சினிமா
Published:Updated:

சிங்கப்பூர் காதல்!

சிங்கப்பூர் காதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கப்பூர் காதல்!

பா.ஜான்ஸன்

சிங்கப்பூர் காதல்!

`` `கிருஷ்ணவேனி பஞ்சாலை' படத்தை இயக்கினப்போ மனசு முழுக்க ஒரு சினிமா பண்ணணும்கிற வெறி இருந்தது. நான் நினைச்ச மாதிரி ஒரு படத்தை எடுக்கணும்கிற ஆசை, அதுக்குத் தகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. அந்தப் படம், நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்கள் மகேந்திரன் சார், பாரதிராஜா சார் எல்லோரிடம் இருந்தும் பாராட்டுக்களை வாங்கித் தந்தது. ஆனால், அது ரொம்பவே சீரியஸான படம். இந்த முறை அந்த சீரியஸ்னஸில் இருந்து விலகி ஒரு படம் இயக்கியிருக்கேன்... ரொம்ப காதலோடு, காமெடியோடு கொண்டாட்டத்தோடு. `பறந்து செல்லவா' பட எடிட்டிங் டேபிளில் இருந்து ட்ரெய்லர் ஓடவிடுகிறார் இயக்குநர் தனபால்.

``ட்ரெய்லரில் முழுக்க முழுக்க சிங்கப்பூர் நிரம்பியிருக்கிறதே?''

``இந்தக் கதை சிங்கப்பூரில் நடக்கிற கதை. அதனால்தான் முழுக்க முழுக்க சிங்கப்பூர்லயே எடுத்திருக்கோம். வேலை செய்றவங்களுக்கு சிங்கப்பூர் வேற மாதிரி இருக்கும். ஆனால், சுற்றுலா போறவங் களுக்கு அது செம ரொமான்டிக்கான இடம். குறிப்பா சிங்கப்பூர் பெண்கள் அவ்வளவு சுதந்திரமா இருக்கிறாங்க. பெண்கள் சுதந்திரமா இருக்கும் இடத்தில், காதலும் சுதந்திரமா இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிப் போற ஹீரோ, அங்கே சந்திக்கும் விஷயங்கள்தான் கதை. ஹீரோ எப்பவும் காதலைத் தேடிக்கிட்டே இருப்பான். அதை அவன் எப்படிக் கண்டுபிடிக்கிறான்கிறதைத்தான் படத்துல சொல்லியிருக்கோம். ஹீரோவாக நாசர் சாரின் இரண்டாவது மகன் பாஷா நடிச்சிருக்கார்.’’

``வழக்கமான ஒன்லைன்போல் இருக்கிறதே?''

``இப்போதைய இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்னையே வேறு. வாழ்க்கையை முழு எனர்ஜியோடு கொண்டாடுற இளைஞர்களும், நாம எதிர்பார்க்கவே முடியாத பிரச்னைகளோடு வாழக்கூடிய இளைஞர்களும் கலந்தே இருக்காங்க. நான் வாழ்க்கையில இருந்து கதைகள் எடுப்பதை ரொம்பவே விரும்புவேன். அப்படி ஓர் இளைஞனின் கொண்டாட்டமான, ஒரு சின்ன வாழ்க்கைப் பகுதிதான் படம். சரியான வேலை கிடைச்சு செட்டில் ஆகியாச்சுனு ஒரு ஃபீல் வர்றப்போ இருக்கும் பீரியட்தான் படத்தில் ஹீரோவுடையது. சிங்கப்பூர்ல வசிக்கும் தமிழ்ப் பெண் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோவின் நண்பர்களா சதீஷ், `ஆர்ஜே’ பாலாஜி, கருணாகரன்னு... மூணு பேரும் முக்கியமான ரோல்களில் நடிச்சிருக்காங்க. அவங்க வரும்போது எல்லாம் செம ரகளையான காட்சிகள் இருக்கும்.''

சிங்கப்பூர் காதல்!

``படத்தில் சீன நடிகை நரேல் கெங்கும் நடிச்சிருக்காங்களாமே?''

``இது ஒரு முக்கோணக் காதல் கதை. ஒரு தமிழ்ப் பையன், தமிழ்ப் பெண், ஒரு சீனப் பெண் இவங்களுக்குள் நடக்கும் காதல்னு படம் நகரும். சீனப் பெண்ணாக நரேல் நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் சுத்தமா தெரியாது. ஆனால், ஒரு சீன்ல அவங்க தமிழ்ப் பேசுற மாதிரி இருந்தது. சைனீஸ்ல டயலாக்கை எழுதிவெச்சுக்கிட்டுத் தடதடனு பேசிட்டாங்க.''

``தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி காமெடி படமா?''

``ஆரம்பத்தில் இருந்து கடைசி சீன் வரை உங்களைச் சிரிக்கவைக்கும் படம். எழுத்தாளர் பேயோன், படத்துக்கு வசனம் எழுதியிருக்கார். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி நகாசு நக்கல் எல்லாம் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.''

``முதல் படம் `கிருஷ்ணவேனி பஞ்சாலை’ எடுத்ததன் நோக்கம் நிறைவேறிடுச்சா?’’

`` `கிருஷ்ணவேனி பஞ்சாலை’ படத்துல எனக்குத் தோணின பல விஷயங்களைப் பேசியிருந்தேன். மேக்கிங்கில் சில குறைகள் இருந்தன. ஆனா, நிறைய நிஜங்களைப் பேசியிருந்தேன். சிலருக்கு அது பிடிக்காமல் போயிருக்கலாம். இந்த விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சேன்... சொல்லிட்டேன். அந்த விதத்தில் நோக்கமும் நிறைவேறிடுச்சு.’’