் நடித்த பசங்க ரமேஷ், விக்னேஷ்... ரெண்டு பேரையும் வேற சினிமாவுல நடிக்கவிடாமல் தடுக்குறீங்கன்னு சொல்றாங்களே!''
''ஹா... ஹா... அப்படிச் சொல்றாங்களா! அவங்க இன்னும் ஸ்கூல் படிக்கிற பசங்க. என் படத்துல நடிச்சப்ப, அவங்க படிப்புக்குச் சிக்கல் இல்லாமப் பார்த்துக்கிட்டேன். ஆனா, 'காக்கா முட்டை’ வெற்றி அவங்களுக்கு திடீர் வெளிச்சம் தந்து பிரபல அந்தஸ்து கொடுத்திருச்சு. கொஞ்ச நாள் இப்படிக் கொண்டாடிட்டு அப்புறம் கண்டுக்காமவிடுற நம் சமூக அமைப்பின் சிக்கல் எல்லாம் அவங்களுக்கு இன்னும் புரியாத வயசு. அதுவும்போக அவங்க வாழ்க்கைச்சூழல்லயே நிறையப் பிரச்னைகள் இருக்கு. அவங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, அவங்களா விரும்பி முழு நேரமா சினிமாவுக்கு வந்தா... ஓ.கே. ஆனா, உலகம் புரியாம சினிமா பத்தி தெரியாம, நடுவுல இப்படிப் படிப்பைக் கெடுத்துக்கிட்டு அவங்க சினிமா பக்கம் வர்றது நல்லது கிடையாது. இதை முன்னாடியே அந்தப் பசங்களோட அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டேன். அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. 'பூமி’ என்ற அமைப்பு மூலம் அந்தப் பசங்களுக்கு ஒரு தொகையை பேங்க்ல போட்டுவெச்சிருக்கோம். அது கொடுக்கிற வட்டி, அவங்க வீட்டுச் செலவுகளுக்கு சரியா இருக்கும். பசங்களோட மேல் படிப்புச் செலவுகளை தனுஷ் ஏத்துக்கிட்டார். இதுக்கு நடுவுல நல்ல சினிமா வாய்ப்பு வந்தா, விடுமுறை நாட்களில் நடிப்பாங்க. அப்படி இப்போதைக்கு ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறாங்க. முறையான கல்வியும் பக்குவமான சினிமா பயிற்சியும் அவங்களுக்கு அவசியம்னு நினைக்கிறேன்.''

''முதல் படம் ஹிட் ஆனதும், வீடு, கார்னு வாங்கிருவாங்களே... நீங்க வாங்கிட்டீங்களா?''

''பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். இருந்தாலும், தரமான சினிமா மட்டுமே எடுக்கணுங்கிறது என் ஆசை. மத்தபடி 'காக்கா முட்டை’ வெற்றிக்குப் பிறகு என்னைக் காப்பாத்திக்கவே போராடவேண்டியிருக்கு. என் மனசுல ஓடிட்டிருக்கிற சின்னச்சின்னக் கதைகளை, எதுவும் சிதைச்சுடக் கூடாதுனு கவனமா இருக்கேன்!''